ஏ! தமிழகமே! அனல் பறந்த அந்த காலம் என்னாச்சு? களை இழந்து போனதே தேர்தல் பிரசார களம்!
சென்னை: லோக்சபா தேர்தல் களத்தில் தலைவர்கள் ஆவேசமாக பேசுகின்றனர்.. எதிர் அணி தலைவர்களுக்கு பதிலடி தருகின்றனர்.. 24 X7 ஊடகங்கள் வழக்கம் போல இதனை ஒளிபரப்பு செய்து கொண்டிருக்கின்றன.. இதற்கு அப்பால் தமிழ்நாட்டு தேர்தல் பிரசார களத்தின் வழக்கமான 'உக்கிர அனல்' ஏனோ காணாமல் போய்விட்டதாகவே உணர முடிகிறது.
தேர்தல் காலங்களில் ஒவ்வொரு பகுதியும் கொடிகளாலும் தோரணங்களாலும் பதாகைகளாலும் களைகட்டி இருக்கும். இடைவிடாமல் மாறி மாறி ஒலிக்கும் கட்சி பாடல்கள் காதை கிழிக்கும். தலைவர்களின் பொதுக் கூட்டங்களில் பங்கேற்க கிராமம் கிராமமாக மக்கள் செல்வதும் வழக்கம். நேர கட்டுப்பாடு இல்லாத காலங்களில் விடிய விடிய பிரசாரங்கள் நடைபெற்றதும் அதிகாலை வரை தலைவர்கள் வருகைக்காக காத்திருந்ததும் இந்த மண்ணில்தான் நடந்தன.

ஆனால் இப்போதைய தேர்தல் ஏதோ ஒரு வகையில் முற்றிலுமாக களை இழந்து காணப்படுகிறது. பெரும்பாலான கிராமங்கள், பேரூர்களில் ஆகப் பெரிதாக பிரசார பேனர்கள், பிரசாரங்களின் சுவடுகளைக் கூட காண முடியவில்லை. இந்த செய்தியை எழுதுகிற நான், கரூர், திண்டுக்கல் லோக்சபா தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் குக்கிராமங்களின் ஊடாக பயணித்து வந்தேன். வேடசந்தூர் சட்டசபை தொகுதிக்குட்பட்ட (கரூர் லோக்சபா தொகுதி) குளத்தூர் என்ற ஊரில் இருந்து வேடசந்தூருக்கு மறவபட்டி,
தாடிக்கொம்பு, உண்டார்பட்டி, மாரம்பாடி என குக்கிராமங்களினூடே செல்லும் சாலையும் உண்டு. இந்த சாலைகளில் பயணித்த போது மருந்துக்கு கூட ஒரு கிராமத்திலும் தேர்தல் பிரசார பேனரை காணவே முடியவில்லை. அதே குளத்தூரில் இருந்து எரியோடு பேரூர் வரையிலான கரூர் சாலையிலும் இந்த நிலைமைதான்.
இப்படி களை இழந்து காணப்படுகிற தேர்தல் களம் குறித்து சில கட்சிகளின் நிர்வாகிகளிடம் பேசுகிற போது, மக்களிடம் மட்டுமல்ல கட்சிக்காரர்களிடமே இப்போது 'அரசியல்' தொடர்பான விழிப்புணர்வு இருக்கிறது. 'அரசியல்' என்பது சேவைக்கானது என்பது எல்லாம் மலையேறிவிட்டது. 'ஆதாயங்களின்' அடிப்படையில்தானே அரசியல். ஓட்டு கேட்டு வருபவருக்கு ஒரு ஆதாயம் இருக்கிறது.. அவருடன் ஓட்டு கேட்டு சென்று கூட்டம் காட்டுகிற எங்களுக்கும் ஒரு ஆதாயம் இருக்கத்தான் வேண்டும். அப்படி எல்லாம் தினந்தோறும் உடன் வரும் அத்தனை பேருக்கும் அள்ளிக் கொடுத்து செல்வழிக்கக் கூடிய வள்ளல்களாகவும் வேட்பாளர்கள் இருப்பது இல்லை.. சொந்த காசை செலவழித்து, சிங்கள் டீ குடித்து விட்டு கட்சிப் பணி செய்கிறவர்களாகவும் கட்சித் தொண்டர்களும் இல்லை.. பெயரளவுக்கு பிரசாரம், பெயரளவுக்கு சுற்று பயணம், பெயரளவுக்கான பொதுக் கூட்டம்- செயல்வீரர்கள் கூட்டம், பெயரளவுக்கு செலவுக்கு பணம் என வேட்பாளர்களே கணக்கு வழக்குகளை சுருக்கிக் கொள்கின்றனர். இதற்கு காரணம் வாக்குப் பதிவுக்கு முன்னர் ஓட்டுக்கு இவ்வளவு என வாக்காளர்களுக்கு பணம் கொடுப்போம்; முடிந்தவரை மாற்று கட்சிக்காரர்களுக்கு பணம் கொடுத்து வளைப்போம்.. இந்த ஆட்டத்தில் வென்றால் பெரும் லாபம்.. தோற்றால் கிடைத்தவரை லாபம் என்பதான கணக்கு போடுகின்றனர் வேட்பாளர்கள். இதுதான் பெரும்பாலான ஊர்களில் நடக்கிறது. அதனால்தான் எங்கேயும் தேர்தல் களை கட்டவில்லை என்கின்றனர்.
இன்னொரு காரணமும் சொல்லப்படுகிறது.. இது டிஜிட்டல் யுகம் சார்.. ஸ்டாலினும் உதயநிதியும் மோடியை திட்டித்தான் பேசுவாங்க.. பேசிகிட்டே இருக்காங்க.. சீமானும் அண்ணாமலையும் ஸ்டாலினையும் உதயநிதியையும் திட்டுவாங்க.. ஒவ்வொரு நாளும் யூடியூப்பிலும் ஃபேஸ்புக்கிலும் வாட்ஸ் அப்பிலும் விழுந்து விழுந்து பார்க்கிறோம்.. இவங்க பேச்சை கேட்க வேற தனியாக போகனுமா? கட்சியில் இருக்கிறவங்க.. அட்டென்டென்ஸ் போட போகட்டும்.. நாங்க ஏன் சார் அவங்க பேச்சை எல்லாம் மெனக்கெட்டு போய் கேட்கனும்.. லைவ்வாக யூடிப்பிலும் சோசியல் மீடியாவிலும் பார்ப்போம் என்கின்றனர்.
இத்தகைய போக்குகளும் அணுகுமுறைகளும் தொடர்ந்தால் இனிவரும் காலங்களில் தேர்தல் பிரசாரம் என்பதே பொதுவெளியில் இருக்காது.. பிரசாரமே டிஜிட்டல் ஒன்லி என்றாகிவிடும் .வாக்கு பதிவு நாளன்று பூத்துக்குப் போய் ஓட்டுப் போடுவது மட்டும் வாக்காளர் கடமையாக இருக்கும் எனவும் சுட்டிக்காட்டுகின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.












Click it and Unblock the Notifications