குடிநீர் வரியில் கை வெச்சிட்டாங்களா? சத்தமின்றி கட்டணம் உயர்வு? யார் போட்ட ஸ்கெட்ச்.. தமிழகம் ஷாக்
சென்னை: தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்து, மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அரசியல் கட்சியினர் தீவிரப் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள சூழலில், நகராட்சி மற்றும் மாநகராட்சி நிர்வாகங்கள் ரகசியமாக குடிநீர் கட்டணத்தை உயர்த்தி வருவதாக எழுந்துள்ள புகார், சோஷியல் மீடியாவில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. குறிப்பாக, சொத்து வரி உயர்வினைத் தொடர்ந்து, அதனுடன் தொடர்புடைய குடிநீர் கட்டணமும் தானியங்கி முறையில் மாற்றியமைக்கப்படுவது நடுத்தர வர்க்கத்தினரிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது... இது உண்மையா?
தமிழக அரசு கடந்த 2022ம் ஆண்டு நிலங்களுக்கான சொத்து வரியை நூறு சதவீதத்திற்கும் மேலாக உயர்த்தியது. இதனைத் தொடர்ந்து, ஆண்டுதோறும் 6 சதவீத வரியை உயர்த்திக் கொள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கு அனுமதி அளித்து 2024ல் அரசாணை வெளியிடப்பட்டது.

குடிநீர் கட்டணம்
இந்த வரி உயர்வின் அடிப்படையில், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் குடிநீர் கட்டணத்தையும் உயர்த்தி வருகின்றன. பொதுவாக, சென்னை தவிர்த்த பிற பகுதிகளில் குடிநீர் வடிகால் வாரிய விதிகளின்படி, வீடுகளில் பொருத்தப்பட்டுள்ள மீட்டர் அளவீட்டின் படியே கட்டணம் வசூலிக்கப்பட வேண்டும். ஆனால், பல இடங்களில் மீட்டர்கள் முறையாக செயல்படாத காரணத்தால், சொத்து வரி மதிப்பில் 1.5 சதவீதம் என்ற விகிதத்தில் குடிநீர் கட்டணம் நிர்ணயிக்கப்படுகிறது.
இந்த நடைமுறையில் மாற்றம் செய்ய வேண்டுமானால், அந்தந்த மாநகராட்சி அல்லது நகராட்சி மன்றக் கூட்டங்களில் தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும் என்பது விதி.
தேர்தல் களேபரம்
ஆனால், தற்போதைய தேர்தல் நெருக்கடியில் அத்தகைய முறையான அறிவிப்புகள் எதுவுமே இல்லாமல், அதிகாரிகள் தன்னிச்சையாகக் கட்டணத்தை உயர்த்தி கணினியில் பதிவேற்றம் செய்துள்ளதாகக் குற்றம் சாட்டப்படுகிறது. இதற்கு உதாரணமாக சென்னைக்கு அருகில் உள்ள தாம்பரம் மாநகராட்சி சுட்டிக்காட்டப்படுகிறது.
அங்கு மாதம் 100 ரூபாய் என இருந்த கட்டணம், திடீரென 150 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. ஆன்லைன் மூலம் வரி செலுத்தச் சென்ற பொதுமக்கள், கட்டணம் அதிகரித்திருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்து விட்டார்களாம். இது குறித்துப் புகார் அளிக்கப்பட்ட பிறகு, தாம்பரத்தில் கட்டணம் பழைய நிலைக்கு மாற்றப்பட்டாலும், மற்ற உள்ளாட்சிகளிலும் இதே நிலை தொடருமோ என்ற அச்சமும் நிலவுகிறது.
குடிநீர் வரி உயர்வு உண்மையா
தேர்தல் பிஸியில் தலைவர்கள் இருக்கும் இந்த நேரத்தை பயன்படுத்தி, அதிகாரிகள் தன்னிச்சையான முடிவுகளை எடுத்துள்ளதாக ஒருசாரார் கூறுகிறார்கள்.. அதுமட்டுமல், சொத்து வரி உயர்வு குறித்த புகார்களே இன்னும் தீராத நிலையில், குடிநீர் கட்டணத்தையும் உயர்த்துவது என்பது பொதுமக்களை வாட்டி வதைப்பதாகும் என்றும், குடிநீர் விநியோகத்தைத் தனியார் மயமாக்கும் முயற்சியின் ஒரு பகுதியோ என்ற சந்தேகம் எழுவதாகவும் சமூக ஆர்வலர்கள் கூறுகிறார்கள்.
நகராட்சி அதிகாரிகள் விளக்கம்
ஆனால் நகராட்சி நிர்வாகத் துறை அதிகாரிகள் தரப்பில் இதை மறுக்கிறார்கள்.. இந்த விவகாரம் குறித்து விளக்கமும் தந்துள்ளனர்.. "மாநில அளவில் குடிநீர் கட்டணத்தை உயர்த்துவது தொடர்பாக எந்தவிதமான அதிகாரப்பூர்வ உத்தரவும் இப்போது வரை பிறப்பிக்கப்படவில்லை. சில உள்ளாட்சி நிர்வாகங்கள் தன்னிச்சையாக இத்தகைய நடவடிக்கையில் இறங்கியதாகப் புகார்கள் வந்துள்ளன.
இது குறித்துத் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எதன் அடிப்படையில் இந்த மாற்றம் செய்யப்பட்டது என்பது குறித்த விரிவான அறிக்கை கோரப்பட்டுள்ளது" என்று நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
எது எப்படியோ, நிர்வாக ரீதியான தானியங்கி மாற்றமா அல்லது அதிகாரிகளின் உள்நோக்கத்துடன் கூடிய செயல்பாடா என்ற 2 வேறு கருத்துகளுக்கு இடையே, சாதாரண மக்கள் தேவையற்ற நிதி நெருக்கடிக்கு ஆளாகக்கூடாது என்பதே தற்போதைய பொதுவான எதிர்பார்ப்பாக உள்ளது. அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் என 2 தரப்புக்கும் இடையிலான இந்த முரண்பாடு, வரும் நாட்களில் உரிய விசாரணை மூலம் சரி செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications