"யார் பின்னாடியும் போகமாட்டோம்”.. ஓபிஎஸ் முன்னிலையில் போட்டுத் தாக்கிய பண்ருட்டி ராமச்சந்திரன்!
சென்னை: "நாம் யார் பின்னாலும் செல்லப் போவதில்லை. நாம் யாரையும் எதிர்பார்த்து அரசியல் நடத்தவில்லை." என ஓபிஎஸ் அணியின் ஆலோசகர் பண்ருட்டி ராமச்சந்திரன், இன்று நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.
பாஜக, அதிமுக உடன் கூட்டணி அமைத்துள்ள நிலையில், அந்தக் கூட்டணியில் ஓபிஎஸ், டிடிவி தினகரன் உள்ளிட்டோர் இடம்பெறுவார்களா என்பதை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உறுதி செய்யவில்லை. இந்நிலையில் இன்று ஓபிஎஸ் அணி முக்கிய ஆலோசனை நடத்தி உள்ளது.

ஓபிஎஸ்
2024 மக்களவைத் தேர்தலில் அதிமுக தனித்துப் போட்டியிட்ட நிலையில், பாஜகவின் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அதிமுக தொண்டர்கள் மீட்புக்குழு ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் இணைந்தனர். அதிமுக கூட்டணியும், பாஜக கூட்டணியும் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. பாஜக கூட்டணியில் தனி சின்னத்தில் ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட்ட ஓ.பன்னீர்செல்வமும் தோல்வி அடைந்தார்.
இந்த நிலையில், அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுகவுடன் பாஜக கூட்டணி அமைத்துள்ளது. மேலும், தமிழகத்தில் அதிமுக தலைமையில்தான் தேசிய ஜனநாயகக் கூட்டணி போட்டியிடும் என்று பாஜக மூத்த தலைவர் அமித் ஷா அறிவித்துள்ளார்.
இன்று ஆலோசனை நடத்திய ஓபிஸ்
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அதிமுக தொண்டர்கள் மீட்புக்குழுவின் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் டிடிவி தினகரன் இடம்பெறுவார்களா என்ற கேள்வி எழுந்த நிலையில், இருவரும் தங்கள் கூட்டணியில்தான் இருக்கின்றனர் என்று பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்திருந்தார்.
அதேசமயம், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் ஓபிஎஸ் ஆதரவாளர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுவதில்லை என்று குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், சென்னை வேப்பேரியில் பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் இன்று முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டனர்.
பண்ருட்டி ராமச்சந்திரன் பேச்சு
இந்தக் கூட்டத்தில் பேசிய பண்ருட்டி ராமச்சந்திரன், "செப்டம்பர் 4ல் மதுரையில் மாநாடு நடைபெறுகிறது. 2026 தேர்தலில் தெளிவான முடிவை எடுக்கும் வகையில் செப்டம்பரில் மாநாடு நடைபெறும். அந்த மாநாட்டுக்கு முன்னோட்டமாக மாவட்டம் தோறும் கழக செயல்வீரர்கள் கூட்டம் நடத்தப்படும். மக்களை அழைத்து வருவதற்கான முன்னேற்பாடுகளைச் செய்வார்கள்.
அரசியல் பாதையில் முன்னோக்கி செல்வதற்காக மதுரையில் மாநாடு நடத்த முடிவு செய்துள்ளோம். நாம் யார் பின்னாலும் செல்ல போவதில்லை. நாம் யாரையும் எதிர்பார்த்து அரசியல் நடத்தவில்லை. ஏற்கனவே எல்லா பொறுப்புகளிலும் ஓபிஎஸ்ஸும் இருந்திருக்கிறார். நானும் இருந்திருக்கிறேன். நாங்கள் எல்லாம் எல்லா பதவிகளையும் பார்த்துவிட்டு வந்திருக்கிறோம்.
2026 தேர்தலில் தெளிவான முடிவை எடுக்கும் வகையில் செப்டம்பரில் மாநாடு நடைபெறும். தெளிவான தீர்மானத்தை தமிழ்நாட்டு மக்களுக்கு வழிகாட்டும் அளவிலே நம் முழக்கம் இருக்கும். நமது எதிர்காலத் திட்டம் இருக்கும். நமது கொள்கைப் பிரகடணம் இருக்கும். 2026 சட்டசபை தேர்தலில் வெற்றி நமதே." எனத் தெரிவித்துள்ளார்.
ஓபிஎஸ் பேச்சு
இந்த ஆலோசனைக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த ஓ.பன்னீர்செல்வம், "அதிமுகவை மீட்டெடுப்பதற்கான சட்டப்போராட்டத்தில் உடன் நின்ற அனைவருக்கும் நன்றி. அதிமுக மீட்டெடுப்பிற்கான சட்டப் போராட்டம் தொடரும். எதிர்காலத்தில் நமது நோக்கத்தை வென்றெடுப்போம். வரும் சட்டமன்ற தேர்தலில் அதிமுகவை ஆட்சியில் அமர்த்தவே தர்ம யுத்தத்தை நடத்திக் கொண்டிருக்கிறோம்.
சட்டமன்றத் தேர்தலில் மக்களின் நன்மதிப்பை பெற்றவர்கள் மட்டுமே முதலமைச்சராக ஆக முடியும். மேலும் பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது. ஆனால் சில முடிவுகளை வெளியே சொல்ல முடியாது. செப்டம்பர் 4 ஆம் தேதி மதுரையில் மாநில மாநாடு எனது தலைமையில் நடக்க உள்ளது. நமது எதிர்கால திட்டங்கள் என்ன என்பதை மதுரை மாநாட்டில் அறிவிப்பேன்" எனக் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications