எதிர்க்கட்சிகள் பற்றி கவலையில்லை.. மக்கள் திருப்தியாக இருக்கிறார்கள்.. சீர்காழியில் மு.க.ஸ்டாலின்!
சென்னை: கனமழை பாதிப்புகள் தொடர்பாக எதிர்க்கட்சிகள் விமர்சனம் பற்றி கவலையில்லை என்றும், மக்கள் திருப்தியாக இருப்பதாகவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக டெல்டா மாவட்டங்களில் அதிக அளவில் கனமழை பெய்து வருகிறது.
அதில் மயிலாடுதுறை, கடலூர், பூம்புகார், சீர்காழி பகுதிகளில் அதிக கனமழை பெய்துள்ளன. சீர்காழியில் மட்டும் 122 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் சீர்காழி பகுதியில் திரும்பிய திசையெல்லாம் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது.

கடுமையான பாதிப்பு
கனமழையின் காரணமாக மயிலாடுதுறை, கடலூர் மாவட்டங்களின் பல பகுதிகள் முழுவதும் வெள்ளக்காடாக மாறி உள்ளன. மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. மழையால் நீர் நிலைகள் நிரம்பி குடியிருப்பு பகுதிகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் மக்கள் கடும் துயரங்களுக்கு ஆளாகி வருகிறார்கள். அதிலும் பூம்புகார், சீர்காழி பகுதிகளில் அதிக கனமழை பெய்துள்ளன.

முதல்வர் ஸ்டாலின் ஆய்வு
இந்த நிலையில் கடலூர் மாவட்டங்களில் கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார். கடலூர் மாவட்டத்தை தொடர்ந்து மயிலாடுதுறை மாவட்டத்தில் மழை வெள்ள பாதிப்புகளை நேரில் பார்வையிட்டார். பின்னர் சீர்காழி பகுதியில் மழை பாதிப்புகளை பார்வையிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கினார்.

மக்கள் திருப்தி
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறுகையில், பலர் நினைத்த மாதிரி மக்கள் எங்களுக்கு எதிர்ப்பையோ, கண்டனத்தையோ தெரிவிக்கவில்லை. மக்கள் திருப்தியாக இருக்கிறார்கள். தமிழ்நாட்டில் கனமழையால் மயிலாடுதுறை, சீர்காழி போன்ற பகுதிகளில் தான் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதனால் தான் முக்கியத்துவம் கொடுத்து உடனடியாக அமைச்சர்கள், எம்எல்ஏ-க்கள், அதிகாரிகளை அனுப்பி பணிகளை செய்துள்ளோம்.

சில குறைகள் உள்ளது
அதுமட்டும் போதாது என்று, நேற்று இரவே சென்னையில் இருந்து புறப்பட்டு, இன்று காலை ஆய்வு நடத்தினேன். இதுவரை செய்யப்பட்ட பணிகள் திருப்தியளிக்கிறது. மக்களும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். இன்னும் சில குறைகள் உள்ளது. அதனையும் அடுத்த சில நாட்களில் செய்து முடிப்போம். அதேபோல் பாதிக்கப்பட்ட விளை நிலங்கள் குறித்த கணக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது.

கவலையில்லை
எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்வதற்காக கேவலப்படுத்துவதற்காக அரசியல் செய்வதற்காக ஏதேதோ சொல்வார்கள். அதனைப் பற்றி நான் கவலைப்படவில்லை. மக்கள் என்ன எதிர்பார்க்கிறார்களோ, அதற்கேற்றபடி பாதிப்புகள் கணக்கெடுக்கப்பட்டு நிவாரணம் வழங்கப்படும் என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications