வெள்ளநீரை அகற்றச் சொன்னது ஒரு குத்தமா? போராடிய பொதுமக்களுடன் மல்லுக்கட்டிய திமுகவினர்!
சென்னை: சென்னை மந்தவெளியில் சாலையில் தேங்கி நிற்கும் மழைநீரை அகற்றக்கோரி போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களை அப்பகுதி திமுகவினர் சிலர் கலைந்து செல்லக் கூறி தாக்கிய நிகழ்வு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.
கடந்த 4 நாட்களாக சென்னையில் கொட்டித்தீர்த்த கனமழையால் நகரின் பல்வேறு இடங்கள் தண்ணீரால் சூழப்பட்டுள்ளன. சென்னை மாநகராட்சி நிர்வாகம் சார்பில் சாலைகளில் தேங்கி நிற்கும் மழைநீரை அகற்ற முழு வீச்சில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர்.

இதுமட்டுமல்லாமல் பாதிக்கப்பட்ட பொதுமக்களை நேரில் சந்தித்து அவர்களின் தேவைகளை உடனுக்குடன் நிறைவேற்றி வருகிறார் முதலமைச்சர் ஸ்டாலின். ஒரு மேயர் செய்ய வேண்டிய பணிகளை ஒரு மாநிலத்தின் முதலமைச்சர் செய்ததால், நாடு தழுவிய அளவில் ஸ்டாலினுக்கு இமேஜ் உயர்ந்ததோடு மக்கள் மத்தியிலும் நற்பெயர் கிடைத்தது.
இப்படிப்பட்ட சூழலில் திமுகவில் உள்ள சில ஆர்வக்கோளாறு நிர்வாகிகளால் முதலமைச்சர் ஸ்டாலினின் பெயருக்கும் சேர்ந்து களங்கம் ஏற்பட்டுவிடும் போல். அப்படித்தான் சென்னை மந்தவெளியில் நடைபெற்ற ஒரு நிகழ்வு அமைந்துள்ளது.
சென்னை மந்தவெளி செயிண்ட் மேரிஸ் சாலை பகுதியில், தேங்கி நிற்கும் மழைநீரை அகற்றக்கோரி அப்பகுதி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாநகராட்சி அதிகாரிகளின் கவனத்தை ஈர்க்கும் வகையில் அவர்கள் போராட்டம் நடத்திக்கொண்டிருந்த சூழலில், அப்பகுதி திமுகவினர் சிலர் போராட்டத்தை கலைத்துவிட்டு செல்லுமாறு அறிவுறுத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.
இருப்பினும் உரிய அதிகாரிகள் நிகழ்விடத்துக்கு வரும் வரை போராட்டத்தை கைவிடமாட்டோம் என போராட்டக்காரர்கள் உறுதியாக கூறியதாக தெரிவிக்கப்படுகிறது. இதனால் மந்தவெளி பகுதி திமுகவினர் சிலருக்கும் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களுக்கு வாக்குவாதம் ஏற்பட்டு அது கைகலப்பு வரை சென்றதாக தெரிகிறது.

இதையடுத்து அங்கிருந்த போக்குவரத்துக் காவலர் ஒருவர் இந்த மோதலை தடுத்து நிறுத்தி இருதரப்பையும் சமாதானம் செய்து நிலைமையை சுமூகமாக்கினார். மக்களின் நன்மதிப்பை தக்க வைப்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மிகுந்த சிரமேற்கொண்டு பணிகள் ஆற்றி வரும் சூழலில், இது போன்ற நிகழ்வுகளால் ஒட்டுமொத்தமாக திமுகவின் பிம்பத்திற்கு இழுக்கு ஏற்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை மந்தவெளி செயிண்ட் மேரிஸ் சாலையில் நடந்த போராட்டத்தை போல் மாநகரின் பல்வேறு இடங்களில் மீட்பு பணிகளை விரைந்து செய்யக்கோரி போராட்டங்கள் நடைபெற்றதும் மாநகராட்சி அதிகாரிகள் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்துவதும் தொடர்கிறது.












Click it and Unblock the Notifications