“இந்தப் போரால் ஒரே ஒரு நல்லது நடக்கும்”.. ஈரான் - இஸ்ரேல் போர் பற்றி வைரமுத்து கவிதை!
சென்னை: "போர் என்பது விலை உயர்ந்ததல்ல.. மலிவான பொருள் என்பதை இந்தப் போர் உலகுக்குக் காட்டிக் கொடுத்துவிடும்" என ஈரான் - இஸ்ரேல் போர் தொடர்பாக கவிதை எழுதியுள்ளார் கவிஞர் வைரமுத்து.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகளுக்கும் ஈரானுக்கும் இடையே நடக்கும் போர் ஒரு மாதத்துக்கும் மேலாக நீடித்து வருகிறது. இந்த தாக்குதலில் முதல் நாளிலேயே ஈரானின் அதிஉயர் தலைவராக இருந்த அயத்துல்லா அலி காமேனி கொல்லப்பட்டார்.

இது ஈரானின் கோபத்தை அதிகரித்த நிலையில், ஈரானின் தாக்குதல் பலமடங்கு அதிகரித்தது. மேலும் ஈரானின் ஆதரவு போராளி குழுக்களும் இந்த தாக்குதலில் இணைந்துள்ளனர். லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்பும் இஸ்ரேலின் மீது ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது.
இது இஸ்ரேலுக்கு பெரிய பிரச்சனைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், அந்நாட்டுக்குள் புகுந்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. மேலும் இஸ்ரேலில் இருந்தபடி அந்நாட்டின் மீது ஏவுகணைகள் வீசியும் தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்நிலையில், கவிஞர் வைரமுத்து இஸ்ரேல் - ஈரான் இடையே நடைபெற்று வரும் போர் குறித்து தனது எக்ஸ் தள பதிவில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். கவிஞர் வைரமுத்து வெளியிட்டுள்ள பதிவு பின்வருமாறு:
இஸ்ரேல் - ஈரான் போருக்கு
இரண்டு விளைவுகள் உண்டு
ஒன்று
நிகழ்கால விளைவுகள்
இரண்டு
நெடுங்கால விளைவுகள்
ஹார்முஸ் நீரிணையின்
போக்குவரத்து
70 விழுக்காடு குறைந்துவிடும்
மொத்தத்தில்
16.2 லட்சம் கோடியை
மத்திய கிழக்கு இழக்கும்
36 லட்சம் பேர்
வேலை இழப்பர்
40 லட்சம் பேர்
வறுமையின் பதுங்கு குழிக்குள்
ஒதுங்குவர்
போர் என்பது
விலை உயர்ந்ததல்ல
மலிவான பொருள் என்பதை
இந்தப் போர் உலகுக்குக்
காட்டிக் கொடுத்துவிடும்
1800 கோடி
இஸ்ரேல் ஏவுகணையை
50 ஆயிரம் ரூபாய்
ஈரானிய ட்ரோன்
பிரித்து மேய்ந்துவிட்டதே
இதற்கு சாட்சி
பெட்ரோலின்
துணைப்பொருளான
உர விநியோகத்தின் கட்டுப்பாடு
ஆசியாவின் உணவுத்
தட்டுப்பாட்டில் முடியும்
இந்தப் போரின்
உடன்விளைவாக
பல நாடுகளிலும்
பாழ்செய்யும் பல்குழுக்கள்
தோன்றக் கூடும்
பல நாடுகளில்
தெருச் சண்டைகள்
கடைகளில் விற்கும்
விலைவாசியும் பஞ்சமும்
அறங்களை உடைக்கும்
சமூக மனிதன்
சுயநலப் பூச்சியாவான்
இனி நெடுங்கால
விளைவுகளைப் பார்ப்போம்
பிற நாடுகளை
ஒரு நாடு கட்டுப்படுத்தும்
வல்லாதிக்கம் ஒழியக்கூடும்
அதிகார அப்பத்தை
நாடுகள் பங்கிட்டுக்கொள்ளும்
குழந்தைகள் மனதில்
பொத்திவைத்த புழுக்கம்
கால்நூற்றாண்டுக்குப் பிறகு
சமூக வன்முறைகளாய்
வெவ்வேறு வடிவில் வெடிக்கும்
ஈரானைவிட்டு வெளியேறிய
அறிவார்ந்த கூட்டம்
உலகமெங்கும்
கண்ணுக்குத் தெரியாத
பாரசீகக் கலாசாரச் சந்தையை
உருவாக்கும்
ஒரே ஒரு நல்லது நடக்கும்
எண்ணெய்ச் சார்பைவிட்டு
இந்த உலகத்தை
விடுவிக்கும் விஞ்ஞானத்தை
வெவ்வேறு மூளைகள்
ஒரே மாதிரி சிந்திக்கும்.
இவ்வாறு வெளியிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications