சென்னை கார் டிரைவருக்கு 4.70 கோடி ஜிஎஸ்டி வரி நோட்டீஸ்! ஆதார் கார்டு மோசடியால் வினை! எமோஷனல் புகார்
சென்னை: ஜிஎஸ்டி பில்லை பார்த்ததுமே வேலூர் கார் டிரைவர் மிரண்டுபோய்விட்டார்.. வாழ்வாதாரத்துக்காக பிழைப்பு நடத்தி வரும் அந்த டிரைவருக்கு ஜிஎஸ்டி பில்லை பார்த்ததுமே ரத்த அழுத்தமே எகிறிவிட்டது. "நீங்கள் 4.70 கோடி ரூபாய் ஜிஎஸ்டி வரி கட்ட வேண்டும்" என்று அந்த அரசு கடிதம் வந்துள்ளது. இந்த விசித்திரமான மற்றும் அதிர்ச்சிகரமான சம்பவம், தற்கால டிஜிட்டல் உலகில் நமது அடையாள ஆவணங்கள் எவ்வளவு ஆபத்தான நிலையில் உள்ளன என்பதைப் பட்டவர்த்தனமாகத் தோல் உரித்துக் காட்டியுள்ளது. என்ன நடந்தது?
வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியைச் சேர்ந்தவர் கமல்நாதன். 36 வயதான இவர், கடந்த பத்து ஆண்டுகளாக சென்னை திருவேற்காடு அருகே உள்ள புளியம்பேடு பகுதியில் தனது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் வசித்து வருகிறார்.

வேலூர் கார் டிரைவர்
வாடகைக் கார் ஓட்டி வரும் வருமானத்தைக் கொண்டு அன்றாட வாழ்க்கையை நகர்த்தி வரும் இவருக்கு, கடந்த பிப்ரவரி மாதம் ஒரு பேரிடி காத்திருந்தது. வேலூரில் உள்ள இவரது சொந்த வீட்டு முகவரிக்கு ஜிஎஸ்டி அலுவலகத்தில் இருந்து ஒரு அதிகாரப்பூர்வ கடிதம் வந்தது. அதில், கமல்நாதன் பெயரில் இயங்கும் நிறுவனம் பல கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்துள்ளதாகவும், அதற்காக அவர் 4.70 கோடி ரூபாய் அபராதத்துடன் கூடிய வரியைச் செலுத்த வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.
தினம் சில நூறு ரூபாய்களைச் சம்பாதிப்பதே பெரும்பாடாக இருக்கும் நிலையில், கோடிக்கணக்கான ரூபாய் வரி நோட்டீஸைக் கண்டு நிலைகுலைந்து போனார் கமல்நாதன். உடனடியாக ஜிஎஸ்டி அலுவலகத்திற்கு விரைந்து சென்று அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டுள்ளார். அங்கு அவர் சமர்ப்பித்த ஆவணங்களை ஆய்வு செய்தபோதுதான் அதிர்ச்சிகரமான உண்மைகள் ஒவ்வொன்றாக வெளிச்சத்திற்கு வந்தன.
ஜிஎஸ்டி ஆதார் கார்டு ஆதாரம்
யாரோ மர்ம நபர்கள் கமல்நாதனின் ஆதார் மற்றும் பான் கார்டு விவரங்களை மிக நுட்பமாகத் திருடி, அவரது பெயரிலேயே போலியாக ஜிஎஸ்டி பதிவு செய்துள்ளனர்.
இந்தத் திருட்டு ஆவணங்களை வைத்து ஓசூர் மற்றும் திருப்பூர் ஆகிய நகரங்களில் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி நிறுவனங்களைத் தொடங்கி பெரிய அளவில் வர்த்தகம் செய்துள்ளனர். குறிப்பாகத் திருப்பூரில் 'கமல் என்டர்பிரைஸ்' என்ற பெயரில் ஒரு நிறுவனம் இயங்கியதும், அதன் மூலம் கோடிக்கணக்கில் பணப் பரிமாற்றம் செய்துவிட்டு, ஜிஎஸ்டி வரி கட்டாமல் அந்த நிறுவனத்தை மூடிவிட்டு மர்ம நபர்கள் தலைமறைவாகிவிட்டதும் விசாரணையில் தெரியவந்தது.
தனது அடையாளத்தைத் திருடி இவ்வளவு பெரிய மோசடி நடந்திருப்பதை உணர்ந்த கமல்நாதன், ஜிஎஸ்டி அதிகாரிகளின் அறிவுறுத்தலின்படி வானகரம் காவல் நிலையத்தில் முறையிட்டார். பிறகு முறையான நடவடிக்கை கோரி சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நேற்று புகார் மனு அளித்தார்.
வாடகை வீடு, பான் கார்டு
அந்த புகார் மனுவில், நான் கார் டிரைவராக பணியாற்றி வருகிறேன். தற்போது பணி காரணமாக சென்னை புளியம்பேடு நூம்பல் பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வருகிறேன். எனது பான் கார்டு மற்றும் ஆதார் கார்டு பயன்படுத்தி திருப்பூர் மற்றம் ஓசூர் பகுதியில் எனக்கு முன்பின் அறிமுகம் இல்லாத நபர் எனது பெயரில் ஒரு நிறுவனத்தை தொடங்கி ஜிஎஸ்டி நம்பர் எடுத்து தொழில் செய்து வந்துள்ளார். நான் எந்த தொழிற்சாலையும் நடத்தவில்லை.
இந்நிலையில் எனக்கு ஜிஎஸ்டி அலவலகத்தில் இருந்து ரூ.4,70,89,356 பணம் கட்ட வேண்டும் என்று தபால் வந்துள்ளது. இது தொடர்பாக எனக்கு எவ்வித சம்பந்தமும் இல்லை. எனது ஆவணங்களை பயன்படுத்தி தவறு செய்தவர்கள் மீது உரிய விசாரணை நடத்த வேண்டும். அவர்கள் மீது சட்ட நடவடிக்கையும் எடுக்க வேண்டும் என்ற கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.
1 லட்சம் ரூபாய்
பிறகு, செய்தியாளர்களிடம் பேசிய அவர், "என்னால் ஒரு லட்ச ரூபாயைக் கூடப் பார்க்க முடியாது, ஆனால் என் பெயரில் 4.70 கோடி வரி கட்டச் சொல்கிறார்கள். என் ஆவணங்களைத் தவறாகப் பயன்படுத்தி என்னைச் சிக்கலில் தள்ளிய மோசடி கும்பலைக் கண்டுபிடித்து அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்," என்று கண்ணீர் மல்கக் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர். எனினும், ஒரு சாமானியனின் அடையாளத்தைத் திருடி, கோடிகளில் மோசடி செய்துள்ள இந்தச் சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications