சாலை வரி பிரச்சனை.. இதை தவிர வேறு வழியில்லை... ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் அதிரடி முடிவு
சென்னை: தமிழக சாலை வரியை அரசு ரத்து செய்யாவிட்டால் எங்கள் பஸ்களை எல்லாம் முதல்வரிடமே ஒப்படைத்துவிடுவோம் இதை தவிர எங்களுக்கு வேறு வழியில்லை என ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்கத் தலைவர் அன்பழகன் வேதனை தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கடந்த செப்டம்பர் 7ம் தேதி முதல் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல பேருந்துகளை இயக்க தமிழக அரசு அனுமதி அளித்தது. இதன்படி அனைத்து ஊர்களுக்கும் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் சென்று வருகின்றன.
ஆனால் ஆம்னி பேருந்துகள் மட்டும் இயக்கப்படவில்லை. கடந்த 6 மாதங்களாக வாழ்வாதாரத்தை இழந்த அவர்களுக்கு இரண்டு காலாண்டிற்கான சாலை வரியை கட்ட சொல்லி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

பேருந்துகள் இயக்கம்
ஆனால் ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் பேருந்துகளை இயக்க மறுத்து போராடி வருகிறார்கள். சாலை வரியை ரத்து செய்தால் தான் தங்களால் இந்த கொரோனா ஏற்படுத்திய பாதிப்பில் இருந்து மீள முடியும் என்று கோரி வருகின்றனர்,

இயங்கவில்லை
எனினும் இதுவரை தமிழக அரசு சாலை வரி ரத்து செய்வது தொடர்பாக எந்த முடிவையும் அறிவிக்கவில்லை. இதனால் கடந்த ஒரு மாதமாக ஆம்னி பேருந்துகள் இயங்கவில்லை. சென்னைக்கு சென்று வந்த ஆயிரக்கணக்கான பேருந்துகள் செட்களில் முடங்கி கிடக்கின்றன.

அன்பழகன் வீடியோ
இதுதொடர்பாக ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்கத் தலைவர் அன்பழகன் வெளியிட்டுள்ள வீடியோவில், கொரோனா காரணமாக கடந்த 6 மாதமாக தனியார் ஆம்னி பேருந்துகளை இயக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தனியார் பேருந்துகளை இயக்க அரசு அனுமதி வழங்கினாலும், 2 காலாண்டிற்கான சாலை வரியை ரத்து செய்யாததால் பேருந்துகள் இயக்க முடியாத சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளோம்.

பேருந்துகளை ஒப்படைப்போம்
இதனால் 4 ஆயிரம் பேருந்துகளை நம்பி இருக்கும் சுமார் 2 லட்சம் பேர் வாழ்வாதாரத்தை இழந்துள்ளோம். எனவே சாலை வரியை ரத்து செய்ய வேண்டும். சாலை வரியை ரத்து செய்யாவிட்டால் பேருந்துகளை தலைமை செயலகத்தில் ஒப்படைப்பதை தவிர தங்களுக்கு வேறு வழி இல்லை" இவ்வாறு அன்பழகன் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications