Exclusive: பாஜகவுக்கு ஆதரவு இல்லை .. அதிமுகவுக்கு ஆதரவளிக்கலாம்.. மனம் திறந்த தனியரசு
சென்னை: பாஜகவுக்கு நிச்சயம் நான் வாக்கு கேட்க மாட்டேன். அதேசமயம், அதிமுகவுக்கு வாக்கு கேட்க வாய்ப்புள்ளதாக கொங்கு இளைஞர் பேரவை தலைவரும், எம்எல்ஏவுமான தனியரசு கூறியுள்ளார்.
கொங்கு இளைஞர் பேரவைத் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான தனியரசுவிடம், ஒன் இந்தியா தமிழ் சார்பாக முன்வைக்கப்பட்ட கேள்விகளுக்கு அவர் அளித்த பதில்கள் பின்வருமாறு:
கேள்வி: பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைத்தது பற்றிய உங்கள் கருத்து என்ன?
பதில்: பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைத்தது வருந்தத்தக்கது, வேதனைக்குரியது. அரசியல் உணர்வாளர்களின் எண்ணங்களுக்கு முரணானது. தமிழ் சமூகத்தின் நலனுக்கு எதிராக செயல்பட்ட மோடியுடன் அதிமுக கூட்டணி வைத்திருக்கிறது. இருப்பினும், ஒவ்வொரு கட்சிக்கும் தனிதனி தேர்தல் கணக்கு இருக்கும். அதன் அடிப்படையிலும், விருப்புரிமை அடிப்படையிலும் பாஜகவுடன் அதிமுக கூட்டணி அமைத்திருக்கலாம்.
ஈஸ்வரனைத் தொடர்ந்து.. பாஜகவிலிருந்து திமுக இழுத்த 2வது விக்கெட் பாரிவேந்தர்!
கேள்வி: தனியரசுவின் அடுத்தக்கட்ட நடவடிக்கை என்ன? நாடாளுமன்றம் மற்றும் இடைத்தேர்தலில் யாருக்கு ஆதரவு?
பதில்: பாஜகவுக்கு ஆதரவாக எந்த நிலையிலும் கட்டாயம் வாக்குகேட்டு செல்லமாட்டேன். மற்றபடி ஏனைய கட்சிகளில் யாருக்கு ஆதரவு அளிப்பது என்பது பற்றி கொங்கு இளைஞர் பேரவை ஆய்வு செய்து வருகிறது.
கேள்வி: அதிமுகவுக்கு ஆதரவா? இல்லையா?
பதில்: கடந்த 2011 முதல் ஜெயலலிதா மறையும் வரை அவர் எடுத்த அத்தனை முடிவுகளுக்கும் ஆதரவு அளித்து, தோழமையுடன் பயணித்தேன். மேலும், அவர் மறைவுக்கு பின்னரும் அரசுக்கு ஆதரவு அளித்து வருகிறது கொங்கு இளைஞர் பேரவை. அதன் அடிப்படையில் அதிமுக வேட்பாளர்களை ஆதரிப்பததற்கு வாய்ப்பு அதிகம்.(சிரிக்கிறார்)
கேள்வி: தனியரசு எம்.எல்.ஏ.பதவியை வைத்துக்கொண்டு கொங்கு பகுதிக்கு எதுவும் செய்யவில்லை என்ற ஈஸ்வரன் குற்றச்சாட்டுக்கு உங்கள் பதில் என்ன?
பதில்: ஒரு குறிப்பிட்ட சமூகத்திற்காக மட்டுமோ, ஒட்டுமொத்த தமிழகத்தில் குறுகிய நிலப்பரப்புக்குள் மட்டுமோ அரசியல் பயணத்தை துவக்கவில்லை நான். தமிழகத்தின் பல்வேறு பிரச்சனைக்களுக்காக ஓங்கி குரல் கொடுத்து பல போராட்டங்களை முன்னெடுத்துள்ளேன். சட்டமன்றத்துக்கு உள்ளும், வெளியும் ஜல்லிக்கட்டு, நீட், உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளுக்காக குரல் கொடுத்துள்ளேன். வட்டார அரசியலுக்குள் சுருங்கி கிடக்கும் பயணத்தை நான் முன்னெடுக்கவில்லை. ஈஸ்வரன் குற்றச்சாட்டு மறுக்கத்தக்கது.
கேள்வி: நீங்க, கருணாஸ், தமிமுன் அன்சாரி,3 பேரும் மக்களவைத் தேர்தலில் வெவ்வெறு நிலைப்பாடு எடுத்துள்ளீர்கள்..உங்கள் மூவர் கூட்டணி இனி எப்படி இருக்கும்?
பதில்: (சிரிக்கிறார்) தேர்தல் கால உறவு என்பது வேறு, மக்கள் பிரச்சனைகளுக்கு இணைந்து செயலாற்றுவது என்பது வேறு. தனிப்பட்ட முறையில் நாங்கள் நண்பர்கள் தான். தமிழக உரிமைகளுக்காக நாங்கள் இணைந்து போராடுவோம்.