ரூ.14 கோடி தங்கம்! விருதுநகரில் பறக்கும் படை அதிகாரிகள் ரெய்டில் சிக்கிய நகைகள்! யாருக்கு சொந்தமானது?
விருதுநகர்: விருதுநகரில் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ.14 கோடி ரூபாய் மதிப்பிலான தங்க நகைகளை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். மதுரையில் இருந்து நாகர்கோவில் சென்ற வாகனத்தை தடுத்து நிறுத்தி சோதனை நடத்தியபோது, உரிய ஆவணங்கள் இன்றி நகைக் கடைக்கு தங்க நகை கொண்டு செல்லப்பட்டதால் பறிமுதல் நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
தமிழக சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது. தேதி அறிவித்த உடனேயே தேர்தல் நடத்தை விதிகளும் அமலுக்கு வந்துள்ளன. இதன்படி ரூ.50 ஆயிரம் ரொக்க பணத்திற்கு மேல் கொண்டு சென்றால் அவற்றை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்யக் கூடும்.

உரிய ஆவணங்கள் இருந்தால் பணம் எடுத்து செல்லலாம். ஆனால் உரிய ஆவணங்கள் எடுத்துச் செல்லப்படாவிட்டால் அந்த பணத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்வார்கள். தமிழகத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும், தமிழகம் முழுக்க தேர்தல் அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தி வருகிறார்கள். வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடாவை தடுப்பதற்காகவும் தேர்தல் அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தி வருகிறார்கள்.
அந்த வகையில் தான் விருதுநகரில் இன்று தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் வாகனங்களை நிறுத்தி சோதனை செய்து கொண்டிருந்தனர். சூலக்கரை பகுதியில் ஹோலி கிராஸ் மருத்துவமனை அருகே சோதனை செய்து வந்தனர். அப்போது, மதுரையில் இருந்து நாகர்கோவில் சென்ற வாகனம் ஒன்றை அதிகாரிகள் தடுத்து நிறுத்தி சோதனை நடத்தினர்.
அப்போது அந்த வாகனத்தில் இருந்த தனியார் நிறுவன ஊழியர்கள், மலபார் கோல்டு நிறுவனத்திலிருந்து நாகர்கோவிலில் உள்ள நகைக்கடைகளுக்கு விநியோகம் செய்வதற்காக ரூ.14 கோடி தங்க நகைகள் கொண்டு செல்வதாக தெரிவித்துள்ளனர். அப்போது அதிகாரிகள் அதற்கான ஆவணங்களை கேட்டுள்ளனர். ஆனால் உரிய ஆவணங்கள் அவர்களிடம் இல்லை என கூறப்படுகிறது. இதையடுத்து ரூ.14 கோடி மதிப்பிலான நகைகளையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.












Click it and Unblock the Notifications