விஜய் பிரசாரத்தை முடக்கவே சாலையில் பள்ளம் தோண்டப்பட்டதா? என்ன நடந்தது தெரியுமா? மாநகராட்சி விளக்கம்
சென்னை: விஜய் இன்று பெரம்பூரில் பிரச்சாரம் செய்ய இருந்த நிலையில் தேர்தல் ஆணையம் இதற்கு அனுமதி மறுத்துவிட்டது. இதற்கு தவெக தலைவர் விஜய் கடும் கண்டங்களை தெரிவித்து இருந்தார். தமிழக வெற்றிக் கழகத்தைக் கண்டு தி.மு.க. எந்த அளவிற்கு அஞ்சுகிறது என்பதற்கு இந்தத் தடையே சாட்சி என்றும் கூறி இருந்தார். இந்த நிலையில் இதற்கு மாநகராட்சி விளக்கம் அளித்துள்ளது.
தமிழக சட்டசபை தேர்தல் நெருங்கும் நிலையில், புதிதாக கட்சி ஆரம்பித்துள்ள விஜய் வேட்பாளர்களை இறுதி செய்யும் பணிகளில் தீவிரமாக இறங்கி உள்ளார். அதே சமயம் அவர் தன் பிரச்சாரத்தையும் தொடங்க இருக்கிறார். இன்று சென்னையின் 5 இடங்களில் விஜய் பிரச்சாரம் செய்ய திட்டமிட்டு இருந்தார். இதற்காக தேர்தல் ஆணையத்திடமும் அனுமதி கேட்டிருந்தார்.

விஜய் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு
காலை 10 மணிக்கு பெரம்பூரின் எம்.கே.பி நகரின் பஸ் டெப்போ அருகேயும், அடுத்ததாக கொளத்தூரின் செந்தில் நகரிலும், வில்லிவாக்கம் ஐ.சி.எஃப் சிக்னல் அருகேயும், அண்ணாநகர் ரவுண்டானாவிலும், கோயம்பேடு மேம்பாலம் அருகேயும் என 5 இடங்களில் விஜய் பேச இருந்ததாக கூறப்பட்டது. இந்நிலையில் யாரும் எதிர்பார்க்காத வகையில் பெரம்பூரில் நடத்த திட்டமிட்டிருந்த தவெக தலைவர் விஜய் பிரசாரத்திற்கு காவல்துறை அனுமதி மறுத்துவிட்டது.
தவெக தேர்வு செய்த இடம் நெருக்கடியான இடம் என்பதால் பிரச்சாரம் நடத்த காவல்துறை அனுமதி மறுத்துள்ளது. 300 பேர் கூடக்கூடிய இடத்தில் 3,000 பேர் கூடினால் அசம்பாவிதம் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் தேர்தல் ஆணையம் அனுமதி மறுத்ததாக கூறப்பட்டது. மாற்று இடம் கோரி காவல்துறையிடம் விண்ணப்பிக்க தவெகவுக்கு அறிவுறுத்தப்பட்டது. இதற்கு உடனே விஜய்யும் பதில் அளித்து இருந்தார்.
விஜய் கண்டனம்
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் திட்டமிடப்பட்ட பரப்புரைக்கு காவல் துறை அதிகாரிகள் இணைந்து முட்டுக்கட்டை போட்டிருப்பது ஜனநாயகத்தின் மீது நடத்தப்பட்டுள்ள பாசிச தாக்குதல்.
தேர்தல் பரப்புரை நிகழ்வுக்கு ஒரு நாளுக்கு முன்பு சென்னை மாநகராட்சி சார்பில் திடீரென அந்த இடத்தில் பள்ளம் தோண்டப்பட்டு, இரும்பால் ஆன தடுப்புகள் வைக்கப்பட்டுள்ளன. இந்த திடீர்ப் பள்ளங்களும் தடுப்புகளும் எங்கிருந்து வந்தன? தமிழக வெற்றிக் கழகத்தைக் கண்டு தி.மு.க. எந்த அளவிற்கு அஞ்சுகிறது என்பதற்கு இந்தத் தடையே சாட்சி என்று தவெக தலைவர் விஜய் விமர்சித்து இருந்தார்.
சென்னை மாநகராட்சி விளக்கம்
தற்போது மாநகராட்சி இது தொடர்பாக விளக்கம் அளித்துள்ளது. சென்னை மாவட்ட தேர்தல் அலுவலர் விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக கூறப்பட்டிருப்பதாவது:- சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பெரம்பூர் சட்டமன்ற தொகுதி, முல்லை நகர் பகுதியில் ஒரு அரசியல் கட்சியின் கூட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டதாகவும், மாநகராட்சியால் திடீரென பணிகள் மேற்கொள்ளப்பட்டு அனுமதி வழங்காத சூழல் ஏற்படுத்தப்பட்டதாகவும் சில ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.
இவ்விடத்தில் பெருநகர சென்னை மாநகராட்சியால் எந்தப் பணிகளும் மேற்கொள்ளப்படவில்லை மற்றும் புதிய பணிகள் எதுவும் ஆரம்பிக்கப்படவும் இல்லை. சென்னை குடிநீர் வாரியத்தால் குடிநீர் குழாயில் ஏற்பட்ட திடீர் உடைப்பை சரிசெய்ய மிகக் குறுகிய பரப்பளவில் பழுதுபார்க்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, அவையும் உடனடியாக நிறைவு செய்யப்பட்டுள்ளன.
எனவே, அரசியல் கட்சியின் கூட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டதற்கு மேற்கண்ட பணிகள் காரணமாக காட்டப்படுவது முற்றிலும் தவறான தகவலாகும். கூட்டத்திற்கான அனுமதி மறுக்கப்பட்டதற்கான காரணங்கள் தேர்தல் நடத்தும் அலுவலரின் ஆணையில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது என்ற தகவல் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது" என்று கூறியுள்ளது.












Click it and Unblock the Notifications