ரூ.10 லட்சம் கோடி கடன்.. விஜய் முன் இருக்கும் 2 சவால்கள்! நிபுணர்கள் காட்டும் வழி!
சென்னை: கடந்த ஆட்சிக் காலத்தில் தமிழ்நாடு நிறைய கடன் வாங்கி வைத்திருப்பதாக புதியதாக பொறுப்பேற்ற முதலமைச்சர் சி.ஜோசப் விஜய் குறிப்பிட்டிருந்தார். இருப்பினும் புதிய அரசால் கடன் வாங்காமல் ஆட்சியை நடத்த முடியாது. அப்படி எனில், அந்த கடனை விஜய் எப்படி சாமாளிக்க போகிறார்? கடனை எந்த வகையில் பயன்படுத்தினால் சரியாக இருக்கும்? என்பது குறித்து நிபுணர்கள் சில அறிவுறுத்தல்களை கொடுத்திருக்கின்றனர்.
தமிழ்நாட்டின் தற்போதைய மொத்த கடன் ரூ.10.71 லட்சம் கோடி. மாநிலத்தின் ஒட்டுமொத்த உற்பத்தி திறனுடன் ஒப்பிடுகையில் இந்த கடன் 26.12% என இருக்கிறது. இதில் கொஞ்சம் ஆசுவாசப்படக்கூடிய விஷயம் என்னவெனில், நிதி ஆணையம் ஒவ்வொரு மாநிலத்திற்கும் கடன் வரம்பை நிர்ணயித்திருக்கிறது. தமிழ்நாட்டிற்கு இந்த வரம்பு 28.70% ஆகும். அப்படியெனில் வரம்புக்குள் தான் நம்முடைய கடன் இருக்கிறது. எனவே பயப்பட வேண்டியதில்லை.

இரண்டு சிக்கல்கள்
இப்போது பிரச்சனை என்னவெனில், புதியதாக வாங்கும் கடன்தான். இதை எந்த வகையில் விஜய் தலைமையிலான அரசு பயன்படுத்தப்போகிறது? என்பதே தற்போதைய கேள்வி. நிபுணர்கள் இதற்கு இரண்டு வழிகளை காட்டுகின்றனர். இரண்டு வழிகளில் உள்ள சிக்கல்களையும் அவர்கள் விவரித்திருக்கிறார்கள்.
1. வருவாய் செலவினங்கள்
2. மூலதன செலவினங்கள்
வருவாய் செலவினங்கள்
இலவசங்கள், மானியங்கள் என மக்கள் நல திட்டங்களுக்காகவும், அரசு ஊழியர்களுக்கான ஊதியம், ஓய்வூதியம் மற்றும் பழைய கடன்களுக்கு வட்டி கட்டுவதற்காக கடன் செலவழிக்கப்பட்டால் அது வருவாய் செலவினங்கள் என்று அழைக்கப்படுகிறது.
மகளிர் உரிமை தொகை, விவசாயத்திற்கு வழங்கப்படும் மானியம், தமிழ் புதல்வன் மற்றும் புதுமைப்பெண் போன்ற கல்வி சார்ந்த நிதியுதவி ஆகியவற்றிற்கும் செலவு செய்வது இந்த வருவாய் செலவினங்கள் லிஸ்ட்டுக்குள் வரும். இதெல்லாம் அத்தியாவசியமான திட்டங்கள். இதை தவிர்க்க முடியாது. இருப்பினும் இதில் செய்யும் செலவு அரசுக்கு வருவாயாக மறுபடியும் வராது.
மூலதன செலவினங்கள்
மறுபுறம் பார்த்தால், உள்கட்டமைப்பை வளர்த்தெடுக்கவும் செலவு செய்ய வேண்டும். ரோடு வசதியே இல்லாத குக்கிராமங்களுக்கு சாலைகள் அமைப்பது, நெடுஞ்சாலைகளை பராமரித்தல், புதிய பாலங்கள், தொழிற்சாலைகள், துறைமுகங்கள், மின் உற்பத்தி நிலையங்கள், டேட்டா சென்டர்களை உருவாக்குவது இதெல்லாம் வருவாய் தரும் செலவினங்கள்.
அரசுக்கு வருவாய் தரும் செலவுகள்
தடையில்லா மின்சாரமும், சிறப்பான போக்குவரத்து வசதியும் இருக்கிறது எனில் சர்வதேச நிறுவனங்கள் போட்டி போட்டுக்கொண்டு தமிழ்நாட்டிற்கு வரும். இதன் மூலம் வேலை வாய்ப்பு அதிகரிக்கும். வேலைவாய்ப்பு வருமானத்தை உருவாக்கும். பணம் வந்தால் மக்கள் அதை செலவு செய்வார்கள். சொத்துக்களை வாங்குவார்கள். இந்த செலவின் மூலம் கிடைக்கும் வருவாய் அரசுக்கு லாபத்தை கொடுக்கும்.
விஜய்யின் வாக்குறுதிகள்
இருப்பினும் இது உடனடியாக நடக்காது. உள்கட்டமைப்பை மேம்படுத்த சில காலம் எடுக்கும். அது பலன் கொடுக்க இன்னும் கொஞ்சம் நேரம் எடுக்கும். எனவே, அரசு இரண்டு பக்கமும் சரிசமமாக செலவு செய்ய வேண்டும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
விஜய் தனது தேர்தல் அறிக்கையில், பெண்களுக்கு மாதம் ரூ.2,500 உரிமைத் தொகை, வேலையில்லா இளைஞர்களுக்கு மாதம் ரூ.4000 உதவித்தொகை, ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஆண்டுக்கு 6 இலவச சிலிண்டர்கள், ஆய்வு பட்டம் வரை பினையில்லா கடன், பெண்களுக்கு மாநிலம் முழுவதும் கட்டணமில்லா பேருந்து பயணம், திருமணத்திற்கு 1 சவரன் தங்கம் மற்றும் பட்டு சேலை, பிறக்கும் குழந்தைகளுக்கு தங்க மோதிரம் என வாக்குறுதிகளை அள்ளி வீசியிருக்கிறார்.
நிபுணர்களின் அட்வைஸ்
இதையெல்லாம் செயல்படுத்த குறைந்தது ரூ.1 லட்சம் கோடியாவது ஆகும். அந்த தொகையை எப்படி திரட்ட போகிறார்? வாங்கும் கடனை இதற்காக செலவழிக்கிறார் எனில், ஒரே ஆண்டில் தமிழ்நாட்டின் மொத்த கடனும் ரூ.22 லட்சம் கோடியாக அதிகரிக்குமே! எனவே விஜய் எதிர்கால திட்டங்களில் அதிக முதலீட்டையும், அத்தியாவசிய திட்டங்களை நிறுத்தாமலும் தொடர வேண்டும் என்று நிபுணர்கள் அட்வைஸ் செய்திருக்கின்றனர்.














Click it and Unblock the Notifications