எங்களுடைய நட்சத்திர பேச்சாளரை இழந்துள்ளோம்.. ஆளுநர் ஆர்.என்.ரவி டிரான்ஸ்பர் குறித்து திமுக
சென்னை: திமுகவிற்கு பிரச்சனை வரும் போது எல்லாம் ஆளுநர் ரவி உள்ளே வந்து விழுந்து திமுகவை காப்பாற்றி வந்ததாக கிண்டலான பதிவுகள் கடந்த 24 மணி நேரமாக அதிகமாக வந்துள்ளது. ஆனால் சட்டசபை தேர்தல் நெருங்கியுள்ள இந்த சூழலில், ஆளுநர் ரவி மேற்கு வங்கத்திற்கு மாற்றப்பட்டுள்ளார். இது திமுகவிற்கு பேரிழப்பு என்றும் திமுக ஆதரவாளர்களே கிண்டல் செய்து பதிவிட்டு வருகிறார்கள். இந்நிலையில் திமுகவின் மாநிலங்களவை எம்பியான மூத்த வழக்கறிஞரான வில்சனும் கிண்டல் செய்து பதிவிட்டுள்ளார். அதேநேரம் அந்த பதிவில் மேற்கு வங்கத்திற்காக வருத்தப்படுவதாக கூறியுள்ளார்.
ரவீந்திர நாராயண ரவியான ஆர்.என். ரவி கடந்த 2021-ஆம் ஆண்டு செப்டம்பர் 18-ஆம் தேதி தமிழகத்தின் 26-வது ஆளுநராகப் பொறுப்பேற்றார். அதற்கு முன்பாக அவர் நாகாலாந்து மாநில ஆளுநராகப் பணியாற்றினார். சுமார் 4 ஆண்டுகள் தமிழக ஆளுநராக நீடித்த அவரது பதவிக்காலம் மார்ச் 5, 2026 அன்றுடன் முடிவுக்கு வந்தது. பொதுவாக ஆளுநர்கள் பதவி காலம் முடிந்தால் பொறுப்பில் இருந்து விலக்கப்படுவார்கள். சிலர் மட்டும் விதிவிலக்காக ஆளுநராக தொடருவார்கள். அந்த வகையில் ஆளுநர் ரவி மேற்குவங்கத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

இடமாற்றத்திற்கான காரணம் என்ன
மத்திய அரசு வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, இது ஒரு வழக்கமான ஆளுநர்கள் இடமாற்ற நடவடிக்கை ஆகும். இருப்பினும், அரசியல் வட்டாரத்தில் பேசப்படும் முக்கிய காரணங்களும் இருக்கிறது. மேற்கு வங்க ஆளுநராக இருந்த சி.வி. ஆனந்த போஸ் திடீரென ராஜினாமா செய்ததை அடுத்து, அந்த இடத்திற்கு அனுபவம் வாய்ந்த ஒருவரை நியமிக்க வேண்டிய தேவை மத்திய அரசுக்கு நிலவியது.
மேற்கு வங்கத்திற்கு இடமாற்றம்
அதேபோல் தமிழகத்தில் நீட் விலக்கு மசோதா, பல்கலைக்கழகத் துணைவேந்தர் நியமனம் மற்றும் "தமிழகம்" சர்ச்சை எனத் தமிழக அரசுடன் தொடர்ச்சியான மோதல் போக்கு நிலவியது. எனவே 2026 சட்டமன்றத் தேர்தலை ஒட்டி, தமிழகத்தில் நிலவும் அரசியல் பதற்றத்தைக் குறைக்கவும், அதே சமயம் மம்தா பானர்ஜி ஆளும் மேற்கு வங்கத்தில் ஒரு வலுவான ஆளுநரை நியமிக்கவும் மத்திய அரசு இந்த முடிவை எடுத்ததாகக் கருதப்படுகிறது. கேரள ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் அவர்களுக்குத் தமிழக ஆளுநர் பொறுப்பு கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது. ஆர்.என். ரவி மார்ச் 6, 2026 முதல் மேற்கு வங்க ஆளுநராகப் பொறுப்பேற்றுள்ளார்.
திமுகவிற்கு சாதகமாக இருந்தது
இதனிடையே திமுகவின் மூத்த நிர்வாகிகள் சிலர் "எங்கள் கட்சியின் ஸ்டார் பிரசாரகரை (ஆளுநர் ரவி) இழந்துவிட்டோம்" என்று கிண்டலாகக் கூறிவருகிறார்கள். திமுகவினர் மட்டுமல்ல, நாம் தமிழர் கட்சியினர் கூட அதே விமர்சனத்தை வைத்து வருகிறார்கள். ஏனெனில் ஆளுநர் செய்த விமர்சனங்களை திமுக தனக்கு சாதகமாகவே பயன்படுத்தி வந்தது. முக்கியமான பிரச்சனைகளின் போது ஆளுநர் ரவியின் சில விமர்சனங்கள், அப்படியே திமுகவிற்கு அரசியல் செய்ய சாதகமாக மாறியதாக விமர்சனங்கள் உண்டு.
வில்சன் எம்பி கிண்டல்
திமுக எம்பி வில்சன் வெளியிட்டுள்ள பதிவில் கூறுகையில், "இரண்டு விஷயங்களுக்காக நான் வருத்தப்படுகிறேன். முதலாவது, எதிர்வரும் தேர்தலில் திமுக தனக்காக பிரச்சாரம் செய்யவல்ல ஒரு நட்சத்திரப் பேச்சாளரை இழக்கிறது. தமிழகத்தின் மீதான பாஜகவின் மனப்பான்மையை எப்போதும் நினைவூட்டிக் கொண்டிருக்கும் ஒருவராக ஆர்.என். ரவி அவர்கள் திகழ்ந்தார்.
நன்றி ரவி அவர்களே
இரண்டாவதாக, மேற்கு வங்க மக்களுக்காகவும், அகில இந்திய திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சார்ந்துள்ள எனது இனிய நண்பர்களுக்காகவும் நான் வருத்தப்படுகிறேன்! ஏனெனில், அவர் எங்கு சென்றாலும், நமது அரசியலமைப்பு சாசனம், கூட்டாட்சித் தத்துவம் மற்றும் நாடாளுமன்ற ஜனநாயகம் போன்றவைதான் சிதைக்கப்படுகிறது. இதுவரை உருப்படியாய் நீங்கள் ஏதும் செய்ததில்லை.. நன்றி ரவி அவர்களே!" இவ்வாறு கூறியுள்ளார்.

இதனிடையே திமுக ஆதரவாளரான பாலமுருகன் என்பவர் வெளியிட்ட பதில், "தமிழ்நாடு ஆளுநர் R.N. ரவி மாற்றம். திமுகவின் தொடர் வெற்றியை தடுக்க புதிய வியூகம் அமைத்து ரவியை தமிழ்நாட்டை விட்டு அகற்றி இருக்கிறது பாஜக. இதனால் திமுக தனது வெற்றிக்காக அடுத்த வியூகத்தை அமைக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது" என்று கிண்டலாக கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications