"யானைப்பசிக்கு சோளப்பொரி" ஆவினுக்கு பால் இல்லை..பால் உற்பத்தியாளர்கள் போராட்டம்..யாருக்கு பாதிப்பு
தமிழகத்தில் இருக்கும் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்கள் மூலமாக ஆவினுக்கு இன்று முதல் பால் அனுப்ப மாட்டோம் என்று கூறி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
சென்னை: பால் கொள்முதல் விலையை உயர்த்தக்கோரி அமைச்சருடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததால், பால் உற்பத்தியாளர்கள் இன்று முதல் போராட்டத்தை தொடங்கியுள்ளனர். ஆவின் நிறுவனத்திற்கு பாலை அனுப்பப்போவதில்லை என்று பால் உற்பத்தியாளர்கள் அறிவித்துள்ளதால் பொதுமக்கள் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.
பசும்பால் லிட்டருக்கு ரூ 42 ஆகவும், எருமைப்பால் லிட்டருக்கு 51ம் வழங்க வேண்டும் என்பது தமிழக பால் உற்பத்தியாளர்களின் கோரிக்கை. அதோடு பல்வேறு கோரிக்கைகளை பால் உற்பத்தியாளர்கள் வலியுறுத்தி வந்தனர்.

இந்த விவகாரம் தொடர்பாக சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக பால்வளத்துறை அமைச்சர் நாசர், தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் நலச்சங்க நிர்வாகிகளுடன் நேற்று பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் எந்தவித உடன்பாடும் ஏற்படவில்லை. இதனால் பால் உற்பத்தியாளர்கள் இன்று முதல் ஆவினுக்கு பால் அனுப்பாமல் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்தனர்.
செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் நலச்சங்கத்தின் மாநில தலைவர் வாழப்பாடி ராஜேந்திரன், பால் கொள்முதல் விலை உயர்வு, பணியாளர்களின் பணி வரன்முறை, கால்நடை தீவனம், கால்நடைகளுக்கான இன்சூரன்ஸ் போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த அக்டோபர் மாதம் போராட்டத்தில் ஈடுபட்டோம்.
தமிழக அரசு எங்களை அழைத்து பேசி எங்கள் கோரிக்கைகள் மீது தீர்வு ஏற்படுத்தி தருவதாக உத்தரவாதம் அளித்தது. அதன்படி, பால் கொள்முதல் விலை லிட்டருக்கு 3 ரூபாய் மட்டும் உயர்த்தப்பட்டது. அதன்படி பசும்பால் லிட்டருக்கு 32 ரூபாயில் இருந்து 35 ரூபாய் ஆகவும், எருமை பால் 41 ரூபாயில் இருந்து 44 ரூபாய் ஆகவும் உயர்த்தப்பட்டது.
இந்த விலை உயர்வு 'யானைப்பசிக்கு சோளப்பொரி' போன்றதாக உள்ளது என்றும், விலை உயர்வு போதாது என்றும் அப்போதே தமிழக அரசுக்கு தெரியப்படுத்தினோம். குறைந்தபட்சம் லிட்டருக்கு ரூ.10 உயர்த்தி தரும்படி கேட்டோம். பசும்பாலுக்கு லிட்டருக்கு 42 ரூபாயும், எருமைப்பாலுக்கு 51 ரூபாயும் வழங்கும்படி கேட்டிருந்தோம். இருந்தபோதிலும் லிட்டருக்கு ரூ.3 மட்டுமே உயர்த்தி வழங்கப்பட்டது. அதே நேரத்தில் மற்ற கோரிக்கைகள் மீது எந்த தீர்வும் காணப்படவில்லை.
பால் விலை உயர்வு உள்ளிட்ட எங்களது கோரிக்கையை நிறைவேற்றக்கோரி கடந்த 1ஆம் தேதி கருப்பு பேட்ஜ் அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டோம். ஆனால், அரசு எங்கள் கோரிக்கை மீது எந்த தீர்வும் காணவில்லை. எனவே, ஆவின் நிறுவனத்துக்கு பால் வழங்குவதை நிறுத்துவதை தவிர எங்களுக்கு வேறு வழியில்லை. எனவே, 17ஆம் தேதி முதல் ஆவின் நிறுவனத்துக்கு பால் வழங்குவதை நிறுத்த முடிவு செய்து உள்ளோம். இதன்மூலம் தமிழகத்தில் இருக்கும் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்கள் மூலமாக ஆவினுக்கு இன்று முதல் பால் அனுப்ப மாட்டோம் என்று கூறியுள்ளனர்.
பால் உற்பத்தியாளர்கள் ஆவினுக்கு பாலை அனுப்பாமல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் ஆவின் பால் பாக்கெட்டுகளுக்கு தட்டுப்பாடு ஏற்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது. பால் கொள்முதல் விலையை அரசு உயர்த்தினால் விற்பனை விலையை கண்டிப்பாக உயர்த்தியே ஆக வேண்டும் என்பதால் அரசு யோசனை செய்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications