திராவிட மாடல் ஆட்சி...அதிமுகவின் கோட்டை கொங்கு மண்டலத்தை கைப்பற்றியிருக்கிறோம் - ஸ்டாலின் பெருமிதம்
அதிமுகவின் கோட்டை என்று சொல்லிக்கொண்டிருக்கிற கொங்கு மண்டலத்தையே இன்று கைப்பற்றியிருக்கிறோம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
சென்னை: ஒன்பது மாத கால திராவிட மாடல் ஆட்சிக்கு மக்கள் கொடுத்த மகத்தான பரிசு என்று முதல்வரும் திமுக தலைவருமான மு.க ஸ்டாலின் கூறியுள்ளார். அதிமுகவின் கோட்டை என்று சொல்லிக்கொண்டிருக்கிற கொங்கு மண்டலத்தையே இன்று கைப்பற்றியிருக்கிறோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
நகர்புற உள்ளாட்சித்தேர்தலில் திமுக மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. அண்ணா அறிவாலயத்தில் கூடியிருந்த தொண்டர்கள் மத்தியில் பேசிய முதல்வரும் திமுக தலைவருமான மு.க ஸ்டாலின், நடந்து முடிந்துள்ள நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுக தலைமையிலான மதசார்பற்ற கூட்டணி மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது. இந்த வெற்றியை வழங்கிய தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றி என்று கூறினார்.
தமிழ்நாடு மக்களிடம் வேண்டுகோள் வைத்தேன். எங்கள் கூட்டணிக்கு முழு வெற்றியை தாருங்கள் அதை பயன்படுத்தி நாங்கள் தொண்டாற்ற காத்திருக்கிறோம் என்று சொன்னேன். அந்த முழு வெற்றியை நம்முடைய மதசார்பற்ற கூட்டணிக்கு மக்கள் அளித்துள்ளனர். கடந்த 9 மாத கால ஆட்சிக்கு மக்கள் வழங்கியிருக்கும் நற்சான்றுதான் இந்த மகத்தான வெற்றி என்றும் மு.க ஸ்டாலின் கூறினார்.

திராவிட மாடல் ஆட்சிக்கு அங்கீகாரம்
திராவிட மாடல் ஆட்சிக்கு மக்கள் கொடுத்திருக்கக் கூடிய அங்கீகாரம் இது என்று கூறினார் ஸ்டாலின், தொடர்ந்து பேசிய அவர் திமுகவிற்கு வாக்களித்தால் நிச்சயம் நன்மை செய்வார்கள் என்ற நம்பிக்கை மக்களிடம் உள்ளது. அந்த நம்பிக்கையை நாங்கள் கடந்த 9 மாத காலத்தில் நிறைவேற்றிக்கொண்டிருக்கிறோம்.

எனக்கு கர்வம் ஏற்படவில்லை
மக்கள் அடைவது பேரசை அல்ல உறுதிதான் என்று கூறிய ஸ்டாலின், இந்த வெற்றியைக் கண்டு நான் கர்வம் கொள்ளவில்லை என்று தெரிவித்தார். மக்கள் நம்மீது வைத்துள்ள நம்பிக்கையை காப்பாற்ற வேண்டும் என்ற உறுதிதான் எனக்கு வந்திருக்கிறது என்றார். என்னுடைய பொறுப்புகளை உணர்ந்து நம்முடைய அரசின் சார்பில் அதை நிறைவேற்றுவேன்.

கொள்கைக் கூட்டணி
இந்த வெற்றிக்கு மகத்தான காரணம் மதசார்பற்ற கூட்டணிதான் என்று கூறினார். இது தேர்தலுக்கான கூட்டணி மட்டுமல்ல கொள்கை அளவில் இணைந்த காரணத்தினால்தான் மாபெரும் வெற்றி பெற்றுள்ளது என்றார். நடந்து முடிந்து நாடாளுமன்ற தேர்தல், சட்டசபைத் தேர்தல், உள்ளாட்சித் தேர்தலில் மகத்தான வெற்றியை பெற்றுள்ளோம். கூட்டணி கட்சித்தலைவர்களின் தொடர் பிரச்சாரமும் ஒத்துழைப்பும்தான் வெற்றிக்கு காரணமாக அமைந்துள்ளது என்றார் ஸ்டாலின்.

உண்மையாக உழைக்க வேண்டும்
உள்ளாட்சி அமைப்புகளில் சரிபாதி பெண்கள் வெற்றி பெற்றுள்ளது மாபெரும் சமூக நீதி புரட்சியாகும். இது திராவிட மாடல் புரட்சி என்றும் கூறினார் மு.க ஸ்டாலின். வெற்றியை ஆடம்பரமாக கொண்டாட வேண்டாம் அமைதியாக கொண்டாடுங்கள் என்று கேட்டுக்கொண்டார். மக்களுக்கு உண்மையாக உழைக்க வேண்டும் உண்மையாக பாடுபட வேண்டும் மக்களின் அடிப்படை பிரச்சினைகளைத் தீர்த்து வைக்க வேண்டும் என்றார்.

மக்களுக்கு மகிழ்ச்சி
செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த மு.க ஸ்டாலின், எங்களுக்கு வாக்களிக்காத மக்கள் கூட வருத்தப்பட வேண்டும் அந்த அளவிற்கு எங்கள் பணி இருக்க வேண்டும் என்று உறுதி எடுத்துக்கொண்டேன் என்று கூறினார். 9 மாத காலமாக மக்களுக்கு பணியாற்றியதன் காரணமாகவே இவ்வளவு பெரிய வெற்றி கிடைத்திருக்கிறது என்றார். அதிமுகவின் கோட்டை என்று சொல்லிக்கொண்டிருக்கிற கொங்கு மண்டலத்தையே இன்றைக்கு கைப்பற்றியிருக்கிறோம் என்றும் மு.க ஸ்டாலின் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications