40-50 கி.மீ. வேகத்தில் சூறாவளி.. 24 மணி நேரத்தில் அடிச்சு ஊத்த போகுது மழை.. தமிழகமே ஹேப்பி
சென்னை: தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கடலோர மாவட்டங்கள், உள்மாவட்டங்கள் மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இலேசானது முதல் மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் பல்வேறு இடங்களில் ஒரு வாரமாக நல்ல மழை பெய்து வருகிறது. நேற்று சென்னை, விருதுநகர், வால்பாறை, மேட்டூடுர், நீலகிரி , திருவள்ளூர் போன்ற பகுதிகளில் பரவலாக நல்ல மழை பெய்திருந்தது.
இந்நிலையில் அடுத்த 48 மணி நேரத்தில் தமிழகத்தில் பல இடங்களில் பரவலாக மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
எல்லையில் பதற்றம்: லடாக்கில் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் நாளை ஆய்வு
கடலோர மாவட்டங்களில் மழை
இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது: "தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கடலோர மாவட்டங்கள், உள்மாவட்டங்கள் மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இலேசானது முதல் மிதமான மழை பெய்யும்.
மேலடுக்கு சுழற்சி
வெப்பச்சலனம் காரணமாக சிவகங்கை, ராமநாதபுரம் மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும். அடுத்த 48 மணி நேரத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக வடகடலோர மாவட்டங்கள், கோவை, நாமக்கல், சேலம், ஈரோடு, நீலகிரி, கரூர், தர்மபுரி, வேலூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இலேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை வானிலை
சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடனும், நகரின் சில பகுதிகளில் இலேசான முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும். சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கும்.
அருப்புக்கோட்டையில் அதிகம்
கடந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை விவரத்தை இப்போது பார்ப்போம். விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் 4 செ.மீ மழையும், சென்னை அயனாவரம், பெரம்பூரில் தலா 3 செமீ மழையும் பெய்தது. கோவை மாவட்டம் வால்பாறை, சின்னக்கலார், சோலையார் ஆகிய ஊர்களிலும், பெரம்பலூர் மாவட்டம் இறையூரிலும், சேலம் மாவட்டம் மேட்டூரிலும் தலா 2 செமீ மழையும் பெய்தது. நீலகிரி மாவட்டம் தேவலா, அவலாஞ்சி, ஆகிய ஊர்களிலும், திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு ஆகிய ஊரிலும் தலா ஒரு செமீ மழை பெய்தது.
மீனவர்களுக்கு எச்சரிக்கை
மீனவர்கள் வரும் ஜுலை 2 மற்றும் 3ம் தேதிகளில் தென்கிழக்கு மற்றும் மத்திய தென்கிழக்கு அரபிக்கடல், லட்சத்தீவு, கர்நாடகா , கோவா, மகாராஷ்டிரா கடற்பகுதிகளில் மீன்பிடிக்க செல்ல வேண்டாம். இங்கு சூறாவளி காற்று மணிக்கு 40-50கிலோமீட்டர் வேகத்தில் வீசும். இதேபோல் தென்மேற்கு மற்றும் மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் 50 முதல் 60 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசும். எனவே இந்த பகுதிக்கும் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்" இவ்வாறு அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.