உதயநிதியும், சபரீசனும் பொன்முடியை பார்க்க ஏன் போகவில்லை? என் நாக்கு கருநாக்கு சார்! -வி.பி.துரைசாமி
சென்னை: அமைச்சர் செந்தில்பாலாஜியை பார்ப்பதற்காக சென்ற உதயநிதி ஸ்டாலினும், சபரீசனும் அமைச்சர் பொன்முடியை பார்ப்பதற்கு ஏன் செல்லவில்லை என பாஜக மாநில துணைத் தலைவர் வி.பி.துரைசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
அடுத்தவர்கள் வீட்டில் ரெய்டு நடக்கும் போது என்னதான் நடக்கும் நடக்கட்டுமே என பாட்டுப் பாடும் அமைச்சர் துரைமுருகன், அவர் வீட்டில் ரெய்டு நடத்தப்படும் போது சட்டி சுட்டதடா கை விட்டதடா என பாடுவாரா என வி.பி.துரைசாமி வினவினார்.

திமுகவில் துணை பொதுச்செயலாளராக இருந்தவர் வி.பி.துரைசாமி. மாநிலங்களவை உறுப்பினர் சீட் எதிர்பார்த்த இவருக்கு அது கிடைக்கவில்லை. இதையடுத்து எல்.முருகனை அவரது இல்லம் தேடிச் சென்று நேரில் சந்தித்து பாஜகவில் இணைந்தார். இதையடுத்து அவருக்கு முக்கியப் பதவிகள் தரப்படலாம் எனக் கூறப்பட்ட நிலையில் மாநில துணைத் தலைவர் பதவி மட்டும் தரப்பட்டது.
இந்நிலையில் திமுக அரசை கண்டித்து செய்தியாளர்கள் சந்திப்பு நடத்திய வி.பி.துரைசாமி, திமுக மீதான தனது பழைய கோபத்தையெல்லாம் தீர்த்துக் கொள்ளும் வகையில் ஆவேசம் காட்டினார். திமுகவில் உட்கட்சி பூசல் விரைவில் வெடிக்கும் எனவும் அதுவும் குறிப்பாக 26ஆம் தேதிக்குள் அது நடக்கும் எனவும் ஆருடம் கூறிய வி.பி.துரைசாமி, தனது நாக்கு கருநாக்கு என்பதால் தாம் சொல்லியது பலிக்கும் எனவும் தனது பக்கத்தில் உட்கார்ந்திருந்தவரிடம் கூறினார்.
போலீஸ் கஸ்டடியில் உள்ள ஒரு கைதியை நேரில் சென்று முதலமைச்சர் பார்த்த வரலாறு இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் மட்டும் தான் நடந்திருக்கிறது என சாடிய வி.பி.துரைசாமி, மோடி பிரதமரான பிறகு பாஜக உட்பட அனைத்துக் கட்சிகளின் அமைச்சர்களும் கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள் என்றும் ஒரு பைசாவை இந்தியாவிற்கு வெளியே அனுப்பினாலும் யாரும் தப்ப முடியாது எனவும் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications