அதிமுக கூட்டணி சிக்கல்? "Wait and See.. கடைசி நிமிடத்தில் கணக்கு மாறும்” சஸ்பென்ஸ் வைத்த ஜெயக்குமார்
சென்னை: "தேர்தல் கூட்டணி அமைப்பதில் கடைசி நேரத்தில் எதுவும் நடக்கலாம். கடந்த காலங்களில் பல முறை அப்படி நடந்துள்ளது. Let's Wait and see" எனத் தெரிவித்துள்ளார் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்.
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தமிழக அரசியல் களம், கூட்டணி பேச்சுவார்த்தைகள் காரணமாக பரபரப்பாக காணப்படுகிறது. அரசியல் கட்சி தலைவர்களின், தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. திமுகவை பொறுத்தவரை, ஏற்கனவே கூட்டணியில் உள்ள கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

அதேசமயம், பாஜகவுடன் கூட்டணி அமைத்து கடந்த நாடாளுமன்ற தேர்தல் மற்றும் சட்டமன்ற தேர்தலை சந்தித்த அதிமுக பாஜக கூட்டணியில் இருந்து விலகுவதாக கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அறிவித்தது. இதனையடுத்து அதிமுகவும், பாஜகவும் தங்களது தலைமையில் புதிதாக வலுவான கூட்டணியை அமைக்கும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.
அதிமுக கூட்டணியில் என்ன நடக்கிறது?: கடந்த முறை அதிமுக - பாஜக கூட்டணியில் இருந்த தமாகா இந்த முறை பாஜகவா, அதிமுகவா யாருடன் கூட்டணி அமைக்க போகிறது என்ற எதிர்பார்ப்பு எழுந்த நிலையில், எடப்பாடி பழனிசாமியை சந்தித்துப் பேசியுள்ளார் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜிகே வாசன். இதன் காரணமாக தமாகா, அதிமுக கூட்டணியில் இணைய உள்ளதாக பேச்சுகள் எழுந்துள்ளன.
கடந்த தேர்தலில் பாஜக, அதிமுக கூட்டணியில் இருந்து தேமுதிக, பாமக உள்ளிட்ட கட்சிகள் என்ன முடிவை எடுக்கப்போகின்றன என்பது குறித்து தற்போது பெரிய எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளன. இந்தக் கட்சிகள் சார்பில் இன்னும் அதிமுகவுடன் வெளிப்படையான பேச்சுவார்த்தைகள் தொடங்கவில்லை.
பின்தங்கியுள்ள அதிமுக: நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடத்துவதற்காக அதிமுக துணைப் பொதுச் செயலாளர் கே.பி.முனுசாமி தலைமையில் திண்டுக்கல் சீனிவாசன், தங்கமணி, வேலுமணி, பெஞ்சமின் ஆகிய 5 பேர் கொண்ட குழுவை அந்தக் கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அமைத்தார்.
இந்தக் குழு அண்மையில் கலந்து ஆலோசித்துள்ளது. எனினும், பாமக, தேமுதிக தரப்பில் இருந்து இன்னும் இந்தக் குழுவை சந்திக்கவில்லை. திமுக, காங்கிரஸ் கட்சியுடன் முதல்கட்ட தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை நடத்தியுள்ளது. 9ஆம் தேதிக்குள் அனைத்துக் கட்சிகளுடனும் தொகுதிப் பங்கீட்டை இறுதி செய்ய திட்டமிட்டுள்ளது திமுக.
ஆனால், கூட்டணி பேச்சுவார்த்தைகளில் அதிமுக பின்தங்கியுள்ளது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜெயலலிதா காலத்தில், அதிமுக தான் கூட்டணி உடன்பாடு, வேட்பாளர் அறிவிப்பு போன்றவற்றில் முன்னணியில் இருக்கும். அறிவிப்புகள் தடாலடியாக வரும். ஆனால், தற்போது அதிமுக தேர்தல் வேலைகளில் பின்தங்கியுள்ளது தொண்டர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திமுகவுக்கு பயம் - ஜெயக்குமார் பேட்டி: இந்நிலையில், இன்று சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், "எந்தெந்த கட்சிகளுடன் அதிமுக பேசி வருகிறது என்பதை வெளிப்படையாக கூற முடியாது. அதெல்லாம் சஸ்பென்ஸ். அதுபற்றி எங்களது பொதுச்செயலாளர் அறிவிப்பார். தேர்தல் கூட்டணி அமைப்பதில் கடைசி நேரத்தில் எதுவும் நடக்கலாம். கடந்த காலங்களில் பல முறை அப்படி நடந்துள்ளது. Lets Wait and see" எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், "திமுக ஏன் கூட்டணி பேச்சுவார்த்தையை வேகமாக நடத்துகிறது என்றால், கூட்டணிக் கட்சிகள் யாரும் அவர்களை விட்டு போய்விடக் கூடாது என்பதற்காக சீக்கிரம் வாங்க என அழைத்து பேசி வருகிறது. அவர்களுக்கு பயம். அவர்கள் அதிமுக கூட்டணிக்கு வந்துவிடுவார்கள் என்று. முன்கூட்டியே தொகுதி பங்கீடு செய்வதால் ஒரு பிரயோஜனமும் இல்லை" எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் பேசிய அவர், "ஏற்கனவே தேர்தல் வேலைகள் அனைத்தையும் தொடங்கி விட்டோம். அனைத்து குழுக்களும் அமைக்கப்பட்டு அவர்கள் வேலையை பார்த்து வருகிறார்கள். இதற்கு முன் தோழமையாக இருந்தாலும் இப்போது பாஜக எங்களுக்கு எதிரி என்ற கண்ணோட்டத்தோடு தான் அணுகுவோம்." எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications