மக்களுக்கு ஹேப்பி நியூஸ்.. சின்னத்தம்பியை கும்கியாக்கும் திட்டமில்லை.. வனத்துறை அறிவிப்பு!
சின்ன தம்பியை கும்கியாக மாற்றக்கூடாது என வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.
Recommended Video
சென்னை: சின்னத்தம்பி யானையை கும்கியாக மாற்றும் எண்ணம் அரசுக்கோ வனத்துறைக்கோ கிடையாது என தமிழக அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது. சின்னத்தம்பி யானையை கும்கியாக மாற்ற எதிர்ப்பு தெரிவித்து சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் அரசு இந்த விளக்கத்தை அளித்திருக்கிறது.
கோவை சின்ன தடாகத்தில் கடந்த 28-ம் தேதி மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டு, டாப்சிலிப்பில் விடுவிக்கப்பட்ட சின்னதம்பி யானை மீண்டும் ஊருக்குள் ஊடுருவி உலா வந்து கொண்டிருக்கிறது.
29-ம் தேதி உலாந்தி, 30-ம் தேதி மானாம்பள்ளி, 31-ம் தேதி கோட்டூர், பிப்-1-ம் தேதி தீபாலப்பட்டி, 2-ம் தேதி அமராவதி சர்க்கரை ஆலை வளாகம் என சுமார் 150 கி.மீ. தொலைவை கடந்து தவித்தும் வருகிறது.
தமிழக வனத்துறை
சின்னத்தம்பியின் அட்டகாசம் நாளை பெருகிவிட்டால் மனித உயிர்களுக்கு ஆபத்து ஏற்பட்டுவிடும் என்தபால், அதனை கும்கியாக மாற்ற போவதாக தமிழக வனத்துறை அறிவித்திருந்தது.
கடும் எதிர்ப்பு
வனத்துறையின் இந்த திட்டத்திற்கு பொதுமக்களிடையே கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. கும்கியாக மாற்ற கூடாது என்று சின்னத்தம்பிக்கு ஆதரவாக சமூக வலைதளங்களிலும் இயக்கம் நடந்து வருகிறது.
யானைகளுக்கு வேறு இடம்
இந்தநிலையில், கும்கியாக மாற்ற எதிர்ப்பு தெரிவித்து சென்னை ஹைகோர்ட்டில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. விலங்குகள் நல ஆர்வலர் அருண் பிரசாத் என்பவர் இது சம்பந்தமாக கோர்ட்டில் முறையிட்டுள்ளார். யானைகளை வேறு இடத்துக்கு கொண்டு செல்வது பற்றி விதிகளை வகுக்க வேண்டும் என்று அருண் பிரசாத் தனது மனுவில் முக்கிய கோரிக்கையாக விடுத்துள்ளார்.
பலத்த எதிர்பார்ப்பு
இந்த மனு இன்று பிற்பகலே விசாரணைக்கு எடுத்துகொள்ள போவதாக நீதிபதிகளும் தெரிவித்திருந்ததால், சின்னதம்பி மீது எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்த எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்தபடியே இருந்தது. அதன்படி உணவு இடைவேளை முடிந்து இதன் மீதான விசாரணை நடைபெற்றது.
துன்புறுத்தவில்லை
அப்போது, சின்னத்தம்பியை கும்கியாக மாற்றும் எண்ணம் தமிழக அரசுக்கும் இல்லை, வனத்துறைக்கும் இல்லை என்று அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. சின்னத்தம்பி யாரையுமே துன்புறுத்தவில்லை என்பதால், அதனை பாதுகாப்பாக காட்டுக்கு அனுப்புவதே எங்கள் முடிவு என்றும் தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.
பத்திரமாக அனுப்பப்படும்
கும்கியாக மாற்றக்கூடாது என்று தமிழக மக்களும் ஆசைப்பட்ட நிலையில், இப்போது அரசே, சின்னத்தம்பி யானையை பத்திரமாக காட்டுக்குள் அனுப்பி வைக்கப்போவதாக தெரிவித்துள்ளது பெரும் மகிழ்ச்சியை அனைவருக்கும் ஏற்படுத்தி உள்ளது.