மறுபடியும் முதல்ல இருந்தா! விஜய் கட்சி மாநாட்டுக்கு அனுமதி மறுப்பு? விழுப்புரம் காவல்துறை விளக்கம்
சென்னை : விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநில மாநாட்டுக்கு போலீசார் அனுமதி மறுத்ததாக தகவல் வெளியானதால் அக்கட்சியினர் அதிர்ச்சி அடைந்தனர். இந்த நிலையில் அப்படி எதுவும் இல்லை என விளக்கம் அளித்துள்ளது விழுப்புரம் மாவட்ட காவல் துறை. இதை அடுத்து தீயணைப்புத்துறை, மின்வாரியம் உள்ளிட்ட துறைகளில் அனுமதியை பெறும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர் தமிழக வெற்றி கழகத்தினர்.
சினிமாவில் எப்படி ஆரம்பத்தில் பல்வேறு எதிர்ப்புகளையும் விமர்சனங்களையும் எதிர்கொள்ள வேண்டி இருந்ததோ, அதேபோல தற்போது அரசியலிலும் கடுமையான எதிர்ப்புகளையும் விமர்சனங்களையும் சந்தித்து வருகிறார் விஜய்.

தற்போதைக்கு சினிமாவின் நம்பர் ஒன் வசூல் நாயகனாக பார்க்கப்படும் அவர் அரசியலில் குதிப்பதாக அறிவித்ததோடு, கட்சியின் பெயரையும் அறிவித்தார்.
இந்த நிலையில் 2026 சட்டமன்றத் தேர்தலை முன்வைத்து அரசியலில் குதித்துள்ள விஜய், தொடர்ந்து தனது கட்சியின் முதல் மாநில மாநாட்டை விக்கிரவாண்டியில் நடத்த இருக்கிறார். ஏற்கனவே பல இடங்களில் இடம் பார்த்து போதிய இடம் அமையாத நிலையில் இறுதியாக விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே வி சாலை பகுதியில் தனியாருக்குச் சொந்தமான 180 ஏக்கர் நிலப்பரப்பில் மாநாடு நடத்தப்பட இருக்கிறது.
செப்டம்பர் 23ஆம் தேதியே மாநாடு நடக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பல்வேறு பிரச்சனைகளால் மாநாடு அக்டோபர் 27ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. கடந்த முறை மாநாடு தொடர்பாக எந்த விதமான அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் விஜய் வெளியிடாத நிலையில், அக்டோபர் 27ஆம் தேதி மாநாடு நடைபெறும் என அவரே அறிவித்தார். இதை அடுத்து தான் மாநாடு தொடர்பாக உற்சாகமாக பணியாற்றி வருகின்றனர் தமிழக வெற்றி கழகத்தினர்.
இந்த நிலையில் ஏற்கனவே மாநாடு தொடர்பாக 21 கேள்விகளை விழுப்புரம் மாவட்ட காவல்துறை கேட்டிருந்தது.அதற்கு முறையாக கட்சி சார்பிலும் பதில் அளிக்கப்பட்ட நிலையில் மாநாட்டுக்கு அனுமதி வழங்கப்பட்டது. இந்த நிலையில் தீபாவளிக்கு நான்கு நாட்கள் முன்னதாக மாநாடு நடக்க இருக்கும் நிலையில் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறப்பட்டது. இதனால் விழுப்புரம் மாவட்ட காவல் துறையினர் விஜய் கட்சி மாநாட்டுக்கு அனுமதி அளிக்கவில்லை என தகவல் பரவியது.
இதனால் கட்சி நிர்வாகிகளும் தொண்டர்களும் கடும் அதிருப்தி அடைந்தனர். இந்த நிலையில் விஜயின் கட்சி மாநாட்டுக்கு அனுமதி மறுக்கப்படவில்லை என விழுப்புரம் மாவட்ட காவல்துறை விளக்கம் அளித்து இருக்கிறது. மாநாடு தொடர்பாக உரிய விதிகளை பின்பற்றி விண்ணப்பித்திருந்த நிலையில் காவல்துறை கொடுத்த அறிவுறுத்தல்களை பின்பற்றுவதாக தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள் உறுதி அளித்திருக்கின்றனர். அதனால் மாநாட்டுக்கு காவல்துறை சார்பில் எவ்வித தடையும் விதிக்கப்படவில்லை என விளக்கம் அளிக்கப்பட்டு இருக்கிறது.
இந்த தகவலால் உற்சாகம் அடைந்திருக்கின்றனர் தமிழக வெற்றி கழகத்தினர். காவல்துறை அனுமதி வழங்கப்பட்டிருந்தாலும் வருவாய்த்துறை, பொதுப்பணித்துறை, தீயணைப்புத்துறை, மின்சாரத்துறை என பல்வேறு துறைகளில் அனுமதியை பெற வேண்டி உள்ளது. மேலும் மாநாடு நடக்கும் இடத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்ய வேண்டி இருப்பதால் அனைத்து துறைகளின் அனுமதியை பெற நிர்வாகிகள் தீவிரம் காட்டி வருகின்றனர். இதற்காக வழக்கறிஞர் அணி உள்ளிட்ட பல்வேறு அணி நிர்வாகிகளும் பல்வேறு அரசு துறை அதிகாரிகளை அணுகி அனுமதி பெறும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இதனால் எவ்வித சிக்கலும் இன்றி மாநாடு நடக்கும் என்கின்றனர் அக்கட்சியினர்.












Click it and Unblock the Notifications