இது இறுதிப்போர்.. போராட்டம் வாபஸ் இல்லை… வெகுண்டெழுந்த ஜாக்டோ ஜியோ அமைப்பு
Recommended Video
சென்னை: அத்துமீறல், அடக்குமுறையை கையாண்டால் போராட்டம் தீவிரமடையும் என்றும், அரசுக்கும், ஜாக்டோ ஜியோவுக்கும் இது இறுதிப்போர் என்றும் ஜாக்டோ ஜியோ அமைப்பு திட்டவட்டமாக அறிவித்துள்ளது.
ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உட்பட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, ஜாக்டோ - ஜியோ அமைப்பினர், ஜனவரி 22 முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டத்தால் தமிழகம் முழுவதும் உள்ள அரசு அலுவலகங்கள், பள்ளிகளில் பணிகள் முடங்கிவிட்டன.
தினந்தோறும் ஆர்ப்பாட்டம், மறியல் உள்ளிட்ட போராட்டங்களில் தமிழகம் முழுவதும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஈடுபட்டுவருகின்றனர். வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள், ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்தது. போராட்டத்தில் ஈடுபட்ட நூற்றுக்கணக்கான ஆசிரியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை
பணிக்கு மீண்டும் திரும்பினால் ஏற்கனவே பணியிடங்களை வழங்காமல் வேறு இடங்களுக்கு பணியிட மாற்றவும் முடிவு செய்திருப்பதாக பள்ளி கல்வித் துறை ஆசிரியர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. போராட்டக்காரர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தாமல், அடுத்த கட்ட நடவடிக்கைகளில் தமிழக அரசு தீவிரமாக இறங்கி உள்ளது.
ஜாக்டோ ஜியோ பேட்டி
இந்நிலையில் ஜாக்டோ ஜியோ அமைப்பின் செய்தி தொடர்பாளர் தியாகரான் சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது: ஊதியத்துக்காக போராடுவது போன்று மக்களிடம் எங்களை அரசு சித்தரிக்கிறது. ஆனால் உண்மை அதுவல்ல.
அரசு கூறுவதில் உண்மையில்லை
நாங்கள் நடத்துவது ஓய்வூதியத்துக்கான போராட்டமாகும். இப்போது போராடிக் கொண்டிருக்கும் பலரும் 2023ம் ஆண்டுக்கு பிறகுதான் ஓய்வுபெறுகின்றனர். எனவே இப்போது நிதிச்சுமை இருப்பது போல அரசு கூறுவதில் உண்மையில்லை.
அடக்குமுறையை ஏற்க முடியாது
நிதி சாராத எந்த கோரிக்கைகளையும் அரசு செவிசாய்க்கவில்லை. எங்களை அழைத்து அரசு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். அதை விடுத்து காலி பணியிடங்களாக அறிவிக்கப்படும் என்பது அடக்குமுறை. அதை ஏற்கமுடியாது. தொழிற்சங்கங்களும் போராட்டத்துக்கு ஆதரவு அளித்துள்ளன.
இறுதிப்போர் என்று அறிவிப்பு
எனவே, எங்களின் நியாயமான கோரிக்கைளை உணர்ந்து, தமிழக அரசு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். பள்ளிக்கல்வித்துறையின் அத்துமீறல், அடக்குமுறையை ஏற்க முடியாது.இப்போது நடைபெற்றுக் கொண்டிருப்பது இறுதிப்போர்.
போராட்டம் தொடரும்
தமிழக அரசுக்கு, ஜாக்டோ ஜியோ அமைப்புக்கான இந்த போரில் பேச்சுவார்த்தையை தொடங்காத வரையில் போராட்டத்தை கைவிட முடியாது. இந்த இறுதிப்போரில் ஜாக்டோ ஜியோ அமைப்புக்கு வெற்றி உறுதி என்று கூறினார்.