வீக் எண்ட் பார்ட்டி... போதைக்கு அடிமையாகும் இளைய தலைமுறை - கொத்துக்கொத்தாக கைது
கோவை, பொள்ளாச்சி, சென்னை, ஆரோவில் என பல பகுதிகளிலும் போதைக்கு அடிமையாகும் மாணவர்கள், ஐடி ஊழியர்கள் சிக்கியுள்ளனர். வார விடுமுறை நாட்களில் இதுபோன்ற பார்டிக்கு செல்லும் கலாச்சாரம் அதிகரித்து வருகிறது.
Recommended Video
சென்னை: விழுப்புரம் அருகே முந்திரிக்காட்டில் 80 இளம்பெண்களுடன் அரைபோதை மயக்கத்தில் ஆபாச நடனம் ஆடிய ஐடி ஊழியர்கள், மாணவர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
கடந்த மாதம் சென்னையிலும் பொள்ளாச்சியிலும் கெஸ்ட் ஹவுஸ், ரிசார்ட்களில் மது போதையில் கூத்தடித்த கல்லூரி மாணவர்கள் கைது செய்யப்பட்டனர். இந்த மாணவர்களுக்கு சர்வதேச கொகேன் கும்பலுடன் தொடர்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த அதிர்ச்சி சம்பவம் விலகும் முன்பாக விழுப்புரம் அருகே மாணவர்கள் போதையில் ஆபாச நடனம் ஆடியதாக கைது செய்யப்பட்டுள்ளனர்.
சமீபகாலமாக மாணவர்களிடையே போதை கலாச்சாரம் அதிகரித்து வருவது சமூக ஆர்வலர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. வீக் எண்ட் பார்ட்டி என்ற பெயரில் ஒன்று கூடி மது, மாது, போதை என சீரழிந்து வருகின்றனர்.
இலங்கை ஐ.எஸ்.ஐ.எஸ். தாக்குதல்கள்- கோவையில் பல இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் அதிரடி சோதனை
போதை பார்ட்டி
பொள்ளாச்சியை சுற்றி ஏராளமான விவசாய நிலங்கள் உள்ளன. சினிமாக்காரர்கள் படம் எடுக்க பொள்ளாச்சியில் குவிந்த காலங்கள் உண்டு. இன்று சரியான மழை இல்லாமல் விவசாயம் படுத்துவிட்டது. பணத்திற்கு ஆசைப்பட்டு ஒரு சிலர் தோட்டங்களை சட்டவிரோத செயல்களுக்கு பயன்படுத்தி வருகிறார்கள். கோவையில் படித்து வரும் 150க்கும் மேற்பட்ட மாணவர்கள் மது மற்றும் கஞ்சா மாத்திரை உள்ளிட்ட போதைப் பொருட்களை உபயோகித்துவிட்டு, போதையில் இரவு முழுவதும் ரகளையில் செய்யவே, அக்கம் பக்கத்து தோட்டத்து விவசாயிகள் போலீசில் புகார் அளித்துள்ளனர்.
சட்ட விரோத பார்ட்டி
இதனையடுத்து அக்ரி நெஸ்ட் என்ற பெயரில் செயல்பட்டு வந்த ரெசார்டில் 150க்கும் மேற்பட்ட மாணவர்களை போலீசார் கைது செய்தனர். போலீசாரின் ஆய்வில் அவர்கள் அனைவரும் போதை பொருட்களை உட்கொண்டதாகத் தெரியவந்தது. கைதான மாணவர்கள் அனைவரும் கோவையில் உள்ள வெவ்வேறு கல்லூரியில் படிக்கும் வசதி படைத்த குடும்பத்தைச் சேர்ந்த மாணவர்கள் என்றும் பலர் கேரளாவைச் சேர்ந்தவர்கள் என்றும் கூறப்படுகிறது.
சர்வதேச போதைக்கடத்தல் கும்பல்
கைதான மாணவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் கொகேன் போதைப் பொருளை உபயோகித்ததாகவும் எனவும் சர்வதேச கொகேன் கும்பலுடன் இவர்களுக்கு தொடர்பு இருக்கலாம் எனவும் சந்தேகம் எழுந்துள்ளது. இது குறித்து போலீசார் விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.
