சின்னத்திரையில் மின்னலென தோன்றி மறைந்த சித்ரா... கண்ணீருடன் விடை கொடுத்த ரசிகர்கள்
மறைந்த சின்னத்திரை நடிகை சித்ராவின் இறுதி ஊர்வலம் அவரது இல்லத்தில் இருந்து பெசன்ட்நகர் மைதானத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. ரசிகர்கள் கண்ணீர் மல்க விடை கொடுத்தனர்.
சென்னை: சின்னத்திரை நடிகை சித்ராவின் உடல் பெசன்ட் நகர் மின் மயானத்தில் எரியூட்டப்பட்டது. இறுதி ஊர்வலத்தில் பங்கேற்ற பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் கண்ணீர் மல்க விடை கொடுத்தனர். எப்போதும் சிரித்துக்கொண்டே இருக்கும் முல்லை சித்ரா இப்படி தற்கொலை செய்து கொள்வார் என்று கனவில் கூட நினைத்ததில்லை என்று கூறியுள்ளனர் அவருடன் நடித்த சக நடிகர்கள். சின்னத்திரை வானில் மின்னலென தோன்றி மறைந்து விட்டார் சித்ரா.
மக்கள் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக பணியை தொடங்கிய சித்ரா மெல்ல மெல்ல சீரியலில் தலைகாட்டினார். சின்னப்பாப்பா பெரியபாப்பா சீரியலில் மருமகளாக நடித்து பிரபலம் ஆனார். வேலு நாச்சியார் சீரியலில் வீரமான நாயகியாக சிலம்பம் சுற்றி பல ரசிகர்களின் மனங்களை கொள்ளை கொண்ட சித்ராவுக்கு அதிக ரசிகர்களை பெற்றுக்கொடுத்தது பாண்டியன் ஸ்டோர் சீரியல்தான்.
சின்னத்திரை வானில் மின்னலென தோன்றி மறைந்து விட்டார் சித்ரா. அந்த புன்னகையும், நளினமும் நிரந்தரமாக ரசிகர்களின் மனதில் ஒட்டிக்கொண்டு விட்டது. முல்லை நினைவுகளோடு விடை கொடுத்திருக்கின்றனர் ரசிகர்கள். சின்னத்திரை நடிகையின் மரணத்திற்கு ஏன் இத்தனை முக்கியத்துவம் என்று பலரும் நினைக்கலாம். எளிமையாக தனது வாழ்க்கையை தொடங்கி பல கனவுகளோடு வாழ்ந்து மறைந்த நடிகையை எந்த ரசிகரும் கொண்டாடத்தான் செய்வார்கள்.
மனம் வீசிய முல்லை
பாண்டியன் ஸ்டோர் சீரியலில் மூன்றாவது மருமகள் முல்லையாக கதிர் மனைவியாக நடித்த சித்ராவிற்கு ரசிகர்கள் அதிகம் கிடைத்தனர். சித்ரா என்பதை விட முல்லையாகவே வாழ்ந்தார். ரசிகர்களுக்கு அவர் முல்லைதான். அப்படித்தான் அழைத்தனர்.
சிரித்த முகம்
சித்ரா என்றாலே பலருக்கும் சிரித்த முகம்தான் நினைவுக்கு வரும். இதழ் ஓரத்தில் ஒரு புன்னகை தொக்கி நிற்கும். சோகத்தை எப்போதுமே வெளிக்காட்ட மாட்டார் என்பதுதான் சக நடிகர்களின் கருத்தாக உள்ளது. சுட்டித்தனமான நடிப்பால் பலரையும் கவர்ந்தவர் சித்ரா.
அதிர்ச்சியில் ரசிகர்கள்
சித்ராவின் திடீர் மரணம் பலரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. பாண்டியன் ஸ்டோர் முல்லை இல்லை என்பதை இன்னமும் பலரால் நம்ப முடியவில்லை. தற்கொலையா? கொலையா என்ற கேள்விகள் எழுந்தாலும், சித்ராவின் மரணம் தற்கொலை தான் என பிரேத பரிசோதனை முடிவில் காவல்துறை இன்று தெரிவித்து உள்ளது.
கண்ணீர் அஞ்சலி
நடிகை சித்ராவின் உடல் கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் பிரேத பரிசோதனை நிறைவடைந்த பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. கோட்டூர்புரத்தில் உள்ள அவரது வீட்டில் ரசிகர்களும், சக நடிகர்களும் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர். முல்லையின் ஜோடியாக நடித்த கதிர் இன்னமும் அதிர்ச்சியில் இருந்து மீளாமலேயே பேசினார்.
நெருப்பில் கரைந்த சித்ரா
நடிகை சித்ராவின் உடலுக்கு இறுதிச்சடங்கு செய்யப்பட்டு பெசன்ட் நகர் மின் மயானத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இறுதி ஊர்வலத்தில் பங்கேற்ற ரசிகர்களும், சின்னத்திரை கலைஞர்களும் கண்ணீர் மல்க பங்கேற்றனர். சின்னத்திரை வானில் மின்னலென தோன்றி மறைந்து விட்டார் சித்ரா. முல்லை இனி இல்லை அவரது உடல் நெருப்பில் கரைந்து விட்டது.
சித்ராவின் உடல் மறைந்திருக்கலாம் அவரது புகழ் என்றைக்கும் மறையாது.