அண்ணா பல்கலை. துணைவேந்தர் சூரப்பாவிடம் அக்குவேறு ஆணிவேறாக விசாரணை நடத்தப்படும்: நீதிபதி கலையரசன்
சென்னை: ரூ280 ஊழல் முறைகேடு புகார்களில் சிக்கிக் கொண்ட அண்ணா பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் சூரப்பாவிடம் விரிவான விசாரணை நடத்தப்படும் என்று நீதிபதி கலையரசன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
ரூ280 கோடி ஊழல் முறைகேடு குற்றசாட்டுகளுக்குள்ளாகி இருக்கிறார் சூரப்பா. இது தொடர்பாக விசாரணை நடத்த நீதிபதி கலையரசன், தமிழக அரசால் நியமிக்கப்பட்டுள்ளார்.

நீதிபதி கலையரசன்
சூரப்பாவின் ஊழல் மோசடி புகார்கள் தொடர்பான விசாரணையை 3 மாதங்களில் முடிக்கவும் தமிழக அரசு நீதிபதி கலையரசன் விசாரணை ஆணையத்துக்கு அறிவுறுத்தியுள்ளது. இதனையடுத்து விசாரணை அதிகாரியாக நீதிபதி கலையரசன் பொறுப்பேற்றுக் கொண்டார்.

சூரப்பா மீது தீவிர விசாரணை
இது தொடர்பாக நீதிபதி கலையரசன் தெரிவித்துள்ளதாவது: ஆணையத்துக்கான அலுவலகம் ஒதுக்கப்பட்ட உடனே விசாரணைகள் தீவிரமாக்கப்படும். இது தொடர்பான முன்னேற்பாடுகள் முழு வீச்சில் மேற்கொள்ளப்பட்டும் வருகின்றன.

தேவைப்பட்டால் சம்மன்
சூரப்பா மீது யார் புகார் அளித்தாலும் அது பரிசீலிக்கப்படும். அந்த புகார்கள் மீது முழுமையான விசாரணை நடத்தப்படும். இந்த புகார்களில் சரியான முகாந்திரம் இருந்தால் சூரப்பாவுக்கு சம்மன் அனுப்பி விசாரணைக்கு அழைக்கப்படுவார்.

நியமனங்களில் விசாரணை
சூரப்பா மூலம் பணி நியமனம் பெற்றவர்களும் இந்த விசாரணை ஆணையத்தால் விசாரிக்கப்படுவார்கள். தேவைப்பட்டால் சூரப்பா நியமனத்துக்கு முந்தைய பணி நியமனங்களும் விசாரணைக்குட்படுத்தப்படும். இவ்வாறு நீதிபதி கலையரசன் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications