2026 தான் டார்கெட்.. விக்கிரவாண்டியில் போட்டியில்லை..யாருக்கும் ஆதரவும் இல்லை! தவெக விஜய் அறிவிப்பு
சென்னை: வருகிற ஜூலை 10ஆம் தேதி நடைபெற உள்ள விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில், தமிழக வெற்றிக் கழகம் போட்டியிடாது என்றும், எந்தக் கட்சிக்கும் ஆதரவு இல்லை என அக்கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கூறியுள்ளார்.
கடந்த மக்களவைத் தேர்தலின் போது தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினுடன் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த விக்கிரவாண்டி எம்எல்ஏ புகழேந்தி திடீரென மயக்கம் அடைந்து கீழே விழுந்தார். இதை அடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயர்ந்தார்.

இதன் காரணமாக விக்கிரவாண்டி தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து அங்கு ஜூலை 10ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது.
ஒரு மாதத்திற்கு உள்ளாகவே தேர்தல் அறிவிக்கப்பட்டதால் அரசியல் கட்சிகள் பரபரப்பில் உள்ளனர். அதே நேரத்தில் முதல் கட்சியாக திமுக தேர்தலில் போட்டியிடும் என்றதோடு வேட்பாளராக அன்னியூர் சிவாவையும் அறிவித்தது. இதேபோல நாம் தமிழர் கட்சி சார்பில் அபிநயாவும், பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் சி அன்புமணியும் போட்டியிடுவார்கள் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதனையடுத்து தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், பிரசாரமும் தொடங்கியுள்ளது.
இந்த நிலையில் தான் விக்கிரவாண்டி இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்திருக்கிறார் அதிமுக பொதுச்செயலாளரும் தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிச்சாமி. இதே போல் வருகிற ஜூலை 10ஆம் தேதி நடைபெற உள்ள விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில், தமிழக வெற்றிக் கழகம் போட்டியிடாது என்றும், எந்தக் கட்சிக்கும் ஆதரவு இல்லை என அக்கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,"தமிழக வெற்றிக் கழகத் தலைவர். தளபதி விஜய் அவர்கள், கடந்த பிப்ரவரி மாதம் 2ஆம் தேதி வெளியிட்ட கட்சித் தொடக்க அறிவிப்பிற்கான முதல் அறிக்கையிலேயே. எங்கள் கழகத்தின் அரசியல் நிலைப்பாடு குறித்துத் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார்.
கழகத் தலைவர் அவர்கள், விரைவில் கழகத்தின் கொள்கைகள், கோட்பாடுகள் மற்றும் செயல்திட்டங்களைத் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாட்டில் வெளியிட்டு, அதன் தொடர்ச்சியாகக் கழக உள்கட்டமைப்பு சார்ந்த பணிகள், தமிழகம் முழுவதும் மக்கள் சந்திப்புப் பயணங்கள் என்று, வரும் 2026ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றப் பொதுத் தேர்தலுக்கான ஆயத்தப் பணிகளை மேற்கொண்டு, தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று. மக்கள் பணியாற்றுவது தான் நமது பிரதான இலக்கு என்று ஏற்கெனவே தெரிவித்துள்ளார்.
எனவே, அதுவரை இடைப்பட்ட காலத்தில் நடத்தப்படும் உள்ளாட்சித் தேர்தல் உள்பட எந்தத் தேர்தலிலும் தமிழக வெற்றிக் கழகம் போட்டியிடாது என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன். குறிப்பாக, வருகிற ஜூலை 10ஆம் தேதி நடைபெற உள்ள விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில், தமிழக வெற்றிக் கழகம் போட்டியிடாது என்றும், எந்தக் கட்சிக்கும் ஆதரவு இல்லை என்றும், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் தெரிவித்துக்கொள்கிறேன்." என கூறியுள்ளார்.
அறிக்கையில் குறிப்பிட்டுள்ள படி நடிகர் விஜய் தனது கட்சி 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் என்றும் அதுவரை எந்த தேர்தலிம் போட்டியிடாது என கூறியிருந்தார். ஆனால் அதற்கு முன்னதாக நடைபெற்ற உள்ளாட்சி தேர்தல்களில் விஜய் மக்கள் இயக்க கொடிகளோடு அவர்களது ரசிகர்கள் களமிறங்கி, ஒரு சில இடங்களில் வெற்றி பெற்றதும் குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications