விருதுநகர் பட்டாசு ஆலை விபத்து.. 4 பிரிவில் வழக்கு.. உரிமையாளர்கள் தலைமறைவு?
சென்னை: விருதுநகர் பட்டாசு ஆலை விபத்து நாட்டையே உலுக்கியுள்ளது. இந்த பட்டாசு ஆலை விபத்து தொடர்பாக ஆலை இருந்த கிராமத்தின் விஏஓ அளித்த புகாரின் பேரில், போலீசார் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் ஆலை உரிமையாளர்களான ஈஸ்வரி மற்றும் அவரது கணவர் முத்துமாணிக்கம் மீது வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் இருவரையும் தேடி வருகிறார்கள்.
விருதுநகர் மாவட்டம் சிவகாசி உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான பட்டாசு ஆலைகள் செயல்பட்டு வருகின்றன. ஆயிரத்திற்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் செயல்பட்டு வரும் நிலையில், இந்த ஆலைகளில் லட்சக்கணக்கானவர்கள் பணியாற்றி வருகிறார்கள்.

விருதுநகரில் உள்ள கட்டானர்ப்பட்டி பகுதியில் இயங்கி வரும் பட்டாசு ஆலையில் நேற்று பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. நேற்று காலையில் இந்த ஆலையில் 50-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றிக்கொண்டு இருந்த நிலையில், மதிய உணவுக்கு பிறகு திடீரென ஆலையில் பட்டாசு வெடித்து விபத்து ஏற்பட்டது. இதையடுத்து அருகில் உள்ள அறைகளுக்கும் தீ பரவி அடுத்தடுத்து பட்டாசுகள் வெடித்து சிதறின.
பேன்சிரக பட்டாசுகள் தயாரிக்கப்பட்டதாகவும், வீரியம் அதிகம் உள்ள வேதிப்பொருட்கள் பயன்படுத்தப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. இதனால், சுமார் 10 கிலோ மீட்டர் சுற்றளவுக்கு பயங்கர வெடி சத்தம் ஏற்பட்டது. இந்த ஆலையில் ஏற்பட்ட விபத்தில் 24 பேர் பலியாகியுள்ளனர். அவர்களின் உடல்கள் உடனடியாக மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
நாட்டையே உலுக்கிய இந்த பட்டாசு ஆலை தொடர்பாக ஆலை இருந்த கிராமத்தின் விஏஓ அளித்த புகாரின் பேரில் போலீசார் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஆலை உரிமையாளர்களான ஈஸ்வரி மற்றும் அவரது கணவர் முத்துமாணிக்கம் மீது வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் இருவரையும் தேடி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications