தவெக மாநாட்டுக்கு என்னென்ன ஏற்பாடுகள்..யார் யார் வருவாங்க? 21 கேள்விகளை கேட்கும் விழுப்புரம் போலீஸ்!
சென்னை: தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாட்டை விக்கிரவாண்டி வி-சாலை பகுதியில் நடத்துவதற்கான ஏற்பாடுகளை அக்கட்சியினர் மேற்கொண்டு வருகின்றனர். வரும் 23ஆம் தேதி மாநாடு நடக்கவுள்ளதாகக் கூறப்படும் நிலையில், விஜய் இதுவரை தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவிக்காததால் தொண்டர்கள் குழப்பத்தில் உள்ளனர். இந்த நிலையில் மாநாட்டிற்கு பாதுகாப்பு, குடிநீர், ஆம்புலன்ஸ் உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டு இருக்கிறதா? என 21 கேள்விகளை கேட்டு அதற்கு பதில் அளிக்க வேண்டும் என தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்துக்கு விழுப்புரம் காவல்துறை கடிதம் அனுப்பியுள்ளது.
பெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையே நடிகர் விஜய்யின் தமிழக வெற்றுக் கழகத்தின் முதல் மாநாடு விக்கிரவாண்டி அருகே வி.சாலை பகுதியில் நடக்க இருப்பதை அக்கட்சி நிர்வாகிகள் உறுதி செய்திருக்கின்றனர்.

டோல்கேட் அருகே மாநாடு நடத்த அனுமதிக்க வேண்டுமென அக்கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மனு அளித்திருக்கிறார். செப்டம்பர் 23ஆம் தேதி மாநாடு நடக்கும் எனவும் அதற்கு காவல்துறை உரிய பாதுகாப்பு மற்றும் அனுமதி வழங்க வேண்டும் என விழுப்புரம் காவல்துறையிடம் மனு அளிக்கப்பட்டிருக்கிறது.
செப்டம்பர் 23ஆம் தேதி வி.சாலை கிராமத்தில் மாநாடு நடத்த திட்டமிட்டு அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. சுமார் 85 ஏக்கர் நிலப்பரப்பு வாடகைக்கு எடுக்கப்பட்டு சுமார் ஒன்றரை லட்சம் பேர் பங்கேற்கும் வகையில் ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. தமிழ்நாடு முழுவதும் இருந்து கட்சியினர் வருவார்கள் என்பதால் அதற்காக பார்க்கிங், உணவு உள்ளிட்ட பல்வேறு வசதிகளும் செய்யப்பட இருக்கிறது.
பார்க்கிங்கு மட்டுமே சுமார் 60 ஏக்கர் நிலம் வாடகைக்கு எடுக்கப்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டின் தென் பகுதிகளில் இருந்து வரும் வாகனங்கள் தேசிய நெடுஞ்சாலையில் இடது புறம் உள்ள சுமார் 28 ஏக்கர் நிலப்பரப்பில் பார்க்கிங் செய்யப்பட இருக்கின்றன. வட மாவட்டங்களில் இருந்து வரும் வாகனங்களை நிறுத்த நாற்பது ஏக்கர் நிலப்பரப்பு வலது புறம் வாடகைக்கு பெறப்பட்டிருக்கிறது. மேலும் டூவீலர் பார்க்கிங்கு மட்டும் சுமார் ஐந்து ஏக்க நிலப்பரப்பு வாடகைக்கு எடுக்கப்பட்டு இருக்கிறது.
இந்த நிலையில் விஜய் மாநாட்டுக்கு காவல்துறையினர் அனுமதி அளிப்பதில் சிக்கல் இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இது தொடர்பாக காவல்துறையினர் நீண்ட ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். தவெக மாநாடு நடக்குமிடம் விக்ரவாண்டி டோல்கேட் பகுதியில் இருந்து குறைந்த தூரத்தில் தான் இருக்கிறது. வழக்கமாக விடுமுறை நாட்கள் வார இறுதி நாட்களில் விக்கிரவாண்டி டோல்கேட் மிகவும் போக்குவரத்து நெரிசலோடு காணப்படும். கிலோமீட்டர் கணக்கில் வாகனங்கள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படும்.
அப்படி விஜய் மாநாடு நடத்தினால் விக்கிரவாண்டி டோல்கேட் பகுதியில் சுமார் 10 கிலோமீட்டருக்கு மேல் போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்பிருப்பதாக போலீசார் நினைக்கின்றனர். அது மட்டும் இல்லாமல் மாநாட்டில் இருந்து 100 மீட்டர் தொலைவில் தான் தேசிய நெடுஞ்சாலை வருகிறது. இதன் காரணமாக சென்னை விழுப்புரம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து அதிக அளவு வாகனங்கள் வரும்போது பல மணி நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்படலாம் என கூறப்படுகிறது.
இந்நிலையில் விக்கிரவாண்டியில் மாநாடு நடத்துவது தொடர்பாக தமிழக வெற்றி கழகத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்துக்கு விழுப்புரம் டிஎஸ்பி பார்த்திபன் 21 கேள்விகள் கேட்டு கடிதம் எழுதியிருக்கிறார். அதில்," 1. தாங்கள் கொடுத்துள்ள பார்வையில் கண்ட 28.08.2024 ஆம் தேதியிட்ட மனுவில் மாநாடு நடைபெறும் நேரம் குறிப்பிடப்படவில்லை, எனவே, மாநாடு எந்த நேரம் தொடங்கி எந்த நேரம் முடிக்கப்படும்?.
