ஏசியை கேப் விடாமல் யூஸ் செய்தால் வெடித்து சிதறும் ஆபத்து.. வீட்டில் பாதுகாப்பாக இருப்பது எப்படி?
சென்னை: டெல்லியின் விவேக் விஹார் பகுதியில் 9 பேர் உயிரைப் பறித்த தீ விபத்திற்கு, ஏசி வெடிப்பே முக்கியக் காரணம் என நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர். இதுபோல ஏசி வெடிப்புகள் ஏன் ஏற்படுகிறது.. கோடைக் காலத்தில் பலரும் ஏசிக்களை பத்திரமாக இருக்கும் வழிமுறைகள் குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்!
டெல்லியில் உள்ள விவேக் விஹாரில் திடீரென 4 மாடிக் கட்டிடம் ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டது. 2வது மாடியில் தீ முதலில் ஏற்பட்டதாகவும் பிறகு அது மளமளவெனப் பரவியதாகவும் சொல்லப்படுகிறது... நள்ளிரவில் மக்கள் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது தீ மளமளவெனப் பரவியதால் பலரால் தப்பிக்க முடியவில்லை. இந்த தீ விபத்திற்கு என்ன காரணம் என உறுதியாகத் தெரியவில்லை.

தீ விபத்து
இருப்பினும், ஏசி வெடிப்பே காரணம் என அக்கம் பக்கத்தினர் சொல்கிறார்கள். இது தொடர்பாக குடியிருப்புவாசிகள் கூறுகையில், "ஏசியில் ஏற்பட்ட வெடிப்புதான் இந்தத் தீ விபத்திற்குக் காரணம். அதிகாலை 3 மணியளவில் மணிக்குத் தீப்பிடித்தது.. 3:35 மணிக்குத் தீயணைப்பு வாகனங்கள் வந்தன. சுமார் 12 முதல் 15 பேர் மீட்கப்பட்டனர்.. பால்கனிகளில் ஏணிகளை வைத்து 20 பேரை மீட்டனர். ஆனால், கட்டிடத்தின் பின்பகுதியில் வசித்த இரண்டு குடும்பத்தினரால் வெளியே வர முடியவில்லை. முன்புறம் வசித்தவர்கள் தீப்பிடித்தவுடன் கட்டிடத்தில் உள்ள மற்றவர்களை உஷார்படுத்தத் தவறியதே உயிரிழப்புகள் அதிகரிக்கக் காரணம்" என்கிறார்கள்.
என்ன காரணம்
கோடைக் காலத்தில் வெப்பம் படுத்தி எடுக்கும் சூழலில், அனைவருமே ஏசி யூஸ் செய்கிறார்கள். இருப்பினும் இந்த தீ விபத்து, கோடைக் காலத்தில் ஏசி பயன்பாட்டில் நாம் எவ்வளவு கவனமாக இருக்க வேண்டும் என்ற எச்சரிக்கையை மீண்டும் ஒருமுறை வலுவாகப் பதிவு செய்துள்ளது. ஏசி வெடிப்பதற்கு முக்கியக் காரணம், அதன் கம்ப்ரஸருக்குள் (Compressor) ஏற்படும் அதீத அழுத்தமே ஆகும்.
வெடிக்கலாம்
பழுதடைந்த பாகங்கள், காற்றோட்டம் தடைபடுவது அல்லது அதிகப்படியான வெப்பம் ஆகியவை கம்ப்ரஸரின் உள் பாகங்களில் கடுமையான அழுத்தத்தை ஏற்படுத்தி வெடிப்பதற்கு வழிவகுக்கின்றன. மேலும், ஏசிகளில் பயன்படுத்தப்படும் வாயுக்கள் எளிதாகத் தீப்பற்றக்கூடியவை.. குளிர்சாதன வாயுக்கள் கசியும்போது, அவை மின் கசிவு அல்லது தீப்பொறியுடன் தொடர்பு கொள்ளும்போது பெரும் வெடிப்பு ஏற்படுகிறது.
அதேபோல கேப் இல்லாமல் தொடர்ந்து ஏசியைப் பயன்படுத்துவதும் கூட ஏசி வெடிப்பிற்குக் காரணமாக அமையும். வயரிங் சிக்கல், ஏசி பாகங்களில் தூசு படிந்து இருப்பது, வால்டேஜ் ஏற்ற இறக்கங்கள் ஆகியவையும் ஏசி வெடிப்பிற்குக் காரணமாக அமையும்!
தற்காத்துக் கொள்ளும் வழிகள்
- குறிப்பிட்ட கால இடைவெளியில் ஏசியை முறையாக சர்வீஸ் செய்ய வேண்டும்.
- ஏர் பில்டர்கள் மற்றும் ஏசியின் உள் பாகங்களைத் தூசு படியாமல் சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.
- ஏசியை ஓவர்லோடு செய்யக்கூடாது.. அதைத் தொடர்ந்து பல மணி நேரங்கள் இயக்குவதைத் தவிர்க்க வேண்டும்.
- ஏசிக்கு செல்லும் மின் இணைப்பு மற்றும் வயரிங் பாதுகாப்பானதாகவும், சரியான மின் அழுத்தத்தைக் கொடுப்பதாகவும் இருக்க வேண்டும்.
- ஏசியை இன்ஸ்டால் செய்யவும், ரிப்பேர் செய்யவும் அங்கீகரிக்கப்பட்ட மற்றும் பயிற்சி பெற்ற நிபுணர்களை மட்டுமே அழைக்க வேண்டும்.
ஏசியிலிருந்து வழக்கத்திற்கு மாறான சத்தம் வருவது, கருகிய வாசனை வருவது, அடிக்கடி ட்ரிப் ஆவது அல்லது திடீரெனக் கூலிங் குறைவது போன்ற அறிகுறிகள் தெரிந்தால் உடனடியாக அதைப் பயன்படுத்துவதை நிறுத்திவிட்டு மெக்கானிக்கை அழைக்க வேண்டும்.












Click it and Unblock the Notifications