பாஜகவை தோற்கடிக்க ஒருங்கிணைந்து செயல்படுவோம்.. ஸ்டாலினை சந்தித்த பின் சீதாராம் யெச்சூரி பேட்டி
சென்னை: பாரதிய ஜனதாவை தோற்கடிக்க தேசிய அளவில் ஒருங்கிணைந்து செயல்படுவோம் என்று தமிழ்நாடு முதல்வர் மு.க ஸ்டாலினை சந்தித்த பிறகு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி கூறினார்.
வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதாவை வீழ்த்த எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரள வேண்டும் என்ற குரல்கள் ஓங்கி ஒலிக்கத் தொடங்கியுள்ளன. குறிப்பாக பீகார் முதல்வர் நிதிஷ் குமார் இதற்கான முயற்சிகளில் தீவிரம் காட்டி வருகிறார். எதிர்க்கட்சிகளின் தலைவர்களை தொடர்ச்சியாக சந்தித்து வரும் நிதிஷ் குமார் பாஜகவிற்கு எதிராக எதிர்க்கட்சிகளின் கூட்டணியை ஏற்படுத்துவது தொடர்பாக ஆலோசித்து வருகிறது.

தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவும் இதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு இருக்கிறார். இந்த நிலையில், மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரியும் இன்று முதல்வர் மு.க ஸ்டாலினை சந்தித்த பிறகு இது குறித்து பேசியிருக்கிறார். விழுப்புரத்தில் இன்று நடைபெறும் பட்டியலின, பழங்குடியின மாநாட்டில் கலந்து கொள்வதற்காக சீதாராம் யெச்சூரி இன்று சென்னை வந்தார்.

அண்ணா அறிவாலயம் சென்ற சீதாராம் யெச்சூரி முதல்வர் மு.க ஸ்டாலினை சந்தித்து பேசினார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த சீதாராம் யெச்சூரி, " தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினை மரியாதை நிமித்தமாக சந்தித்தேன். கர்நாடக தேர்தலுக்கு பிந்தைய நிலவரம் பற்றி மு.க ஸ்டாலினுடன் பேசினேன்.

தேசிய அளவில் எதிர்க்கட்சிகளை ஒன்று திரட்டி விரைவில் மாநாடு நடத்தப்படும். இந்திய அரசு அமைப்பையும் ஜனநாயகத்தையும் பாதுகாக்க மாநில அளவில் பாஜகவை ஆட்சியில் அமரவிடாமல் தோற்கடிக்க வேண்டும் .இதற்காக ஒருங்கிணைந்து செயல்பட தயராக இருக்கும் அனைத்து கட்சிகளுடனும் இணைந்து செயல்படுவோம்" என்றார்.












Click it and Unblock the Notifications