"அடுத்த ரவுண்ட் ஸ்டார்ட்.!" கொட்ட போகுது கனமழை.. எந்த மாவட்டங்களில் தெரியுமா! குடையை மறக்காதீங்க
சென்னை: தமிழ்நாட்டில் வரும் நாட்களில் பல்வேறு இடங்களில் கனமழை கொட்டி தீர்க்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த ஏப்ரல் மாதம் தொடங்கிய வெயில் இம்மாத தொடக்கம் வரையிலும் கூட நீட்டித்தது. இந்த மாதம் முதல் இரண்டு நாட்களில் பல முறை வெப்பம் 100 டிகிரியை தாண்டியிருந்தது.
அதன் பின்னர் சட்டென மாறிய வானிலையால் பல இடங்களில் நல்ல மழை பெய்தது. குறிப்பாகத் தலைநகர் சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களிலும் கணிசமான அளவுக்கு மழை பெய்யவே செய்தது.

வானிலை மையம்: வெப்பம் இப்போது குறைந்துள்ள நிலையில், மாநிலத்தில் பல இடங்களில் மழை பெய்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களிலும் காரைக்காலில் லேசான மழையும் புதுச்சேரியில் மிக லேசான மழையும் பெய்துள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதிகபட்சமாகத் தாம்பரத்தில் 60 மிமீ மழை பதிவாகியுள்ளது. அதிகபட்ச வெப்பத்தைப் பொறுத்தவரை மதுரையில் 103.64 பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது.
தெற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் வளி மண்டல சுழற்சி நிலவுகிறது. மேலும் மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று (ஜூன் 30) தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நாளை (ஜூலை 1) தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
அதேபோல நாளை மறுநாள், ஜூலை 2ஆம் தேதி தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
மழை எங்கே: மேலும், ஜூலை 3ஆம் தேதி தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். திருவள்ளூர், காஞ்சிபுரம், நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிகக் கனமழையும், திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு மற்றும் சென்னை மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
வரும் ஜூலை 4ஆம் தேதி தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிகக் கனமழையும், திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, திருப்பத்தூர், வேலூர், இராணிப்பேட்டை, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
சென்னை கிளைமேட்: தலைநகர் சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான /மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸை ஒட்டியே இருக்கக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications