உன் கட்சியை கலைக்க சொன்னா செய்யலை.. நீ எனக்கு அட்வைஸ் பண்றியா? தினகரனை வெளுத்த சசிகலா? அமமுக அப்செட்
சென்னை: அமமுக பொதுச்செயலாளர் தினகரனை மிக கடுமையாக சசிகலா எச்சரித்து, கட்சியை கலைத்துவிட வேண்டும் என்று கடிந்து கொண்டாராம் சசிகலா. இதனை விரும்பாததால்தான் சசிகலாவின் வெள்ள நிவாரண விசிட் நிகழ்ச்சியில் அமமுகவினர் யாரும் பங்கேற்கவில்லை என கூறப்படுகிறது.
அண்மையில் சென்னையில் மழை வெள்ள பாதிப்பு பகுதிகளை சசிகலா நேரில் பார்வையிட்டார். சென்னை தியாகராயநகர் கிரியப்பா சாலை, சைதாப்பேட்டை ஆட்டுத்தொட்டி, ஓட்டேரி, வடபழனி, கே.கே.நகர், கோட்டூர்புரம், கோயம்பேடு உள்பட பல பகுதிகளில் நடந்து சென்று மக்களை சந்தித்து ஆறுதல் கூறினார் சசிகலா.
அப்போது பேசிய சசிகலா, வீடுகளை இழந்த மக்களுக்கும், விவசாயிகளுக்கும், தண்ணீரில் தத்தளிக்கும் மக்களை காப்பாற்றவும் மத்திய அரசு தமிழகத்துக்கு வேண்டிய நிதியை விரைவாக கொடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். மக்களை காப்பற்றத்தான் அரசுகள் இருக்கிறது. மத்திய அரசும், மாநில அரசும் விரைவாக செயல்பட்டு மக்களை காப்பாற்ற வேண்டும் என்றார். அதிமுக கொடி கட்டிய காரில்தான் அப்போதும் பயணித்தார் சசிகலா.

அமமுக ஆப்சென்ட்
ஆனால் வழக்கமாக சசிகலாவுக்கு வரவேற்புகளை தெறிக்கவிடும் தினகரனின் அமமுகவினர் சசிகலாவுடன் இந்த முறை வரவில்லை. பெங்களூரு சிறையில் இருந்து தமிழகம் வந்த சசிகலாவுக்கு 23 மணிநேர வரவேற்பு கொடுத்து நாட்டையே திரும்பிப் பார்க்க வைத்தவர்கள் இந்த நிகழ்ச்சியில் ஏன் பங்கேற்கவில்லை என்பது குறித்து நாம் விசாரித்தோம்.

சசிகலா விசிட் ஏன்?
அப்போது சசிகலா தரப்பில் நமக்கு கிடைத்த தகவல்கள்... அதிமுகவை கைப்பற்ற வேண்டுமானால் தீவிர அரசியலில் கவனம் செலுத்த வேண்டும் ; வீட்டுக்குள் முடங்கியிருக்க கூடாது என்று சசிகலாவிடம் அவருக்கான நம்பிக்கைக்குரியவர்கள் வலியுறுத்தியபடி இருக்கிறார்கள். அந்த வகையில்தான் பொது வெளியில் வரத்துவங்கியிருக்கிறார் சசிகலா. அதற்கேற்ப, சென்னையில் மழை வெள்ளம் கடுமையாக பாதித்ததால் மக்களுக்கு நிவாரண உதவி செய்வதன் மூலம் அரசியல் பணிகளில் கவனம் செலுத்த முடிவு செய்தே பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட வெளியே வந்தார் அவர்.

தினகரன் முட்டுக்கட்டையால் சசிகலா கோபம்
ஆனால் சசிகலா வெளியே வருவதை தினகரன் விரும்பவில்லையாம். அதனால் அவரது உடல்நிலையை சொல்லி, இதனை சசிகலாவிடம் வலியுறுத்தி இருக்கிறார். ஆனால் சசிகலாவோ, உன் கட்சியை கலைக்க சொல்லி பல முறை சொல்லிட்டேன். நீ செய்யலை. எனக்கு யோசனை சொல்றதை நிறுத்து.. உன் அட்வைஸ் எல்லாம் எனக்கு தேவை இல்லை என எச்சரித்தாராம். சசிகலாவைப் பொறுத்தவரை அதிமுகவை கைப்பற்ற அமமுகதான் பெரிய இடைஞ்சலாக இருக்கு; அமமுகவை சுட்டிக்காட்டியே நம்மை சேர்க்க எதிர்ப்பு தெரிவிக்கிறாங்க.. என்பதுதான் நிலைப்பாடாம்.

சசிகலா மீது அமமுக அதிருப்தி
சசிகலாவின் இப்படியான கோபத்தை நீண்டகாலத்துக்கு பின்னர் எதிர்கொண்ட தினகரன் ஆடிப் போனாராம். இதனையடுத்தே வெள்ள பாதிப்புகளை பார்வையிடவும் நிவாரன உதவிகளை செய்யவுமான சசிகலாவின் நிகழ்ச்சியில் அ.ம.மு.க.வினர் யாரும் பங்கேற்க கூடாது என சென்னை மாவட்ட அமமுக செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு உத்தரவு போட்டாராம் தினகரன். அதனால் சசிகலாவின் நிகழ்ச்சியின் போது, அமமுகவின் துணை பொதுச்செயலாளர் செந்தமிழன் உள்பட அமுகவினர் யாரும் செல்லவில்லை. சசிகலா நிகழ்ச்சியை ஒட்டுமொத்தமாக புறக்கணித்ததாம் அமமுக!












Click it and Unblock the Notifications