ஆதாரங்களை தருகிறோம்! அதிமுகவினர் மீது ரெய்டுக்கு தயாரா? அமலாக்கத்துறைக்கு ஸ்டாலின் ஓபன் ‛சேலஞ்ச்’
சென்னை: அமலாக்கத்துறையால் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டுள்ளதால் முதல்வர் ஸ்டாலின் ஆக்ரோஷமாக இன்று வீடியோ வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் ஆதாரங்களை தருகிறோம். அதிமுகவினர் மீது ரெய்டு நடத்த தயாரா? என ஓபனாக அமலாக்கத்துறைக்கு முதல்வர் ஸ்டாலின் சவால் விடுத்துள்ளது அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை பற்ற வைத்துள்ளது.
தமிழக மின்சாரத்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் மற்றும் அவருக்கு நெருக்கமானவர்களின் வீடு, அலுவலகங்களில் வருமான வரி சோதனை நடந்தது. இந்த சோதனையை தொடர்ந்து நேற்று முன்தினம் அமலாக்கத்துறை ரெய்டை தொடங்கியது.
சென்னை, கரூரில் உள்ள அமைச்சர் செந்தில்பாலாஜியின் வீடு, தலைமை செயலகத்தில் உள்ள அவரது அலுவலகத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தினர். மொத்தம் 17 மணிநேரம் வரை சோதனை நடந்தது. சோதனைக்கு பிறகு செந்தில் பாலாஜியை அதிகாரிகள் விசாரணைக்கு அழைத்து சென்றனர். அப்போது அவர் நெஞ்சு வலிப்பதாக கூறி கதறி அழுதார். இதையடுத்து அவரை சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் அமலாக்கத்துறையினர் அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில் தான் அவரை கைது செய்ததாக அமலாக்கத்துறை அறிவித்தது.

இந்நிலையில் தான் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்துள்ள நிலையில் அதற்கு முதல்வர் ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்நிலையில் தான் அமலாக்கத்துறைக்கு முதல்வர் ஸ்டாலின் ஓபன் சவால் விடுத்துள்ளார். செந்தில் பாலாஜி கைதை கண்டித்து இன்று முதல்வர் ஸ்டாலின் ஆக்ரோஷமாக பேசும் வீடியோ வெளியிடப்பட்டது. இந்த வீடியோவில் அவர் கூறியதாவது:
தமிழ்நாட்டில் 'அடிமை' பழனிசாமி தலைமையில் அதிமுக என்று ஒரு கட்சி இருக்கிறது. அந்தக் கட்சியை தங்களின் கொத்தடிமைகளாக ஆக்குவதற்கு கடந்த 2016, 2017, 2018ம் ஆண்டுகளில் பல்வேறு ரெய்டுகளை இதே பாஜக ஆட்சி நடத்தி உள்ளது. ரெய்டு நடத்தினார்களே, எந்த வழக்கையாவது நடத்தினார்களா? குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தார்களா? தண்டனை வாங்கித் தந்தார்களா? இல்லையே.
தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத் துறையில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீது ஏகப்பட்ட புகார்கள் இருக்கின்றன. ரெய்டு நடத்தி குற்றப்பத்திரிக்கையை வரிசையாகத் தாக்கல் செய்து கொண்டு இருக்கிறோம். வழக்குப் பதிவு செய்துகொண்டு இருக்கிறோம். இவற்றில் எல்லாம் விசாரணை நடத்த ஏன் அமலாக்கத்துறை வரவில்லை? எல்லா ஆதாரங்களையும் தருகிறோம். அவர்கள் மீதும் அமலாக்கத்துறை ரெய்டு நடத்தத் தயாரா?
அதிமுகவின் இந்த ஊழல் பெருச்சாளிகளைத்தான் டெல்லியில் மொத்தமாகச் சந்தித்தார் உள்துறை அமைச்சர் அமித்ஷா. அவர்தான் ஊழலுக்கு எதிராகத் தமிழ்நாட்டுக்கு வந்து முழங்கி விட்டுப் போயிருக்கிறார். ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு அதிமுகவை தங்களின் கொத்தடிமைக் கூடாரமாக ஆக்குவதற்கு அமலாக்கத்துறையையும், சிபிஐயையும், வருமான வரித்துறையையும் பயன்படுத்தியது பாஜக. அவர்களும் பயந்துபோய் பாஜகவின் காலடியில் கிடக்கிறார்கள். இப்படிப்பட்ட 'பாதம்தாங்கி' பழனிசாமி, செந்தில் பாலாஜியை பற்றி குறை சொல்கிறார்.
ஆனால், 2021 வரை அவர்கள்தான் ஆட்சியில் இருந்தார்கள். அப்போதெல்லாம் ஏன் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்தார்கள்? இப்போது வாய்கிழியப் பேசுவோரை அப்போது எது தடுத்தது? 4 ஆயிரம் கோடி ரூபாய் டெண்டர்களை உறவினர்களுக்குக் கொடுத்ததாகப் புகார் எழுந்து, உயர்நீதிமன்றத்தால் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டவர்தான் பழனிசாமி. உடனடியாக உச்சநீதிமன்றத்துக்குத் தடை வாங்க ஓடிய யோக்கிய சிகாமணிதான் இந்தப் 'பம்மாத்து' பழனிசாமி. அவருக்கு ஊழல் பற்றிப் பேச எந்த அருகதையும் இல்லை. இந்தப் பழனிசாமி அடிமைக் கும்பல் மாதிரி மற்ற கட்சிகளையும் நினைக்கிறது பாஜக தலைமை. அது நினைக்கிற மாதிரியான கட்சி இல்லை திமுக'' என சாடியுள்ளார்.












Click it and Unblock the Notifications