2. மாநாட்டின் நிகழ்ச்சி நிரல் விபரம்?
3. தாங்கள் 23.09.2024 அன்று மாநாடு நடத்த திட்டமிட்டுள்ள இடத்தின் உரிமையாளர்களிடம் அனுமதி பெறப்பட்டுள்ளதா? யார் அவர்களிடம் முறையாக அனுமதி பெற்றது?
4. மாநாட்டில் கலந்து கொள்ளும் முக்கிய நபர்களின் பெயர் பட்டியல்.
5. மாநாடு மேடையின் அளவு என்ன? எத்தனை நாற்காலிகள் மேடையில் போடப்பட உள்ளன? மேடையில் பேசவுள்ள நபர்களின் பெயர் விபரம்..
6. மாநாட்டில் கலந்து கொள்ளும் நபர்களுக்கு எவ்வளவு நாற்காலிகள் போடப்படவுள்ளன.
7. மாநாட்டில் வைக்கப்படவுள்ள பேனர்கள் எண்ணிக்கை மற்றும் அலங்கார வளைவுகளின் விபரம்.
8. மாநாடு ஏற்பாடு செய்யும் நபர்கள் மற்றும் பந்தல், ஒலிபெருக்கி மற்றும் இதர ஒப்பந்ததாரர்கள் விபரம்.
9. மாநாட்டில் எத்தனை நபர்கள் கலந்து கொள்வார்கள்? அதில் ஆண்கள், பெண்கள், முதியவர்கள் மற்றும் குழந்தைகளின் விபரம்.
10. மாநாட்டில் கலந்து கொள்ளும் நபர்கள் எந்தெந்த மாவட்டத்திலிருந்து வருவார்கள்? யாருடை தலைமையில் வருவார்கள்? அதில் ஆண்கள், பெண்கள், முதியவர்கள் மற்றும் குழந்தைகளின் விபரம் மற்றும் அவர்கள் வரும் வாகனங்களின் வகை மற்றும் எண்ணிக்கை? (இருச்சக்கர வாகனங்கள், கார்கள், வேன்கள் மற்றும் பேருந்துகள் விபரம்).
11. மாநாட்டிற்கு வரும் வாகனங்கள் நிறுத்த ஏற்பாடு செய்யப்படுள்ளதா? அந்த இடத்தின் உரிமையாளர் யார்? அவரிடம் அனுமதி பெறப்பட்டுள்ளதா?
12. மாநாட்டில் வாகனங்கள் நிறுத்துமிடங்களில் பாதுகாப்பு பணிக்கு தனியார் பாதுகாவலர்கள் அல்லது தன்னார்வாளர்கள் ஈடுபடுத்தப்படுவார்களா? அவர்களின் பெயர் விபரம் மற்றும் சீருடை விபரம்?
13. மாநாட்டில் கலந்து கொள்ளும் பெண்கள், குழந்தை மற்றும் முதியவர்களுக்கு பாதுகாப்பு வசதிகள் செய்யப்படவுள்ள விபரம்.
14.மாநாட்டில் கலந்து கொள்ளும் நபர்களுக்கு செய்யப்படவுள்ள அடிப்படை வசதிகளின் விபரம் மற்றும் வழங்கப்படும் குடிதண்ணீர், பாட்டில் வகையா? அல்லது தண்ணீர் டேங்க் மூலமாகவா? (குடிநீர், கழிப்பிடம்... இதர.,)
15. மாநாட்டிற்கு வரும் நபர்களுக்கு உணவு, பொட்டலங்கள் மூலம் விநியோகிக்கப்படவுள்ளதா? அல்லது மாநாடு நடைபெறும் இடத்தின் அருகே சமையற்கூடம் மூலம் சமைத்து விநியோகிக்கப்படவுள்ளதா.?
16. மாநாட்டில் தீவிபத்து தவிர்க்கும் வகையில் பாதுகாப்பு செய்யப்படவுள்ள விபரம்..
17. மாநாட்டில் கலந்து கொள்ளும் நபர்களுக்கு மருத்துவ வசதிகள் ஏற்பாடு செய்யப்படவுள்ளதா அவ்வாறு செய்யப்பட இருப்பின் மருத்துவக் குழு மற்றும் ஆம்புலன்ஸின் விபரங்கள்..
18. மாநாட்டில் கலந்து கொள்ள வரும் நபர்கள் உள்ளே மற்றும் வெளியே செல்லும் வழித் தடங்கள் எத்தனை?
19. கட்சியின் தலைவர் மற்றும் முக்கிய நபர்கள் விழா மேடைக்கு செல்லும் வழித்தடம் பற்றிய விபரம்..
20. மாநாட்டிற்கு வரும் வாகனங்கள் நிறுத்தும் ஒவ்வொரு இடத்திற்கு உள்ளே மற்றும் வெளியே செல்லும் வழித் தடங்கள் எத்தனை?
21. மாநாட்டிற்கு பயன்படுத்தப்படும் மின்சாரம் எங்கிருந்து பெறப்படுகிறது? அதற்கான அனுமதி விபரம்.." ஆகிய 21 கேள்விகளை கேட்டு அனுப்பப்பட்டு இருக்கிறது. இது வழக்கமான நடைமுறை தான் என்றாலும், இதற்காக அவர்கள் அளிக்கும் பதிலை பொறுத்து மாநாட்டுக்கான அனுமதி கிடைக்கும் என கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications