தென் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு... வானிலை ஆய்வு மையம் தகவல்
சென்னை: மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் தென்மேற்கு பருவக்காற்று காரணமாக லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நீலகிரி, தேனி, திண்டுக்கல், கோவை, திருப்பூர், நெல்லை ஆகிய மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளது.
வெப்ப நிலையை இயல்பு நிலையில் இருப்பதால் வெப்பச்சலனத்தால் மழைக்கு வாய்ப்பு இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் மழைக்கான வாய்ப்பு இல்லை என்றும் கூறப்பட்டுள்ளது.
தென் மேற்கு மற்றும் மத்திய வங்கக் கடல் பகுதிகளில் மீனவர்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை திரும்பப்பெறப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் நீலகிரி மாவட்டம் தேவாலாவில் 6 சென்டிமீட்டரும், தேனி மாவட்டம் பெரியாறில் 4 சென்டிமீட்டரும், கோவை மாவட்டம் வால்பாறையில் 2 சென்டிமீட்டரும், நெல்லை மாவட்டம் பாபநாசத்தில் 1 சென்டிமீட்டரும், மழை பதிவாகியுள்ளது.
முன்னதாக, தென் மேற்கு, மத்திய வங்கக் கடல் பகுதியில் தென் மேற்கு திசையில் மணிக்கு 40ல் இருந்து 50 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும் என்பதால் தென்மேற்கு, மத்திய வங்கக்கடல் பகுதிக்கு மீனவர்கள் அடுத்த 24 மணி நேரத்திற்கு செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தென் மாவட்டங்களில் காற்றின் வேகம் அதிகரித்துள்ளது. இதனால் விவசாயிகள் கலக்கமடைந்துள்ளனர்.