ஒரு வார்த்தை ட்வீட்.. ஓபிஎஸ் வைத்த ட்விஸ்ட்.. அனல் பறக்கும் அரசியல் களம்
சென்னை: ட்வீட்டரில் ஒருவார்த்தை ட்வீட் தற்போது டிரெண்டிங்கில் இருந்து வரும் நிலையில் அதிமுக உள்கட்சி பிரச்சனைக்கு மத்தியில் எடப்பாடி பழனிச்சாமிக்கு போட்டியாக ஓ பன்னீர் செல்வம் அதில் இணைந்து முக்கிய வார்த்தையை பதிவிட்டுள்ளார்.
சமூக வலைதளமாக ட்வீட்டரில் அடிக்கடி ஏதாவது ஒன்று டிரெண்டிங்கில் இருக்கும். அந்த வகையில் தற்போது ஒரு வார்த்தை அல்லது ஒற்றை வார்த்தை ட்வீட் டிரெண்ட்டிங்கில் உள்ளது.
அமெரிக்க அதிபர் ஜோபைடன் உள்பட முக்கிய தலைவர்கள், விளையாட்டு வீரர்கள் ஒற்றை வார்த்தையை டுவிட்டரில் பதிவிட்டு வருகின்றனர். இதனால் உலகம் முழுவதும் இது தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

ட்வீட்டர் டிரெண்டிங் ஏன்?
அமெரிக்காவின் 'அம்ட்ராக்' என்ற ரெயில் சேவை நிறுவனம் 'trains' என ஒற்றை வார்த்தையில் ட்வீட் செய்ய அதைத் தொடர்ந்து உலகம் முழுவதும் உள்ள தலைவர்கள், அமைப்புகள், நிறுவனங்கள் ஒற்றைச் சொல்லில் ட்வீட் செய்து வருகின்றனர். இதுதான் ஒற்றை வார்த்தை ட்வீட்டுக்கு பிள்ளையார்சுழி போட்டது. இதில் இணைந்த நாசா 'universe' (பிரபஞ்சம்) என பதிவிட்டது.

அமெரிக்க அதிபர் பதிவு
அதன்பிறகு அமெரிக்க அதிபர் ஜோ பைடன், 'democracy' (ஜனநாயகம்) என பதிவிட்டார். கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் 'கிரிக்கெட்' எனவும் ஒற்றை வார்த்தையை ட்வீட்டாக பதிவிட்டனர். இந்த ஒற்றை வார்த்தை ட்வீட்டர் பதிவு தமிழக அரசியல் தலைவர்கள் மத்தியிலும் பிரபலமானது. இதனால் தமிழக அரசியல் தலைவர்களும் இந்த ட்வீட்டர் டிரெண்டிங்கில் இணைந்துள்ளனர்.

முதல்வர் ஸ்டாலின் பதிவு
தமிழ்நாட்டின் முதல் அமைச்சர் முக ஸ்டாலின் 'திராவிடம்' என தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டார். எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி 'தமிழ்நாடு' எனவும், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை 'தமிழன்' எனவும், பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் 'சமூகநீதி' எனவும், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் 'தமிழ் தேசியம்' எனவும், நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் 'மக்கள்' எனவும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் - 'வறுமை ஒழிப்பு' எனவும் பதிவிட்டுள்ளனர்.

ஓ பன்னீர் செல்வம் ட்வீட்டர் பதிவு
மேலும் சசிகலா 'ஒற்றுமை' எனவும், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், 'அம்மா' எனவும் பதிவிட்டுள்ளனர். இதன் தொடர்ச்சியாக தற்போது தமிழக முன்னாள் முதல் அமைச்சர் ஓ பன்னீர்செல்வமும் ஒற்றை சொல் ட்வீட்டர் டிரெண்டிங்கில் இணைந்ததுள்ளார். ஓ பன்னீர் செல்வம் தனது ட்வீட்டர் பக்கத்தில் 'தொண்டர்கள்' என்று பதிவிட்டுள்ளார்.

ஏன் இந்த வார்த்தை?
அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் பூதாகரமாகி நீதிமன்றங்களில் வழக்குகள் தொடரப்பட்டன. தற்போதைய நிலவரப்படி அதிமுகவில் ஜூலை 11ல் நடந்த பொதுக்குழு செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் கூறியுள்ளது. இதன்மூலம் அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டது செல்லும் என்ற நிலை உள்ளது. இதனை எதிர்த்து ஓ பன்னீர் செல்வம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய உள்ளார். மேலும், தனக்கு தான் கட்சி தொண்டர்கள் ஆதரவு உள்ளதாக தொடர்ந்து கூறி வருகிறார். இந்நிலையில் தான் ஓ பன்னீர் செல்வம் தொண்டர்கள் எனும் வார்த்தையை ட்வீட்டரில் பதிவிட்டு ஒற்றை வார்த்தை ட்வீட்டர் டிரெண்டிங்கில் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications