தென்னரசுக்காக வாக்கு கேட்பீர்களா? சட்டென வந்த கேள்வி.. ஓபிஎஸ் தரப்பு அளித்த 'செம' பதில்!
தென்னரசுக்காக வாக்கு கேட்க மாட்டோம் என்று ஓபிஎஸ் தரப்பு கூறியுள்ளது.
சென்னை: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் எடப்பாடி பழனிசாமி முன்மொழிந்த தென்னரசுக்கு வாக்கு கேட்க மாட்டோம் என்றும், இரட்டை இலைக்கு மட்டும் வாக்கு கேட்போம் என்றும் ஓபிஎஸ் ஆதரவாளர் குப கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்கான அதிமுக வேட்பாளர் தேர்வில் உச்சநீதிமன்றத்தின் உத்தரவுகள் பின்பற்றப்படவில்லை என்றும், அவைத்தலைவ தமிழ்மகன் உசேன் நடுநிலை தவறிவிட்டதாகவும் ஓபிஎஸ் தரப்பு குற்றம்சாட்டியுள்ளது.
குறிப்பாக ஓபிஎஸ் அணி வேட்பாளர் செந்தில் முருகனின் பெயர் வேட்பாளர் தேர்வு படிவத்தில் இல்லையென்றும், தமிழ்மகன் உசேன் எடப்பாடி பழனிசாமியின் முகவராக செயல்படுவதாகவும் வைத்திலிங்கம் விமர்சித்திருந்தார். இதனால் அதிமுக உட்கட்சி பூசல் அடுத்தக் கட்டத்திற்கு செல்லும் என்று பார்க்கப்பட்டது.

ஓபிஎஸ் வேட்பாளர் வாபஸ்
இருப்பினும் அதிமுக பொதுக்குழு உறுப்பினர்களின் ஆதரவு கடிதங்களுடன் அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன், மாநிலங்களவை எம்பி சிவி சண்முகம், இன்பதுரை உள்ளிட்டோர் டெல்லி சென்றனர். இதனிடையே அனைவருக்கும் ஆச்சரியமளிக்கும் வகையில், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் இருந்து விலகுவதாகவும், தங்கள் தரப்பு வேட்பாளரான செந்தில் முருகனை வாபஸ் பெறுவதாக ஓபிஎஸ் தரப்பு அறிவித்துள்ளது.

குப கிருஷ்ணன் பேட்டி
இதுகுறித்து ஓபிஎஸ் ஆதரவாளர் கு.ப. கிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில், எங்களின் நோக்கம் இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டு விடக்கூடாது. இரட்டை இலை சின்னம், தேர்தலில் தோல்வியை தழுவிடக் கூடாது என்பதற்காக பல்வேறு முயற்சிகளை எடுத்தோம்.
நாங்கள் எடுத்த முயற்சி வெற்றிப் பெற்றக் காரணத்தால், இரட்டை இலைக்கு ஆதரவாக எங்கள் தரப்பில் இருந்து அறிவிக்கப்பட்ட செந்தில் முருகன் விலகுகிறார்.

இரட்டை இலை
இரட்டை இலையை வெற்றிப் பெற வைக்க வேண்டும் என்பதற்காக செந்தில் முருகன் விலகுகிறார். தென்னரசுக்காக நாங்கள் விலகவில்லை. இரட்டை இலை சின்னத்தை வெற்றி பெறச் செய்ய வேண்டுமென பொதுமக்களிடம் கேட்க உள்ளோம் என்று தெரிவித்தார். தொடர்ந்து தென்னரசுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்வீர்களா என்ற கேள்விக்கு, தென்னரசுக்காக வாக்கு கேட்க மாட்டோம். இரட்டை இலை சின்னத்திற்காக வாக்கு கேட்போம் என்று பதில் அளிக்கப்பட்டது.

எப்படி வாக்கு கேட்பீர்கள்?
தொடர்ந்து வேட்பாளர் இல்லாமல், பெயரை சொல்லாமல் வாக்கு கேட்பீர்களா என்ற கேள்விக்கு, எம்ஜிஆர், ஜெயலலிதா கட்டிக்காத்த சின்னம் இரட்டை இலை. இந்த சின்னத்திற்கு வாக்களியுங்கள் மக்களே என்று வாக்கு கேட்போம் என்று கு.ப.கிருஷ்ணன் பதில் அளித்தார்.












Click it and Unblock the Notifications