ஹலோ டிஎன்பிஎஸ்சியா.. ரிசல்ட் எப்ப சார் வரும்? #WeWantGroup4Results ட்விட்டரில் டிரெண்டாவது ஏன்?
குரூப் 4 தேர்வுகள் எழுதி முடித்து 8 மாதங்களாகியும் முடிவுகள் வெளியாகததால் அவதிக்குள்ளாகி இருக்கும் மாணவர்கள் ட்விட்டரில் இணைய வழி போராட்டத்தை தொடங்கி இருக்கின்றனர்.
சென்னை: குரூப் 4 தேர்வு முடிவுகளை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட காலம் தாழ்த்தி வரும் நிலையில் #WeWantGroup4Results என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் டிரெண்டாகி வருகிறது. ஒன்றரை லட்சத்துக்கும் அதிகமான ஹேஷ்டேக்குகள் இதுவரை டிரெண்டாகி வரும் நிலையில் இதற்கான காரணம் என்ன என்பது குறித்து பேசுவோம்.
டிஎன்பிஎஸ்சி எனப்படும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தமிழ்நாடு அரசுத் துறைகளில் உள்ள நான்காம் தொகுதி பணிகளுக்கான குரூப் 4 தேர்வுகள் சுமார் 8 மாதங்களுக்கு முன் நடைபெற்றன.
ஆனால், அந்த தேர்வுகளுக்கான முடிவுகள் இதுவரை வெளியிடப்படவில்லை. பிப்ரவரி மாதம் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அதற்கான அறிவிப்பு வராதது மாணவர்களிடையே கவலையை ஏற்படுத்தியது.

குரூப் 4 தேர்வு
தமிழ்நாடு அரசு துறையில் கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர் உள்ளிட்ட 11 வகையான பணிகளுக்கு 7,301 பேரை தேர்வு செய்வதற்கான குரூப் 4 தேர்வு, கடந்த 2022 ஆண்டு மார்ச் மாதம் 30 ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. கடந்த ஜூலை 24 ஆம் தேதி தேர்வு நடைபெற்ற நிலையில் அதன் முடிவுகள் கடந்த அக்டோபர் மாதம் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

எதுவுமே நடக்கவில்லை
ஆனால், இதுவரை முடிவுகள் வெளியாகவில்லை. ஜனவரி மாத இறுதியில் தான், நியமனம் செய்யப்பட வேண்டிய குரூப் 4 பணியிடங்களின் எண்ணிக்கை 9801 ஆக உயர்த்தப்படுவதாகவும், பிப்ரவரி மாதம் முடிவுகள் அறிவிக்கப்படும் என்றும் டிஎன்பிஎஸ்சி அறிவித்தது. ஆனால் பிப்ரவரி மாதமும் கடந்துவிட்டது.

இந்த ஆண்டுதான் தாமதம்
தேர்வுக்காக அறிவிப்பு வெளியிடப்பட்டு ஓராண்டு நிறைவடைய உள்ள நிலையில், இன்னும் போட்டித் தேர்வு முடிவுகள் கூட வெளியிடப்படாதது மாணவர்களை கவலை அடைய செய்துள்ளது. 2014 ஆம் ஆண்டுக்கு பிறகு 6 முறை நடைபெற்ற குரூப் 4 தேர்வுகளின் முடிவுகள் 5 மாதங்களுக்குள்ளாகவும் வெளியிடப்பட்டிருக்கின்றன.

8 மாதங்களாகிவிட்டது
ஆனால், 2022 தேர்வு முடிவுகள் தான் 7 மாதங்களாகியும் வெளியிடப்படவில்லை. குரூப் 4 தேர்வுகளை எழுத 22 லட்சத்திற்கும் கூடுதலானவர்கள் விண்ணப்பத்தினர். அவர்களில் 18.50 லட்சத்திற்கும் மேற்பட்டோர் இந்த தேர்வை எழுதினார்கள். இதற்கு மத்தியில் கடந்த மாதம் குரூப் 2 தேர்வுகளும் நடந்து முடிந்துவிட்டது.

ஹேஷ்டேக்
குரூப் 4 தேர்வு முடிவுகளை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் உடனடியாக வெளியிட வேண்டும் என்று பல மாதங்களாக கோரிக்கை விடுத்து வந்தனர் தேர்வர்கள். இப்படிப்பட்ட சூழலில் பொறுத்து பொறுத்து பார்த்த தேர்வர்கள் இன்று கொத்திப்போய் ட்விட்டரில் காலை முதல் #WeWantGroup4Results என்ற ஹேஷ்டேக்கை இதுவரை 1.8 லட்சத்துக்கும் அதிகமானோர் பதிவிட்டு டிரெண்ட் செய்து வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications