Vedan Viral video: கேரளாவுக்கு வரும்போது வீட்டுக்கு வாங்க.. திருமாவுக்கு அன்பு அழைப்பு விடுத்த வேடன்
சென்னை: கேரளாவைச் சேர்ந்த ராப் பாடகர் வேடன் தற்போது ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறார். இந்நிலையில், விசிக தலைவர் திருமாவளவனை கேரளாவுக்கு வரும்போது தனது வீட்டுக்கு வருமாறு வேடன் அன்புடன் அழைக்கும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கடந்த சில வாரங்களாக சமூக வலைதளங்களிலும், செய்தி ஊடகங்களிலலும் அதிகமாக அடிபட்ட பெயர் 'வேடன்'. கேரளாவைச் சேர்ந்த மலையாள ராப் பாடகரான வேடனின் பாடல்கள்தான் சமீபநாட்களாக ரீல்ஸ், ஸ்டோரீஸ் உள்ளிட்டவற்றில் அதிகம் இடம்பெற்று வருகின்றன. புரட்சிகரமான பாடல் வரிகள் மூலம் கவனம் பெற்றவர் வேடன்.

வேடன்
வேடன் என்ற மேடைப் பெயரால் பிரபலமாக அறியப்படும் ஹிரந்தாஸ் முரளி, கேரளாவின் திருச்சூரில் பிறந்தவர். 2020 ஆம் ஆண்டு கொரோனா பரவல் காலகட்டத்தில் 'வாய்ஸ் ஆஃப் தி வாய்ஸ்லெஸ்' என்ற தனது முதல் இசை ஆல்பத்தை யூடியூபில் வெளியிட்டு புகழ் பெற்றார். இந்தப் பாடல் தீயாகப் பரவி அவரை பிரபலமாக்கியது. சாதி, மத அடக்குமுறைகளுக்கு எதிராக இந்தப் பாடலில் இடம்பெற்ற வரிகள் சமூக வலைதளங்களில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
அடுத்து 2021 ஆம் ஆண்டு, ஜோஜு ஜார்ஜ், குஞ்சாகோ போபன் நடிப்பில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற 'நாயாட்டு' என்ற மலையாளப் படத்தில் இடம்பெற்ற 'நரபலி' என்ற பாடலை பாடியிருந்தார். 2022 ஆம் ஆண்டு வெளியான 'நோ வே அவுட்' படத்தின் 'மரணத்தின் நிறம்' என்ற பாடலையும் பாடியிருந்தார்.
வேடன் சர்ச்சை
தமிழில் பெரும் வரவேற்பை பெற்ற 'மஞ்சும்மல் பாய்ஸ்' படத்தில் இடம்பெற்ற 'குத்தந்திரம்' என்ற பாடலை பாடி இருந்தார். கேன்ஸ் விழாவில் விருது பெற்று உலக அளவில் கவனம் ஈர்த்த 'ஆல் வி இமேஜின் அஸ் லைட்' படத்தில் 'கிஸ்ஸஸ் இன் தி கிளவுட்ஸ்' பாடலையும் எழுதிப் பாடியிருந்தார்.
2021-ஆம் ஆண்டு வேடனுக்கு எதிராக 'மீ டூ' பாலியல் புகார் முன்வைக்கப்பட்டது. தன் தவறை ஒப்புக்கொண்ட வேடன் அதற்கு பகிரங்கமாக மன்னிப்பும் கேட்டார். அதேபோல கடந்த ஏப்ரல் மாதம், கஞ்சா வைத்திருந்ததாக கூறி வேடனை கொச்சியில் போலீசார் கைது செய்தனர். பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்ட அவர் சில மணி நேரத்திலேயே சிறுத்தை புலியின் பல் பொருத்தப்பட்ட செயின் அணிந்திருந்ததாக கேரள வனத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். எர்ணாகுளம் பெரும்பாவூர் மாஜிஸ்டிரேட் நீதிமன்றம் வேடனுக்கு ஜாமீன் வழங்கியது.
பாஜகவினர் புகார்
நீதிமன்றத்திலிருந்து வெளியே வந்த அவர், "நான் ஒரு சிறந்த மனிதனாக மாற முயற்சிப்பேன். நான் என்னைத் திருத்திக்கொள்ள முயற்சிக்கிறேன். என்னைக் ரசிப்பவர்கள் அனைவரும் புகைபிடித்தல் மற்றும் மது அருந்துதல் நல்ல பழக்கங்கள் அல்ல என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்" என்று தெரிவித்தார்.
இன்னொரு பக்கம் தனது பாடல்களின் இந்து மதத்தையும், பிரதமர் மோடியையும் அடிக்கடி வேடன் அவமதிக்கிறார் என பாஜக நிர்வாகிகள் சிலர் வேடன் மீது அண்மையில் காவல் துறையில் புகார் அளித்துள்ளனர். அதேசமயம் சமூக வலைதளங்களிலும் இளைஞர்கள் மத்தியிலும் வேடனுக்கு ஆதரவு குவிந்து வருவதும் குறிப்பிடத்தக்கது.
திருமாவுடன் வேடன் வீடியோ காலில் பேச்சு....
— Bala vetrivel N (@vetrivel1996) June 4, 2025
35 வருடமாக பேசி வந்ததை ஒரே பாடலில் பாடி விட்டதாக திருமா பாராட்ட, நான் பாடுவதற்கு தைரியம் கொடுத்ததே தங்கள் பேச்சு என வேடன் கூறுகிறார்.
அடுத்த முறை கேரளா வரும் போது திருச்சூரில் உள்ள தனது வீட்டிற்கு வருமாறு திருமாவிற்கு அன்பு கட்டளை… pic.twitter.com/8w6QuHQVv7
திருமாவளவன் - வேடன் உரையாடல்
இந்த நிலையிலில்தான், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன், வேடனிடம் வீடியோ கால் வாயிலாகப் பேசி நலம் விசாரித்தார். குடும்பம் பற்றியும் விசாரித்தார். வேடன் திருச்சூரில் தனது வீடு இருப்பதாக கூறியதை அடுத்து, அடிக்கடி நான் கேரளா வருவேன் எனக் கூறினார். அப்போது திருமாவளவனை கேரளாவுக்கு வரும்போது தனது வீட்டுக்கு வருமாறு வேடன் அன்புடன் அழைத்துள்ளார்.
திருமாவிடம் உருகிய வேடன்
14 ஆம் தேதி திருச்சியில் நடைபெறும் பேரணிக்கு வர முடியுமா என வேடனிடம் கேட்டார் திருமாவளவன். அதற்கு வேடன், தான் வர முயற்சிப்பதாக தெரிவித்தார். 35 வருடமாக பேசி வந்ததை ஒரே பாடலில் பாடி விடுகிறீர்கள், நீங்கள் பேசும் அரசியல் நன்றாக இருக்கிறது என திருமாவளவன் பாராட்டினார்.
அதற்கு வேடன், நான் பாடுவதற்கு தைரியம் கொடுத்ததே உங்கள் பேச்சுதான். கூடிய சீக்கிரம் நேரில் சந்திப்போம் என திருமாவளவன் வேடன் கூறியுள்ளார். இந்த வீடியோ இப்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.












Click it and Unblock the Notifications