ஐடி மாணவர்கள் சிக்கினர்
கடந்த மாதம் கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள பிரபல விடுதியில், முன்பதிவு செய்து சட்டவிரோதமாக நடைபெற்ற மது, போதை விருந்து நடைபெறுவதாக காஞ்சிபுரம் காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. அங்கு நடைபெற்ற சோதனையில் கஞ்சா உள்ளிட்ட சட்டவிரோதமான போதை பொருட்கள் இரவு விருந்தில் கைப்பற்றபப்ட்டது. மேலும், அந்த விருந்தில் பங்கேற்க ஆன்லைனில் முன்பதிவு செய்ததும் தெரியவந்தது. இந்த விருந்தில் பங்கேற்ற 7 பெண்கள் உட்பட 160 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்கள் ஐடி ஊழியர்கள் என்பது தெரியவந்தது.
ஐடி ஊழியர்கள்
இரு தினங்களுக்கு முன்பு விழுப்புரம் மாவட்டம் ஆரோவில் அடுத்த ஆலங்குப்பத்தில் உள்ள முந்திரி தோப்புக்குள் மதுபோதையில் இளம்பெண்களுடன் சிலர் ஆபாச நடன நிகழ்ச்சி நடத்தி வருவதாக போலீசாருக்கு தகவல் வந்தது. சோதனை நடத்திய போலீசார், 80க்கும் மேற்பட்டவர்களை சுற்றி வளைத்தனர். மாணவர்கள் நலன் கருதி அவர்களிடம் விசாரணை நடத்தி விட்டு விட்டனர். 15 பேரை கைது செய்த போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். பெட்ரோமாக்ஸ் வெளிச்சத்தில் கஞ்சா விற்பனை செய்த கும்பலையும் கைது செய்தனர்.
பெற்றோர்கள் கண்காணிப்பு
கஞ்சா மற்றும் போதைப் பொருட்களை உபயோகிப்பதால், மாணவர்களின் இளமைத் தோற்றம் சிதைந்து, சிறு வயதில் முதுமைத் தோற்றத்துடன் காணப்படுவர். சிந்திக்கும் ஆற்றலையும் இழந்து விடுவர். மனநிலையும் பாதிக்கப்படும். மற்றவர்களைப்போல சராசரி வாழ்க்கையை வாழ முடியாது. திருமண வாழ்க்கையையும் இழக்க நேரிடும். பெற்றோர், தங்கள் பிள்ளைகளைக் கண்காணிக்க வேண்டும். விடுதிகளில் தங்கியுள்ள மாணவர்களை, கல்லூரி நிர்வாகங்கள் காப்பாளர்கள் மூலமாக தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.
கஞ்சா விற்பனைக்கு, பெரியவர்களைக் காட்டிலும், கல்லூரி மாணவர்களை அணுகுவது எளிது. எதையும் அனுபவிக்கத் துடிக்கும் இள வயது, செல்போன் உள்ளிட்ட நவீனத் தொழில்நுட்பம் உள்ளிட்டவை இதற்கு துணைபுரிகின்றன. மாணவர்களுடன் கலந்து கல்லூரிக்குள் நுழைந்து, சிகரெட், மதுப் பழக்கத்துக்கு உள்ளான மாணவர்களை அடையாளம் காண்கின்றனர். பின்னர் அவர்களை அணுகி கஞ்சா பழக்கத்தை அறிமுகப்படுத்துகின்றனர். இதற்குப் பழக்கமான மாணவர்களையே, ஆசை வார்த்தைகூறி ஏஜென்டுகளாகவும் மாற்றி விடுகின்றனர். அந்த மாணவர் மூலம் மேலும் பல மாணவர்களை வாடிக்கையாளர்களாக்கிக் கொள்கின்றனர். கஞ்சா மட்டுமின்றி, கொகைன், ஹெராயின் என பல போதைப்பொருட்கள் கோவையில் எளிதில் விற்பனை செய்யப்படுகின்றன.