இவிஎம் முறைகேடு புகார்.. ஸ்ட்ராங் ரூம் விரைந்த மம்தா பானர்ஜி.. மேற்கு வங்கத்தில் ஓயாத டென்ஷன்
கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் வாக்குப்பதிவு முடிந்த நிலையில், இவிஎம் இயந்திரங்களை மாற்றி பாஜகவிற்கு சாதகமாக செயல்பட சதி நடப்பதாக திரிணாமுல் காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது. இது தொடர்பாக அக்கட்சியினர் ஸ்ட்ராங் ரூம் முன்பு தர்ணாவிலும் ஈடுபட்ட நிலையில், மம்தா பானர்ஜி தனது சொந்த தொகுதி பவானிபூரில் உள்ள ஸ்ட்ராங் ரூமுக்கு நேரில் சென்றார்.
மேற்கு வங்க சட்டசபை தேர்தலில் இரண்டு கட்டமாக நடைபெற்ற வாக்குப்பதிவு ஏப்ரல் 29- ஆம் தேதியுடன் முடிந்தது. வாக்கு எண்ணிக்கை வரும் 4 ஆம் தேதி நடைபெறுகிறது. வாக்குப்பதிவு இயந்திரங்கள் மாநிலம் முழுவதும் பலத்த பாதுகாப்புடன் ஸ்ட்ராங் ரூமில் வைக்கப்பட்டுள்ளன. இதற்கிடையே, ஸ்ட்ராங் ரூமில் வைக்கப்பட்டுள்ள இவிஎம் இயந்திரங்கள் எதிர்க்கட்சிகளுக்கு தெரியாமல் திறக்கப்பட்டதாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் ஷாஷி பனஜா மற்றும் குணால் கோஷ் ஆகியோர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அனுஷிலன் கேந்திரா பள்ளியில் உள்ள ஸ்ட்ராங் ரூம் முன்பாக இந்த போராட்டம் நடைபெற்றது. ஆனால் திரிணாமுல் காங்கிரசின் குற்றச்சாட்டை நிராகரித்த பாஜக, அது முற்றிலும் வதந்தி என்றது. இந்த பரபரப்புக்கு இடையே, தனது சொந்தத் தொகுதியான பவானிபூரில் உள்ள ஷகாவத் மெமோரியல் உயர்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள ஸ்ட்ராங் ரூமிற்கு மம்தா பானர்ஜி நேரில் சென்றார். அங்குள்ள ரிஷப்ஷன் அறைக்கு சென்ற மம்தா பானர்ஜி சுமார் மூன்று மணி நேரம் அங்கேயே இருந்து ஆய்வு செய்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மம்தா பானர்ஜி, வாக்குப்பதிவு இயந்திரத்தில் ஏதேனும் முறைகேடு செய்ய நினைத்தால் என் வாழ்நாள் முழுவதும் போராடுவேன். "எங்களிடம் உள்ள அனைத்து சக்தியையும் பயன்படுத்தி போராடுவோம்; அதற்காக எங்கள் உயிரையே பணயம் வைக்க வேண்டியிருந்தாலும் தயங்கமாட்டோம்" என்றார்.
முன்னதாக சமூக வலைத்தளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்ட மம்தா பானர்ஜி "வாக்கு எண்ணும் மையங்களைக் கண்ணும் கருத்துமாகப் பாதுகாக்க வேண்டும். இயந்திரங்களை மாற்றத் திட்டமிடப்பட்டுள்ளது, இதை எளிதாக எடுத்துக் கொள்ளாதீர்கள் என்றார். பவானிப்பூர் தொகுதியில் மம்தாவை எதிர்த்து பாஜக சார்பில் சுவேந்து அதிகாரி போட்டியிடுவது கவனிக்கத்தக்கது.













Click it and Unblock the Notifications