ஆலையை மீண்டும் திறக்க சாதகமான அறிக்கை.. ஸ்டெர்லைட் வழக்கறிஞர் பேட்டி
Recommended Video

சென்னை: ஸ்டெர்லைட் ஆலையை தூத்துக்குடியில் மீண்டும் திறக்க சாதகமான அறிக்கையை, தருண் அகர்வால் குழு வழங்கியுள்ளது என்று அந்த நிறுவன வழக்கறிஞர் ஆரியமா சுந்தரம் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து மக்கள் நடத்திய போராட்டத்தின்போது போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 13 பேர் கொல்லப்பட்டனர்.
எனவே, கடந்த மே மாதம் 28ம் தேதி, ஸ்டெர்லைட் ஆலைக்கு தமிழக அரசு சீல் வைத்தது. இதை எதிர்த்து தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் ஸ்டெர்லைட் ஆலை வழக்கு தொடர்ந்தது.

ஓய்வு பெற்ற நீதிபதி
இதையடுத்து, மேகாலயா உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி தருண் அகர்வால் தலைமையில் ஒரு குழுவை அமைத்தது தேசிய பசுமை தீர்ப்பாயம். விசாரணை நடத்திய பிறகு, தூத்துக்குடியில், ஸ்டெர்லைட் ஆலையை மூடிய தமிழக அரசின் உத்தரவு தவறு என்று முன்னாள் நீதிபதி தருண் அகர்வால் தலைமையிலான குழு, தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளது.

ஒத்திவைப்பு
ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு உத்தரவிட்டது சரியான நடவடிக்கை இல்லை என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதை இன்று பரிசீலித்த, பசுமை தீர்ப்பாயம், இந்த அறிக்கை பற்றி 1 வாரத்தில் தமிழக அரசு விளக்கம் அளிக்க உத்தரவிட்டு, டிசம்பர் 7ம் தேதிக்கு வழக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

பேட்டி
இதுகுறித்து ஸ்டெர்லைட் தரப்பு வழக்கறிஞர் ஆரியமா சுந்தரம் நிருபர்களிடம் கூறியதாவது: நாங்கள் ஆரம்பம் முதலே, ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டது தவறு என்றுதான் வாதிட்டு வருகிறோம். ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி தர வேண்டும் என்றுதான் வாதிட்டு வருகிறோம். ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டது என்பது, அரசியல் காரணங்களுக்காக எடுத்த முடிவே தவிர, அதில் நியாயம் இல்லை. இதைத்தான், தருண் அகர்வால் குழுவும் தெரிவித்துள்ளது. அகர்வால் குழு பரிந்துரை என்பது ஆலையை திறப்பதற்கு சாதகமான அம்சமாக உள்ளது.

காற்று, நீர் மாசு
அதேநேரம், சில பரிந்துரைகளையும், தருண் அகர்வால் குழு வழங்கியுள்ளது. அதன்படி, தொடர்ச்சியாக, காற்று மற்றும் நிலத்தடி நீர் மாசுவை தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியம் ஆய்வு செய்யலாம் என்று கூறப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications