"மாம்பழம் சின்னம் நிச்சயம் எங்களுக்கு தான் வரும்.." அப்போ கூட்டணி? சஸ்பென்ஸ் வைத்த ராமதாஸ்
செங்கல்பட்டு: பாமகவில் ராமதாஸுக்கும் அன்புமணிக்கும் இடையே சில காலமாகவே மோதல் நிலவி வருகிறது. இதற்கிடையே பாமகவின் மாம்பழம் சின்னம் தங்களுக்கே சொந்தமானது என்றும் விரைவில் நீதிமன்றத்தில் தங்களுக்கு ஆதரவாகவே தீர்ப்பு வரும் என்றும் தெரிவித்தார். மேலும், கூட்டணி குறித்தும் சில தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.
தமிழ்நாடு தேர்தலில் சீக்கிரமே நடைபெற உள்ளது. இன்னும் ஓரிரு வாரங்களில் தேர்தல் தொடர்பான அறிவிப்பும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாகக் கூட்டணியை இறுதி செய்யும் நடவடிக்கையில் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக இறங்கியுள்ளன.

ராமதாஸ்
பாமகவை பொறுத்தவரை அது இப்போது நிறுவனர் ராமதாஸ், தலைவர் அன்புமணி என இருவர் தலைமையில் தனித்தனியாகப் பிரிந்து இருக்கிறது. இரு தரப்புமே தங்களுக்கே கட்சி சொந்தம் எனச் சொல்லி வருகிறார்கள். அதேநேரம் தேர்தல் ஆணையம் அன்புமணியை தலைவராக அங்கீகரித்துள்ளது. மேலும், இரு தரப்புமே பொது வெளியில் மாறி மாறி விமர்சித்தும் வருகிறார்கள்.
அன்புமணி தரப்பு ஏற்கனவே என்டிஏ கூட்டணியில் சேர்ந்துவிட்டார். கடந்த மாதம் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்த அன்புமணி, கூட்டணியை உறுதி செய்தார். அதைத் தொடர்ந்து பிரதமர் மோடி கலந்து கொண்ட பிரச்சார நிகழ்விலும் கூட அன்புமணியும் மேடை ஏறி இருந்தார். அதேநேரம் ராமதாஸ் தரப்பு இதுவரை கூட்டணியை உறுதி செய்யவில்லை. கூட்டணி பேச்சுவார்த்தை தொடர்ந்து நடந்து வருவதாகவே சொல்லப்படுகிறது.
மாம்பழம் வழக்கு
இதற்கு நடுவே பாமகவின் சின்னமான மாம்பழம் தங்களுக்கே சொந்தம் என்றும் தனியாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அது தொடர்பான வழக்கு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது. இதில் ராமதாஸ் தரப்புக்குச் சாதகமாகத் தீர்ப்பு வந்தால் அது அன்புமணி தரப்புக்கு மிகப் பெரிய பின்னடைவையே தரும். இதற்கிடையே சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ராமதாஸ் சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்தார்.
திருமண விழா
செங்கல்பட்டு மாவட்டம் பழவேலி பகுதியில் தனியார் மண்டபத்தில் நடைபெற்ற திருமண விழாவில் ராமதாஸ் கலந்து கொண்டார். வியாழன் இரவு நடந்த திருமண வரவேற்பு விழாவில் அன்புமணி கலந்து கொண்ட நிலையில், நிறுவனர் ராமதாஸ், அவரது மனைவி மற்றும் குடும்பத்தினர் வெள்ளி காலை திருமணத்திற்கு வந்தனர். இருவரும் நேருக்கு நேர் பார்த்துக் கொள்வதைத் தவிர்க்கவே இதுபோல வந்ததாகச் சொல்லப்படுகிறது. மணமக்கள் உறுதி மொழி எடுத்த பிறகு, அவர்களுக்கு ராமதாஸ் திருமணத்தை நடத்தி வைத்தார்.
முக்கிய தகவல்
அங்குச் செய்தியாளர்களிடம் பேசிய ராமதாஸ், மாம்பழம் சின்னம் தங்களுடையது தான் என்றும் அது தங்களுக்கே சொந்தமானது என்றும் தெரிவித்தார். மேலும், நீதிமன்றத்தில் இது தொடர்பான வழக்கு இருப்பதாகவும் அதில் தங்களுக்கு ஆதரவாகத் தீர்ப்பு வெளியாகும் என்றும் தெரிவித்தார். அப்போது அதிகாரப்பூர்வமாகவே மாம்பழச் சின்னம் தங்களுக்குச் சொந்தமாகும் என்றும் தெரிவித்தார்.
கூட்டணி தொடர்பான கேள்விக்கு அவர், பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் விரைவில் உங்களுக்கு நல்ல செய்தி வரும் என்றும் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications