காணாமல் போகும் கோடை வெயில்! தமிழகத்தில் இன்று இந்த இடங்களில் எல்லாம் மழை இருக்கு! குஷியில் மக்கள்
சென்னை: தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் இன்றைய தினம் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Recommended Video
வழக்கமாக மே மாதம் வெயிலின் தாக்கம் சற்றே அதிகமாகவே இருக்கும். அதிலும் அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்தரி வெயில் காலத்தில் வெயிலின் தாக்கம் பொதுமக்களை வாட்டி வதைக்கும்.
ஆனால், இந்த ஆண்டு வெயிலின் தாக்கம் அந்தளவு மோசமானதாக இல்லை. கத்தரி வெயில் தொடங்கிய சில நாட்களிலேயே உருவான அசானி புயல் காரணமாகப் பல இடங்களில் நல்ல மழை பெய்தது.
இதான் சம்மரா? தமிழ்நாட்டில் அடுத்த 4 நாட்களுக்கு மழை.. இன்றும் 12 மாவட்டங்களில் மழை பெய்யும்!
வானிலை
தமிழ்நாட்டில் கடந்த மே 4ஆம் தேதி அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்தரி வெயில் தொடங்கியது. வரும் மே 28ஆம் தேதி வரை இந்த கத்தரி வெயிலின் தாக்கம் தொடரும். இந்த காலகட்டத்தில் வெயிலின் தாக்கம் எப்போதும் உச்சத்தில் இருக்கும். இந்த ஆண்டு சில நாட்கள் வெயில் மிக மோசமாக இருந்தது. ஆனால், அதன் பின்னர் உருவான அசானி புயல் சில்லான வானிலையைத் தமிழ்நாட்டிற்குத் தந்தது.
மழை
இதனிடையே தெற்கு அந்தமான் கடல், நிக்கோபார் தீவுகள், தென்கிழக்கு வங்கக்கடலில் தென்மேற்கு பருவமழை நேற்று முன்தினம் (மே 15) தொடங்கியதாக இந்திய மையம் அறிவித்தது. வழக்கமாக இந்த தென்மேற்கு பருவமழை அந்தமானில் 22ஆம் தேதி தொடங்கும். ஆனால், இம்முறை ஒரு வாரத்திற்கு முன்னதாகவே இந்த பருவமழை தொடங்கி உள்ளது. இதனால் தமிழ்நாட்டில் பரவலாக மழை பெய்யும் வாய்ப்புகள் அதிகம் என்று கூறப்பட்டுள்ளது.
இன்றைய வானிலை
இன்றைய தினம் தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, ஈரோடு, சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, கரூர், திருச்சி, திருவண்ணாமலை மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
நாளை எப்படி
அதேபோல நாளை தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, ஈரோடு, சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, கரூர், திருச்சி, திருவண்ணாமலை மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னை
சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கக்கூடும் என்று தெரிவித்துள்ளது.