பாகிஸ்தான் மக்களையும் கருத்தில் கொள்ளுங்க.. காஷ்மீர் தாக்குதலில் நடிகர் விஜய் ஆண்டனி பரபர அறிக்கை
சென்னை: காஷ்மீரில் உயிரிழந்த சகோதரர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ள நடிகர் விஜய் ஆண்டனி, பாகிஸ்தானில் வசிக்கும் 50 லட்சம் இந்தியர்களையும், பாகிஸ்தான் பொது மக்களையும் கருத்தில் கொள்ள வேண்டும். வெறுப்பை கடந்து மனிதத்தை வளர்ப்போம் என்று கூறியுள்ளார். இதற்கு ஒரு தரப்பினர் ஆதரவு தெரிவித்துள்ள நிலையில் இன்னொரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனால் விஜய் ஆண்டனியின் அறிக்கை விவாதமாகி உள்ளது.
ஜம்மு காஷ்மீரில் படிப்படியாக அமைதி திரும்பி வந்தது. பயங்கரவாத தாக்குதல் என்பது குறைந்து வந்தது. இதனால் நம் நாட்டு மக்கள் மட்டுமின்றி வெளிநாடுகளை சேர்ந்தவர்கள் ஜம்மு காஷ்மீருக்கு சுற்றுலா செல்ல தொடங்கினர். இந்நிலையில் தான் கடந்த 22ம் தேதி ஜம்மு காஷ்மீரில் பஹல்காம் அருகே பைசரன் என்ற புல்மேட்டில் சுற்றுலாப்பயணிகள் மீது பாகிஸ்தான் பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

இதில் 22 பேர் பலியாகினர். இந்த தாக்குலுக்கு லஷ்கர் இ தொய்பா என்ற பயங்கரவாத அமைப்பின் துணை பிரிவாக செயல்பட்டு வரும் ‛தி ரெசிஸ்டண்ட் ஃப்ரண்ட்' பொறுப்பேற்றுள்ளது. இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க நம் நாடு தயாரகி வருகிறது. பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைக்கு அமெரிக்கா, ரஷ்யா உள்பட பல நாடுகள் ஆதரவளித்துள்ளன.
பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுப்பது தொடர்பாக பிரதமர் மோடி பலகட்ட ஆலோசனைகளை மேற்கொண்டுள்ளார். ராணுவம், விமானப்படை, கடற்படைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. விரைவில் பாகிஸ்தான் மீது தாக்குதல் என்பது நடத்தப்படலாம் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் தான் காஷ்மீர் தாக்குதல் தொடர்பாக இசையமைப்பாளரும், நடிகருமான விஜய் ஆண்டனி கருத்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக விஜய் ஆண்டனி தனது எக்ஸ் பக்கத்தில் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், ‛‛காஷ்மீரில் உயிரிழந்த சகோதர்களுக்கும், அவர்களின் குடும்பங்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கிறேன். அதேசமயத்தில் பாகிஸ்தானில் வசிக்கும் 50 லட்சம் இந்தியர்களையும், பாகிஸ்தான் பொது மக்களையும் கருத்தில் கொள்ள வேண்டும். அவர்களும் நம்மை போல அமைதியையும், மகிழ்ச்சியையும் மட்டுமே விரும்புகிறார்கள்.வெறுப்பை கடந்து மனிதத்தை வளர்ப்போம்'' என்று கூறியுள்ளார்.
நடிகர் விஜய் ஆண்டனியின் இந்த கருத்துக்கு ஒரு தரப்பினர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். அதேவேளையில் இன்னொரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பாகிஸ்தான் மக்களையும் கருத்தில் கொள்ள வேண்டும் என்று கூறியதால் விஜய் ஆண்டனியின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இது தற்போது விவாதத்தை கிளப்பி உள்ளது.
முன்னதாக நேற்று விஜய் ஆண்டனியிடம் காஷ்மீர் தாக்குதல் சம்பவம் குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி கேட்டனர் அதற்கு ‛‛பாகிஸ்தானில் உள்ள மக்களும் நம் சகோதரர்கள் தான். அவர்கள் எதுவும் செய்யவில்லை. பஹல்காம் தாக்குதல் விவகாரத்தில் வீணாப்போன நாலு பேர் செய்த தவறுக்காக ஒட்டுமொத்த பாகிஸ்தானையும் குறை கூற முடியாது'' என்று கூறியிருந்தார்.












Click it and Unblock the Notifications