ஆமா, தேமுதிகவுடன் பேசி வருகிறோம்.. உறுதிப்படுத்திய தினகரன்!
சென்னை: தேமுதிகவுடன் கூட்டணி குறித்துப் பேசி வருவதாக அமமுக நிர்வாகிகளிடம் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
அதிமுக கூட்டணியில் இடம் பெற்றிருந்த கட்சி தேமுதிக. சட்டசபைத் தேர்தலில் அக்கட்சி 41 தொகுதிகளை அதிமுகவிடம் எதிர்பார்த்தது. ஆனால் 3 சதவீதத்திற்கும் குறைவான வாக்குகளை வைத்துள்ள தேமுதிகவுக்கு அத்தனை சீட் தர அதிமுக விரும்பவில்லை. மாறாக 13 சீட்களைத் தருகிறோம். இதற்கு ஓகே என்றால் பேசலாம் என்று கூறி விட்டது.

இதனால் அதிர்ச்சி அடைந்த தேமுதிக கூட்டணியை விட்டு விலகியது. ஆனால் அடுத்து என்ன செய்யப் போகிறோம் என்று அது அறிவிக்காமல் உள்ளது. இந்த நிலையில் அதிமுகவிலிருந்து விலகிய அக்கட்சி தற்போது, ஏற்கனவே அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டு தனியாக கட்சி நடத்தி வரும் தினகரனுடன் பேச்சுவார்த்தையில் இறங்கியுள்ளது.
இந்தத் தகவல் முதலில் உறுதிப்படுத்தப்படாமல் இருந்தது. ஆனால் தற்போது பேச்சுவார்த்தை நடந்து வருவது உண்மைதான் என்று அமமுக நிர்வாகிகளிடம் தினகரனே தெரிவித்துள்ளதாகவும், விரைவில் கூட்டணி இறுதியாகும் என்று தெரிவித்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதனால் வருகிற சட்டசபைத் தேர்தலில் கண்டிப்பாக தேமுதிக தனித்துப் போட்டியிடாது என்று தெரிய வந்துள்ளது. அக்கட்சித் தொண்டர்கள் மீண்டும் தனித்துப் போட்டியிட வேண்டும் என்று தொடர்ந்து கூறி வருகின்றனர். கட்சித் தலைவர் விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரனும் கூட சிங்கம் வெளியே வந்து விட்டது இனி தனித்துதான் போட்டி என்றும் பேசி வருகிறார். இந்த நிலையில் அமமுகவுடன் தேமுதிக பேசி வரும் தகவல்கள் வெளியாகியுள்ளன.












Click it and Unblock the Notifications