சென்னையில் போர் பாதுகாப்பு ஒத்திகை.. துப்பாக்கி ஏந்திய வீரர்கள்.. “பொதுமக்கள் பயப்பட வேண்டாம்”!
சென்னை: சென்னை துறைமுகம் மற்றும் கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் போர் பாதுகாப்பு ஒத்திகை தற்போது தொடங்கி நடைபெற்று வருகிறது. போர்க்கால ஒத்திகை குறித்து பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை என மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.
ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் பலியாகினர். இந்த தாக்குதலுக்கு நேற்று செவ்வாய்க்கிழமை நள்ளிரவு இந்தியா பதில் தாக்குதலை நடத்தியது. இதில் பயங்கரவாதிகளின் 9 முகாம்கள் அழித்தொழிக்கப்பட்டன. 70 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

போர் ஒத்திகை
இந்நிலையில் இன்று நாடு முழுவதும் போர் பாதுகாப்பு ஒத்திகை தொடங்கியுள்ளது. எந்தவொரு தாக்குதலுக்கும் தயாராக இருப்பதை உறுதி செய்யும் வகையில் பாதுகாப்பு ஒத்திகைகள் நடந்து வருகின்றன. பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து, பாகிஸ்தானுடன் போர் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், இன்று (மே 7) நாடு முழுவதும் 259 இடங்களில் பாதுகாப்பு ஒத்திகை நடைபெற்று வருகிறது.
நாடு முழுவதும் அணுமின் நிலையங்கள், பெட்ரோலிய சுத்திகரிப்பு நிலையங்கள், ஆராய்ச்சி நிலையங்கள், ராணுவ தளங்கள் முகாம்கள் என முக்கிய இடங்களைக் கொண்ட இந்த இடங்களில் வான்வழி தாக்குதல் நடத்தப்பட்டால், குடிமக்கள் பாதுகாப்பு நடவடிக்கைகளின் செயல்திறன் மற்றும் ஒருங்கிணைப்பை மதிப்பாய்வு செய்யும் நோக்கில் ஒத்திகை நடத்தப்படுகிறது.
சென்னை துறைமுகம் & கல்பாக்கம்
சென்னை துறைமுகம் மற்றும் கல்பாக்கம் அணுமின் நிலையம் ஆகிய இரண்டு இடங்களில் பாதுகாப்பு ஒத்திகை நடைபெற்று வருகிறது. சிஐஎஸ்எஃப் பாதுகாப்புப் படை வீரர்கள், பேரிடர் மேலாண்மைக் குழு வீரர்கள் ஒத்திகையில் ஈடுபட்டுள்ளனர். பயிற்சி பெற்ற பாதுகாப்புப் படையினர், தீயணைப்பு வீரர்கள் இந்த ஒத்திகையில் ஈடுபட்டுள்ளனர்.
போர்க்காலத்தில் மக்கள் கூடும் இடங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டால், மக்கள் எவ்வாறு மறைவான இடங்களில் ஒளிந்து கொள்ள வேண்டும், எவ்வாறு தப்பிச் செல்வது, பாதுகாப்பான இடங்களைத் தேர்வு செய்வது எப்படி என்பது இந்த ஒத்திகையில் நடத்திக் காட்டப்படும்.
போர் வந்தால் எப்படி தப்பிப்பது?
வான்வழித் தாக்குதல் குறித்து பொதுமக்களை முன்கூட்டியே எச்சரிக்கும் அபாய ஒலியை ஒலிக்கச் செய்தல், கடுமையான தாக்குதல் நேரத்தில் பொதுமக்கள் தங்களை தற்காத்துக் கொள்வதற்கான பயிற்சி, கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் குறித்து இன்று பயிற்சி செய்யப்படுகிறது.
மேலும், போர் காலத்துக்கு பதுங்குமிடங்களைத் தயார்படுத்துதல்; தொழில்நுட்பம் உள்பட பல்வேறு வழிமுறைகளின்கீழ் முக்கிய நிலையங்கள் எதிரியின் கண்ணில் புலப்படாதவாறு உருமறைத்தல் மற்றும் பணியாளர்களின் அவசர கால வெளியேற்றம்; அவசர கால மின் துண்டிப்பு, மருத்துவமனைகளின் செயல்பாட்டுத் தயார் நிலை பரிசோதிப்பு உள்ளிட்டவை ஒத்திகையில் இடம்பெற்றுள்ளன.
பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம்
போர்க்கால ஒத்திகை குறித்து பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை என்றும், போர் தயார் நிலையை சரிபார்ப்பதற்கான பாதுகாப்பு பயிற்சி மட்டுமே என்றும், போர்க்கால ஒத்திகை தொடர்பாக மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.
சம்பந்தப்பட்ட இடங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் எப்படி உள்ளன என்பதை ஆய்வு செய்வதற்காகவே இந்த ஒத்திகை நடக்கிறது. மற்ற இடங்களில் வழக்கம் போல் பணிகள் நடக்கும். இந்த ஒத்திகையால் பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை என மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications