வக்ஃபு சொத்துக்களில் அதிரடி மாற்றம்! புரோக்கர்களுக்கு செக் வைத்த மத்திய அரசின் உமீத் மாஸ்டர் பிளான்
சென்னை: மத்திய அரசு வக்ஃபு வாரிய சொத்து நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்தும் நோக்கில் "உமீத்" (UMEED) என்ற புதிய வெப்சைட்டை அறிமுகப்படுத்தியிருந்த நிலையில், தற்போது முக்கியமான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருக்கிறது.. விதிக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் இப்படியொரு முடிவை மத்திய அரசு வெளியிட்டு, பலரது கவனத்தையும் பெற்றுள்ளது..!!
கடந்த ஜூலை மாதம் தொடங்கப்பட்ட இந்த திட்டத்தின் கீழ், நாடு முழுவதும் உள்ள வக்ஃபு சொத்துகளின் விவரங்களை டிஜிட்டல் முறையில் பதிவு செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

வக்ஃபு சொத்துக்கள்
குறிப்பாக, சொத்துகளின் நீளம், அகலம் மற்றும் புவிசார் குறியீடு போன்ற துல்லியமான தரவுகளை பதிவேற்றுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அப்படி பதிவு செய்யப்படாத சொத்துகள் சர்ச்சைக்குரியவையாக கருதப்படும் என்றும், இதற்கான பணிகளை முத்தவல்லிகள் மூலம் அதாவது வக்ஃபு சொத்தின் மேலாளர் மூலம் கடந்த டிசம்பர் 4-ம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என்றும் மத்திய அரசு காலக்கெடு விதித்திருந்தது.
இந்த குறுகிய காலக்கெடுவுக்குள் அனைத்து சொத்துகளையும் பதிவு செய்வது நடைமுறை ரீதியாக சாத்தியமில்லை என்று சொல்லி, அனைத்திந்திய இஸ்லாமிய தனிநபர் சட்ட வாரியம் மற்றும் ஏஐஎம்ஐஎம் தலைவர் ஓவைசி உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
அவகாசம் - சுப்ரீம்கோர்ட்
கூடுதல் கால அவகாசம் கோரி நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்ற நிலையில், இது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் கடந்த டிசம்பர் மாதம் விசாரணைக்கு வந்தது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் திபங்கர் தத்தா மற்றும் அகஸ்டின் ஜார்ஜ் அமர்வு, வக்ஃபு சொத்து விவரங்களை இணையதளத்தில் பதிவு செய்வதற்கான கால அவகாசத்தை நீட்டிக்க முடியாது என்று திட்டவட்டமாக மறுத்துவிட்டது.
பதிவு செய்வதில் ஏதாவது சிக்கல்கள் இருந்தால், சம்பந்தப்பட்டவர்கள் வக்ஃபு வாரிய தீர்ப்பாயங்களை அணுகி தீர்வு காணலாம் என்றும், ஒவ்வொரு வழக்கையும் தீர்ப்பாயம் தனித்தனியாக விசாரித்து முடிவெடுக்கட்டும் என்றும் நீதிபதிகள் அறிவுறுத்தினார்கள்..மேலும், இதற்காக வக்ஃபு சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ள முடியாது என்பதையும் நீதிமன்றம் தெளிவுபடுத்தியது. சுப்ரீம் கோர்ட்டின் இந்த அதிரடி உத்தரவானது, கால நீட்டிப்பை எதிர்பார்த்து காத்திருந்த முஸ்லிம் அமைப்புகளுக்கு பெரும் ஏமாற்றத்தை தந்தது.
இரண்டு வெப்சைட்கள்
நீதிமன்ற தீர்ப்பை தொடர்ந்து, மத்திய பத்திரிகை தகவல் பணியகம் தற்போது புதிய அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.. அதில், 'உமீத் இணையதளத்தில் நிர்வாக வசதிக்காக மேலும் இரண்டு புதிய டிஜிட்டல் தொகுதிகள் இணைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் "சொத்துகள் கணக்கெடுப்பு" தொகுதியின் மூலம் வக்ஃபு சொத்துகள் தொடர்பான விவரங்களை எளிதாக பதிவேற்றவும், அவற்றை அவ்வப்போது புதுப்பிக்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இன்னொன்று, "சொத்து குத்தகை மேலாண்மை' தொகுதியானது, குத்தகை தொடர்பான அனைத்து நடவடிக்கைகளையும் முழுமையாக டிஜிட்டல் முறையில் கண்காணிக்கவும் நிர்வகிக்கவும் உதவும்... இதன் மூலம் இடைத்தரகர்களே இல்லாமல், வக்ஃபு சொத்துகளின் வருவாய் மற்றும் குத்தகை விவரங்கள் வெளிப்படையாக தெரியவரும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
சபாஷ் மத்திய அரசு
காலக்கெடு முடிவடைய இன்னும் சில தினங்களே உள்ள நிலையில், இந்த தொழில்நுட்ப மேம்பாடுகள் நிர்வாக பணிகளை விரைவுபடுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.வக்ஃபு வாரிய சட்ட திருத்த மசோதாவுக்கு அரசியல் ரீதியாக எதிர்ப்புகள் நீடித்தாலும், நிர்வாக ரீதியாக டிஜிட்டல் மயமாக்கல் பணிகளை தொய்வின்றி முன்னெடுத்து செல்வதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது இந்த தொடர் நடவடிக்கைகள் மூலம் மீண்டும் வெளிப்படுகிறது....!!












Click it and Unblock the Notifications