பாஜகவே யோசிக்காத 'வியூகம்'.. எதிர்ப்பவரையே 'நண்பன்' ஆக்கினால்.. அப்படிப்போடு அருவாள
சென்னை: துறைமுகம் தொகுதி பாஜக வேட்பாளர் வினோஜ் செல்வம், தனது வெற்றியை உறுதி செய்ய தனி டிராக் அமைத்து செயல்பட்டு வருகிறார் என்கிறது கள நிலவரம்.
சென்னை துறைமுகம் தொகுதி ஒரு பக்கா 'விஐபி' தொகுதியாகும். திமுக தலைவர் மு.கருணாநிதி, பொதுச்செயலர் க.அன்பழகன் ஆகியோர் போட்டியிட்டு வென்ற தொகுதி இது.
அதேசமயம், சென்னை மாவட்டத்திலேயே மிக குறைவான வாக்காளர்களைக் கொண்ட இத்தொகுதியில் இஸ்லாமியர்களும், மார்வாடிகளும் அதிக அளவில் வசிக்கின்றனர்.
தகர்த்த அதிமுக
இத்தொகுதியில் 1977 முதல் 2006 வரை தொடர்ந்து 8 முறை திமுக மட்டுமே வென்றுள்ளது. 2011 தேர்தலில் அந்த ரெக்கார்டை அதிமுக தகர்த்தது. இப்போது கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யத்துடன் ஐக்கியமான பழ.கருப்பையா, அதிமுக சார்பில் போட்டியிட்டு வென்றார். அப்போது திமுகவுக்கு எதிராக வீசிய தேர்தல் அலை துறைமுகத்தையும் புரட்டிப் போட்டது. பிறகு 2016-ல் மீண்டும் திமுக தொகுதியை கைப்பற்றியது. பி.கே.சேகர் பாபு தான் இங்கு சிட்டிங் எம்.எல்.ஏ.
சவால் கிடையாது
இந்த நிலையில், எதிர்வரும் தேர்தலில் இத்தொகுதியை தங்கள் கூட்டணியில் இடம்பெற்றிருக்கும் பாஜகவுக்கு ஒதுக்கியது அதிமுக. பாஜகவின் மாநில இளைஞரணிச் செயலாளர் வினோஜ்.பி.செல்வம் இங்கு போட்டியிடுகிறார். திமுக சார்பில் சேகர் பாபுவே மீண்டும் களம் காண்கிறார். இத்தொகுதியில் செல்வாக்கு உள்ள சேகர் பாபுவுக்கு, வினோஜ் செல்வம் பெரிய சவாலாக இருக்க வாய்ப்பில்லை என்றே கூறப்படுகிறது.
அதுவே வியூகம்
ஆனால், இளைஞரான வினோஜ் செல்வம், தொகுதியில் பாஜகவின் பலம், பலவீனம் அறிந்து அதற்கேற்ப காய்களை நகர்த்தி வருகிறாராம். இத்தொகுதியில் அதிக அளவில் முஸ்லீம்களும், மார்வாடிகளும் வசித்து வரும் சூழலில், முஸ்லீம் இளைஞர்களை டார்கெட் செய்வது தான் வினோஜின் வியூகம் என்கின்றனர். அதாவது, பாஜகவை வீழ்த்த எந்த அஸ்திரத்தை திமுக பயன்படுத்துகிறதோ, அதே அஸ்திரத்தை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்வது தான் வியூகமாம். இதற்கு, தானும் ஒரு இளைஞர் என்ற அந்தஸ்தே போதும் என்கிறாராம்.
படு பிராக்டிக்கலாக...
துறைமுகம் தொகுதியில் அதிகம் வசிக்கும் இஸ்லாமிய இளைஞர்களை சந்திக்கும் வினோஜ், 'நாமும் எல்லோரையும் போல பேசியதையே பேசிக் கொண்டிருக்கக் கூடாது. நாம் இளம் இரத்தங்கள்..எது சரி, எது தவறு என்பதை பகுப்பாய்வு செய்து யாருக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்பதை முடிவு செய்ய வேண்டும்" என்ற ரீதியில் படு பிராக்டிக்கலாக கன்வின்ஸ் செய்து வருகிறாராம்.
மாலை அணிவித்து
இதன் ஒருபகுதியாக, துறைமுகம் பகுதிகளில் இஸ்லாமியர்கள் திரளாக வசிக்கும் பகுதிக்கு சென்ற வினோஜ் செல்வம், அங்கு ஒவ்வொரு வீட்டிற்கும் தனித்தனியாக சென்று ஆதரவு கோரியிருக்கிறார். அப்போது அவருக்கு மாலை அணிவித்து, டீ கொடுத்து இஸ்லாமியர்கள் வரவேற்பு கொடுத்திருக்கின்றனர். அப்போது. 'இஸ்லாமியர்களுக்கு எப்போதும் பாஜக - அதிமுக கூட்டணி ஆதரவாக இருக்கும்' என்று கூறி வாக்கு சேகரித்திருக்கிறார்.
பாஜக போடும் ஓட்டையா?
திமுக இதையெல்லாம் பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை என்றாலும், பாஜக இஸ்லாமிய இளைஞர்களை குறி வைத்து ஆதரவு சேகரிப்பதை அவ்வளவு எளிதாக எடுத்துக் கொள்ள வேண்டாம் என்ற ஒரு எச்சரிக்கையும் திமுக வேட்பாளருக்கு கொடுக்கப்பட்டுள்ளதாம். அதுமட்டுமின்றி சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேசிய வினோஜ் செல்வம், "திமுகவின் கோட்டை என்று கூறப்படும் துறைமுகம் தொகுதியில் 'பாஜக போட்ட ஓட்டை 'என்று தலைப்புச் செய்தி வரும்" என்று அளவுக்கு மீறி கான்ஃபிடன்ட்டாக பேசியதையும் சாதாரணமாக எடுத்துக் கொள்ள வேண்டாம் என்று உஷார் படுத்தப்பட்டுள்ளதாம்.