எத்தனை தடைகள் வந்தாலும்.. தமிழ்நாட்டின் வளர்ச்சித்திட்டங்களை செயல்படுத்துவோம்.. மோடி உத்தரவாதம்
சென்னை: மத்திய அரசின் பல திட்டங்கள் தமிழ்நாட்டில் மறைக்கப்படுவதாக பிரதமர் மோடி குற்றம் சாட்டியுள்ளார். எத்தனை தடைகள் வந்தாலும் தடைகளைத் தாண்டி தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு பாடுபடுவோம் என்றும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் ரூ.17,300 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்களை பாரத பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.

இவ்விழாவில் இராமேஸ்வரம் பாம்பன் கடலில் அமைக்கப்பட்ட தூக்கு பாலத்தை பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணித்தார். குலசேகரப்பட்டினம் இஸ்ரோ விண்வெளி ஏவு தளத்தின் கட்டுமான பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.
வ.உ.சி துறைமுகத்தில் ரூ.7055.95 கோடி மதிப்பில் தூத்துக்குடி வெளித் துறைமுக கட்டுமான பணிகளுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். இங்கு குறிப்பாக கப்பல்களில் உள்நாட்டு கப்பல்களில் எரிபொருளாக பசுமை ஹைட்ரஜன் பயன்படுத்தப்பட உள்ளது. அதற்கான எரிபொருள் மையம் ரூ.1950 கோடி மதிப்பில் முதன்முதலில் தூத்துக்குடி துறைமுக வளாகத்தில் உருவாகிறது.
தூத்துக்குடி மூன்றாவது வடக்கு நிலக்கரி தளத்தை இயந்திர மயமாக்கும் பணியை ரூ.265.15 கோடி மதிப்பில் தொடக்கி வைத்தார். விழாவில் பேசிய பிரதமர் மோடி காசிக்கும் தமிழ்நாட்டிற்குமான உறவு வலுப்படுவது மகிழ்ச்சி அளிக்கிறது. மத்திய அரசின் திட்டங்களால் தமிழ்நாடு புதிய சகாப்தங்களை படைக்கப்போகிறது. காங்கிரஸ் ஆட்சி காலத்தில் காகித வடிவத்தில் இருந்தவை இன்று திட்டங்களாக நிறைவேற்றப்பட்டுள்ளன.
தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. தமிழ்நாட்டிற்கு 5 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. சாலை வசதிக்காக ஒன்றரை லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டுள்ளது. தேசிய நெடுஞ்சாலை வலைப்பின்னல் வேகமாக அதிகரித்து வருகிறது. நான் இங்கே கூறுவது என்னுடைய தனிப்பட்ட சித்தாந்தம் கிடையாது. வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்திற்கான கோட்பாடு
நான் இங்கே இதை கூறும் போது தமிழ்நாட்டில் உள்ள செய்தித்தாள்கள் அதை பிரசுரிக்காது. காரணம் இங்குள்ள அரசு அதை பிரசுரிக்க விடாது. ஆனாலும் கூட நண்பர்களே.. தடைகளையும் தாண்டி வளர்ச்சிப்பயணத்தை வளர்ச்சித் திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்தியே தீரும்.
மூன்றாவது முறையாக நாம் அரசமைக்கும் நேரத்தில் பல்வேறு திட்டங்களை நிறைவேற்றுவோம் என்று உத்தரவாதம் தருகிறேன். தமிழ்நாட்டு மக்களுக்கு இது மோடி அளிக்கும் உத்தரவாதம் என்றும் கூறினார் பிரதமர் மோடி.












Click it and Unblock the Notifications