ரூ. 5.78 கோடி பூராம் காலி.. ஒத்த பைசா கிடையாது.. பகீர் கிளப்பும் ரயில் பெட்டி ஓட்டை கொள்ளையர்கள்!
பணத்தை செலவழித்து விட்டோம் என சேலம் கொள்ளையர்கள் வாக்குமூலம் தந்துள்ளனர்.
Recommended Video
சென்னை: "அத... செலவு பண்ணிட்டோம்.." என்று ஒருவழியாக வாயை திறந்து சொல்லி விட்டார்கள் சேலம் ரயில் கொள்ளையர்கள்.
சென்னை வந்த ரயிலில் ஓட்டையை போட்டு ரூ.5.78 கோடியை பக்கவாக பிளான் பண்ணி கொள்ளை அடித்த சம்பவம் நாட்டையே உலுக்கியது. இந்த கொள்ளையில் 7 பேரை போலீசார் கைது செய்தனர்.
5 பேரிடம் விசாரணை
இவர்களில் வடமாநில சிறைகளிலில் இருந்து 5 பேரை 14 நாளில் காவலில் எடுத்து சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர். கிட்டத்தட்ட 10 நாளாகிவிட்டது. ஒருத்தரும் பணத்தை பத்தி மூச்சுகூட விடாமல் இருந்தனர். இவர்களுக்கு இந்தி, மராத்தி மொழி மட்டும் தெரிவதால் அந்த மொழிகள் தெரிந்த அதிகாரிகள்தான் விசாரித்தார்கள்.
திணறடித்த கொள்ளையர்
ஆனால் விசாரணைக்கு அழைத்து வரும்போதும், திரும்ப கூட்டி செல்லும்போதும், இவர்களுக்குள் திடீர் திடீரென பார்த்தி மொழியில் பேசிக் கொள்வார்களாம். இந்தி மொழியே தெரிந்தாலும் வேண்டுமென்றே போலீசாரிடம் பார்த்தி மொழியை பேசி திசைதிருப்பி 10 நாளும் திணறடித்து வந்திருக்கிறார்கள்.
குலத்தொழில்
இப்படி புரியாத பாஷையில் பேசுவதால் இந்த மொழிபற்றி போலீசார் விசாரித்தனர். பிறகுதான் தெரிந்தது பார்த்தி மொழி பேசும் இனத்தவர்களின் தொழிலே கொள்ளைதானாம். திருட்டு, கொள்ளைதான். அதிலும் ரயில் கொள்ளை மாதிரியான விஷயங்கள் இவர்களுக்கு குலத்தொழில் மாதிரியாம். ரொம்ப புனிதமாக இந்த கொள்ளையை செய்வார்களாம்.
பணம் எங்கே?
இது போதாமல், ஆளுக்கொரு நாள் மயங்கி விழுவது, வயிறு வலி என்று சொல்லி போலீசாரை ஆஸ்பத்திரிக்கு அலைக்கழிக்க வைப்பது என்று டிராமா பண்ணி வந்திருக்கிறார்கள். இந்த பெட்டியில இவ்வளவு பணம் வருதுன்னு உங்களுக்கு யார் தகவல் தந்தது?, கொள்ளையடித்த பணத்தை என்ன பண்ணீங்க?" என்ற கேள்வியைதான் 10 நாளும் போலீசார் கேட்டு வந்திருக்கிறார்கள்.
ம.பி.யில் போலீசார்
அதுமட்டுமல்லாமல் எப்படியும் கொள்ளையடித்த பணம் குறித்து ஏதாவது தகவல் வரும், வந்தால் பணத்தை பறிமுதல் செய்துவிடலாம் என்று ஒரு கும்பல் மத்தியபிரதேசத்தில் 10 நாளாக காத்து கொண்டிருந்தது! ஆனால் 5 பேரும் ரொம்ப அலார்ட்டாக இருந்தார்கள். தப்பித்தவறி கூட உண்மையை பேசவில்லை. ஆனால் நம் போலீசார் ஓரளவு உண்மையை வாங்கியிருக்கிறார்கள்.
வாக்குமூலம்
கொள்ளை அடிக்கப்பட்ட ரூ.5.78 கோடி ரூபாயையும் செலவழித்து விட்டார்களாம். கையில் ஒரு ரூபாய் கூட இல்லையாம்... கொள்ளையடிக்கப்பட்ட 3 மாதங்களில் 2016 நவம்பர் 8ம் தேதி பணமதிப்பிழப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டதே... அதனால் பணத்தை மாற்ற முடியாமல் எங்கேயாவது மறைத்து வைத்திருக்கிறீர்களா என்று போலீசார் கேட்டனர். அதற்கு, "பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு முன்பே இந்த பணம் எல்லாத்தையும் செலவு பண்ணிட்டோம்" என்று வாக்குமூலமே தந்துள்ளனர்.
தங்கம், பொருட்கள்
எப்படி இவ்வளவு பணத்தையும் குறுகிய காலத்தில் செலவு செய்திருக்க முடியும் என்று யோசித்த போலீசார், அந்த பணத்தினை வைத்து தங்கம் உள்ளிட்ட ஏதாவது பொருட்களை வாங்கி வைத்திருக்கிறார்களா என்றும் விசாரித்து வருகிறார்கள்.
குற்றப்பத்திரிகை
ஏனெனில் அப்படி சொத்துக்கள், நகைகள் வாங்கியிருந்தால் அதை மீட்டு கொண்டுவந்தால்தான் குற்றத்தை நிரூபிக்க முடியும், இல்லாவிட்டால் போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதில் சிக்கல் வந்துவிடுமாம். இவ்வளவு முயற்சி செய்தும், கொள்ளையடித்த பணத்தில் கொஞ்சம்கூட மீட்க முடியாமல் உள்ளதே என போலீசார் திணறுகிறார்கள்.