Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

“திருவள்ளுவர் கறுப்பா? சிவப்பா? தாடி இருந்ததா?” - பக்தவத்சலம் ஆட்சியில் நடந்த சர்ச்சை!

Subscribe to Oneindia Tamil

சென்னை: திருவள்ளுவர் பற்றிய அரசியல் சர்ச்சை இன்று நேற்றல்ல, பக்தவச்சலம் காலத்திலும் எழுந்தது. தமிழ்நாட்டின் முதல்வராக பக்தவத்சலம் இருந்த காலத்தில் நடைபெற்ற இந்தி எதிர்ப்புக்குப் பின் நடந்த விவாதங்கள் என்ன? திமுக ஏன் போராட்டம் நடத்தியது? என்பதை எல்லாம் இந்தக் கட்டுரையில் பார்க்கலாம்..

முதல்வர் பதவியை காமராஜர் ராஜினாமா 1963 செப்டமர் மாதம் ராஜினாமா செய்ததை அடுத்து, திரை நட்சத்திரங்களான சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன், இயக்குநர் ஸ்ரீதர், கவிஞர் கண்ணதாசன் ஆகியோர் சந்தித்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். அதுவரை திரையுலக எதிரி என நம்பிக்கொண்டிருந்த காமராஜர், "மக்களிடம் நாட்டுப் பற்றை வளர்க்க சினிமா தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் ஒத்துழைக்க வேண்டும்" என்றார் காமராஜர். இயக்குநர் ஸ்ரீதர், தனக்கு அடுத்த மாதம் கல்யாணம் நீங்கள் கலந்துகொள்ள வேண்டும் என்றார்.

Was Thiruvalluvar black Red Did he have a beard controversy during the Bhaktavatsalam regime

ஒரு பக்கம் காமராஜர் முதல்வர் பதவியை இழந்திருந்தார்; மற்றொரு பக்கம் அகில இந்தியக் காங்கிரஸ் கட்சியின் தலைவராக முன்னேறி இருந்தார். ராஜாஜி ஆட்சிக்காலத்தில் இருந்து அமைச்சர் நாற்காலியை விடாமல் தற்காத்து வந்தவர் பக்தவத்சலம். விவசாயத் துறை அமைச்சர், பொதுப்பணித்துறை அமைச்சர், கல்வி அமைச்சர், உள்துறை அமைச்சர், நிதியமைச்சர் எனப் படிப்படியாக முன்னேறி வந்த பக்தவத்சலம் முதன்முறையாகத் தமிழ்நாட்டிற்கு முதல் அமைச்சரானார். 1963 அக்டோபர் 2 ஆம் தேதி காந்தி ஜெயந்தி அன்று பிற்பகல் 2:15க்கு முதலமைச்சராக பக்தவத்சலம் பதவி நாற்காலியில் அமர்ந்தார். கக்கன் உள்துறை அமைச்சரானார். ஆர்.வெங்கட்ராமன் அமெரிக்கா சென்றுள்ளதால் அவர் பதவியேற்கவில்லை.

பதவியைத் தூக்கி எறிந்த காமராஜர் துணிச்சல் குறித்துப் பேசிய நேரு, "எளிய குடும்பத்தில் தோன்றிய காமராஜர் எளிமையாகவே வாழ்க்கை நடத்துகிறார். ஆங்கில மொழி ஞானம் அவருக்குச் சொற்பமாக இருந்தபோதிலும் நிர்வாகத்தைத் தமிழில் நடத்தி வந்தார். மந்திரி சபையிலும், கட்சியிலும் ஒற்றுமையை நிலைநிறுத்தி வந்தார்" என்று காந்தி ஜெயந்தி விழாவில் பேசினார்.

ஆட்சி அதிகாரத்தை ஒப்படைத்த காமராஜர், தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சியை வளர்ப்பதற்காக மாநில முழுக்க சுற்றுப் பிரயாணம் செய்ய மேற்கொள்ளப் போவதாக அறிவித்தார். முதலில் தஞ்சாவூர் ஜில்லாவுக்குச் செல்ல தீர்மானித்தார். அப்போது மாநில தலைவராக ஆர்.கிருஷ்ணசாமி நாயுடு இருந்தார்.

திருவள்ளுவருக்குத் தாடி உண்டா?

இன்றைக்குத் திமுக தலைவர் ஸ்டாலினுக்கும் அவரது ஆட்சியில் ஆளுநராக இருந்த ஆர்.என்.ரவிக்கும் இடையே திருவள்ளுவர் ஒரு சர்ச்சை பொருளாக மாறினார். திருவள்ளுவர் உருவத்திற்குக் காவி உடையை அணிவித்தார். திருக்குறளை மொழிபெயர்த்த ஆங்கிலேயர்கள் அதிலிருந்த ஆன்மிக கருத்துகளைத் திரித்துக் கூறிவிட்டனர் என்றார் ஆளுநர் ஆர்.என். ரவி. அதற்கு திமுக தக்க பதிலடி கொடுத்தது.

இதேபோல் முன்னாள் முதல்வர் பக்தவத்சலம் ஆட்சியிலும் திருவள்ளுவர் தாடி வைத்திருந்தாரா? என ஒரு சர்ச்சைக் கிளம்பியது. அது பற்றி 'சுதேசமித்திரன்'அக்டோபர் 9, 1963 பத்திரிகையில் செய்தி வெளியானது. அன்றைய முதல்வர் பக்தவத்சலம் "வள்ளுவர் பற்றி வீண் சர்ச்சை வேண்டாம்" என்று சட்டக்கல்லூரியில் நடந்த விழாவில் பேசினார்.

வள்ளுவர் கறுப்பா? சிவப்பா?

"திருவள்ளுவருக்குத் தாடி இருந்ததா இல்லையா? அவர் கறுப்பா, சிவப்பா? அவர் எந்தக் கல்லூரியில் படித்தார் என்பது போன்ற சர்ச்சைகளை எழுப்ப வேண்டாம். வீணான கேள்விகளைக் கிளப்பிக் குழப்பத்தை நமக்குள் உண்டாக்கிக் கொள்ள வேண்டாம். ஒப்புயர்வற்ற குறளை வள்ளுவர் உலகத்துக்கு அளித்திருக்கிறார். அந்த அறிவுக் களஞ்சியத்தை நன்கு படித்து உணர்ந்துகொள்ள வேண்டும்" என்றார் பக்தவத்சலம்.

வள்ளுவர் படத்தைத் திறந்து வைத்துப் பேசிய அவர், 2000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த வள்ளுவரை ஒருவரும் போட்டோ எடுக்கவில்லை என்றும் உருவத்தைக் கற்பனை செய்து வணங்கும் பழக்கம் நம் நாட்டில் எப்பொழுதும் உண்டு என்றும் உருவங்களைக் காணும்போது நல்ல, சிறந்த சிந்தனைகளை மனதில் எழுதும் என்றும் தெரிவித்திருந்தார்.

அகில இந்தியக் காங்கிரஸ் கட்சித் தலைவராக காமராஜர் டெல்லிக்குச் சென்றுவிட்டதால், அவருக்குத் தமிழ்நாட்டில் ஒரு கிளை அலுவலகம் தொடங்கப்படுமா? எனப் பேச்சுக்கள் எழுந்தன. அதற்கு இல்லை என்று முற்றுப்புள்ளி வைத்துவிட்டார் காமராஜர்.

1963 அக்டோபர் காலை திமுக அண்ணா தலைமையில் 'என்.எஸ்.கே. நினைவு மன்றம்' இருந்த ராயபுரம் சூரியநாராயண செட்டி தெருவிலிருந்து கிளம்பி முக்கிய வீதி வழியாக இந்தி எதிர்ப்புக்கு எதிராக நடத்தப்பட்ட நுங்கம்பாக்கத்தில் போடப்பட்டிருந்த மாநாட்டுப் பந்தலை வந்தடைந்தது. அதற்கு முதல்வர் பக்தவத்சலம், "திமுகவினர் என்ன கேட்கின்றனர்? கோரிக்கை என்ன? கோரிக்கை இல்லாத போராட்டமாக அல்லவா தோன்றுகிறது. ஆட்சி மொழி பற்றிய ஷரத்தை எரிக்க வேண்டும் என்கிறார்கள். புதிய திருத்தப்பட்ட ஆங்கிலம் நீடிக்க வேண்டும் என்றுதானே அந்த ஷரத்து கூறுகிறது? அதை ஏன் எரிக்க வேண்டும்? அரசியல் சட்டத்தைக் கொளுத்துவது சட்டப்படிக் குற்றமாகும்" என விளக்கம் அளித்திருந்தார்.

தடையை மீறுவோம்?

திமுகவின் போராட்டத்திற்குத் தடை விதிக்கப்படலாம் என்ற வதந்தி பரவியது. தடைவிதிப்பு வருமா? அது பற்றி அண்ணாதுரை, "திமுக நடத்தவிருக்கும் போராட்டத்திற்கு அரசாங்கம் தடை வித்தாலும் ஒரே அடியாக நீண்டகாலத்திற்குத் தமிழகம் முழுவதும் அந்தத் தடை அமுலில் இருக்காது. நாடு முழுவதிலும் திமுக போராட்டத்திற்குத் தடை விதித்தால், தடையை மீறுவது சம்பந்தமாக ஆலோசனை செய்வோம்" என்றார் அவர்.

திமுக இந்தி எதிர்ப்பு பற்றி சோஷலிஸ்டு கட்சித் தலைவர் ராம் மனோகர் லோஹியா நடைமுறைக்கு ஒவ்வாத ஒரு யோசனையைச் சொன்னார். முதலில் ஆங்கிலம் ஒழிய வேண்டும் என்றும் பிறகு வங்காளம், தமிழ்நாடு, கேரளம், மகாராஷ்டிரம் போன்ற கடலோரப் பகுதி மாநிலங்கள் ஒரு பொதுமொழியைத் தேசிய மொழியாகத் தேர்ந்து எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் உத்தரப் பிரதேசம், பீகார் போன்ற மத்தியில் உள்ள பிரதேசங்கள் இந்தியை தங்களின் ஆட்சி மொழியாகக் கொள்ளலாம் என்றும் சொன்னார்.

"அரசுக்குத் தொல்லைக் கொடுக்கவே திமுக ஹிந்தி எதிர்ப்புப் போராட்டம். ஆங்கிலம் நீடிக்கும்போது ஹிந்தி திணிப்பு எங்கு வந்தது. மக்களை ஏமாற்றக்கூடாது" என உள்துறை அமைச்சராக இருந்த கக்கன் கண்டனம் தெரித்தார்.

"ஆட்சிமொழி பற்றிய தீர்மானம் பேசப்பட்டபோது நானும் அரசியல் நிர்ணய சபையிலிருந்தேன், 1965 ஆம் வருஷத்திலிருந்து ஹிந்தி மட்டுமே ஆட்சிமொழி என்று போடப்பட்டது. இப்பொழுது அது 1975 வரை தள்ளிப் போடப்பட்டிருக்கிறது. அதுவரை ஆங்கிலமே தொடர்வது என முடிவு செய்யப்பட்டது. இதைத்தான் இந்தி திணிப்பு என்கிறார்கள். 75க்குப் பிறகு நாடாளுமன்றம் கூடி விவாதித்துத்தான் முடிவு எடுக்கப்போகிறார்கள். அனைத்து மாநிலங்களின் முடிவைப் பெற்ற பின்னரே முடிவு செய்வார்கள். ஜனநாயகத்தில் மக்கள் விருப்பம்தானே வெல்லும்?" என்று கேள்வி எழுப்பி இருந்தார் அவர்.

- எழுதியவர் கடற்கரய்

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+