விஜய் தவறவிட்ட அந்த வாய்ப்பு.. பவன் கல்யாண் ஃபார்முலா ஏன் முக்கியம்? தவெக 2ம் ஆண்டு தொடக்க விழா!
சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தின் 2ஆம் ஆண்டு தொடக்க விழா மாமல்லபுரம் அருகே பூஞ்சேரி கிராமத்தில் நடந்து வருகிறது. நடிகர் விஜய் தொடங்கிய தமிழக வெற்றிக் கழகம் ஓராண்டை நிறைவு செய்துள்ள நிலையில், அரசியலில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியதா என்ற கேள்வி எழுந்துள்ளது. ரசிகர் மன்றமாக இருந்து மக்கள் இயக்கமாக மாற்றப்பட்டு தற்போது அரசியல் கட்சியாக உருவாகி இருக்கிறது.
இந்த ஓராண்டில் விக்கிரவாண்டி மாநாடு, பரந்தூர் விமான நிலைய திட்டத்திற்கு எதிராக போராடிய மக்களை சந்தித்து ஆதரவளித்தது, அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழா ஆகிய 3 நிகழ்ச்சிகளில் மட்டுமே விஜய் பங்கேற்றுள்ளார். அதேபோல் தவெக நிர்வாகிகளை நியமனம் செய்து கட்சிப் பணிகளை மேற்கொண்டுள்ளார்.

ஆளுங்கட்சியான திமுகவை அரசியல் எதிரியாகவும், மத்தியில் ஆளும் சித்தாந்த எதிரியாக பாஜகவையும் அறிவித்து, 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு விஜய் தயாராகி வருகிறார். விஜய் அரசியல் பயணம் குறித்து முன்னாள் முதலமைச்சர்களான அண்ணாதுரை, எம்ஜிஆர் ஆகியோரின் வாழ்க்கை வரலாற்றை எழுதிய ஆர்.கண்ணன் பேசுகையில், விக்கிரவாண்டி மாநாட்டிற்கு பின் தவெகவிற்கு மக்கள் மத்தியில் கிடைத்த ஆதரவை விஜய் பயன்படுத்தி இருக்க வேண்டும்.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தவெக சார்பாக வேட்பாளரை நிறுத்தி தேர்தல் முடிவை பற்றி கவலைப்படாமல் இரு வாரங்கள் வீடு வீடாக சென்று தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு உழைத்திருந்தால், தான் ஒரு பலமான அரசியல் கட்சி என்று நிறுவி இருக்க முடியும். இதனால் தவெகவின் வலிமை என்னவென்று தெரியாமல் இருக்கிறது. சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் 14 மாதங்களே உள்ளது.
இந்த காலகட்டத்தில் தவெக தலைவர் விஜய் அரசியலில் முழு உழைப்பை கொடுத்து, தனது சிந்தனைகளையும், கட்சியையும் மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்க வேண்டும். அதுமட்டுமல்லாமல் கட்சி நிர்வாகிகளோடு பொதுமக்களையும் சந்தித்து தொடர்ந்து உரையாட வேண்டும். அதேபோல் விஜய் தனது பலம் குறித்து அறிவதற்கு தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள வேண்டும்.
அது அவருக்கு சட்டமன்றத் தேர்தலிலுக்கும் உதவியாக இருக்கும். அதேபோல் ஒரு வலிமையான கூட்டணியை உருவாக்க விஜய் சிந்திக்க வேண்டும். ஆந்திராவில் எப்படி நடிகராக இருந்து அரசியலில் ஈடுபட்டு வரும் பவன் கல்யாணை விஜய் பின் தொடர வேண்டும் என்று தெரிவித்துள்ளார். அதேபோல், தவெகவில் கட்டமைப்பை வலுப்படுத்த வேண்டும். ஒவ்வொரு தொகுதியில் பூத் கமிட்டி அமைக்க வேண்டும்.
எம்ஜிஆர் அதிமுகவை தொடங்கிய போது, பூத் கமிட்டி அளவில் நிர்வாகிகளுக்கு பயிற்சியை அளித்தார். அதுதான் அதிமுக ஓராண்டிற்குள் பூத் கமிட்டி அமைக்கும் அளவிற்கு வலிமையான கட்டமைப்பை உருவாக்கியது. பூத் கமிட்டியை வலுப்படுத்துவதே கட்சி நிர்வாகிகள் மத்தியில் பொறுப்புணர்வை அதிகரிக்கும்.
அதுமட்டுமல்லாமல் அரசியல் ரீதியான மாநிலம் தழுவிய பிரச்சனைகளில் மட்டும் தவெக கவனம் செலுத்தாமல் சாமானிய மக்கள் சந்திக்கும் பிரச்சனைகளில் கவனம் செலுத்த வேண்டும். எந்த நிலையில் கட்சியின் கொள்கைகளில் இருந்து விலகி சென்றுவிடக் கூடாது. அதனால் கொள்கையில் தெளிவு இருக்க வேண்டும். எந்த திட்டம் வந்தாலும், தங்களின் கொள்கை மூலம் அணுகும் தெளிவும் சிந்தனையும் இருக்க வேண்டும்.
இன்னொரு முக்கியமான விஷயம் என்னவென்றால், விஜய் கட்சி அலுவலகத்தில் இருந்து வெளியில் வந்து மக்களையும், பத்திரிகையாளர்களையும் சந்திக்க வேண்டும். ஏனென்றால் ஊடகங்களிடம் தொடர்ச்சியாக பேசுவது மிக முக்கியமான ஒன்று. அதன் மூலம் பல்வேறு விஷயங்களில் தங்களின் கருத்தை கூற மக்களை சென்றடைய வைக்க முடியும் என்று தெரிவித்துள்ளார்.
அதேபோல் கொள்கைபரப்பு செயலாளர் ராஜ்மோகன் பேசுகையில், விஜய்-ன் அரசியல் தொடங்கி ஓராண்டு மட்டுமே ஆகியுள்ளது. ஆனால் நலத்திட்ட உதவிகளை விஜய் மக்கள் இயக்கம் மூலமாக தொடர்ந்து செய்து வருகிறார். இலங்கை தமிழர்களுக்காக உண்ணாவிரதம் இருந்திருக்கிறார். தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்துள்ளார்.
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயத்தால் உயிரிழந்த குடும்ப உறுப்பினர்களை சந்தித்துள்ளார். இனி வரும் காலங்களில் நிச்சயம் விஜய் ஒவ்வொரு விஷயத்தில் களத்தில் இருப்பார். தமிழக வெற்றிக் கழகம் ஒரு இலக்கை நோக்கியும் பயணித்து வருகிறது. சாமானிய மக்களை சந்தித்து அவர்களின் பிரச்சனைகளுக்காக களத்தில் நிற்பதே தங்களின் கொள்கை என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications